Thursday 3 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.10

பாடல் : 10
மாயவன் பின்வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு
அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத்
தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார்
தூமணி வண்ணற்கா ளாரே.

விளக்கம் : 

மாயவன் பின்வழி சென்று - மாயவன் கண்ணன் உடன் பின்னே சென்று
வழி இடை மாற்றங்கள் கேட்டு - செல்கின்ற  வழி இடையில்  அவன் சொல்கின்ற பேச்சுக்கு மாற்றில்லாமல் சொன்னது எல்லாம் கேட்டு

ஆயர்கள் சேரியிலும் புக்கு - ஆயர்கள் கூடி வாழும் சேரியிலும் புகுந்து
அங்குத்தை மாற்றமும் எல்லாம்  - அங்கிருக்கும்  ஆட்கள் சொல்வதையும் எந்த மறுப்பும் இல்லாமல் கேட்டு
தாயவள் சொல்லிய சொல்லைத் -வாழ்கின்ற மகள் பற்றி ,  தாயவள் சொல்லிய சொல்லைத்
தண் புதுவைப் பட்டன் சொன்ன - குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் - தூய தமிழ்ப் பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர்கள்
தூமணி வண்ணற்கு ஆளாரே - தூய்மையான மணி வண்ணனுக்கு ஆளாவார்கள்..(அவனுக்கு நெருக்கமாவார்கள் )

மாயவன் கண்ணன் பின் சென்று ,செல்லும் வழியில் எல்லாம் அவன் சொன்ன சொல்லை எந்த மறுப்பும் இன்றி அதற்கு ஒரு மாற்று பேச்சு பேசாமல், ஆயர்கள் சேர்ந்து வாழ்கின்ற சேரிக்கு சென்று (சேர்ந்து வாழ்கின்ற இடம் சேரி..) அங்குள்ளவர்கள் பேச்சுக்களுக்கும் மறுப்பின்றி கேட்டு நடக்கின்றாள் ஆண்டாள். (அவள் பிடிவாதம் அழுத்தம் எல்லாம் கண்ணனைச் சேர்வதற்காக மட்டுமே ஆனால் கண்ணனுக்கு அடங்கிய மனைவி அவன் ஆளுமையை ரசித்து விரும்புகின்ற மனைவியே )
இப்படி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்றெல்லாம் அம்மாவின் கவலைப் பேச்சுக்களைக் கேளாத மகள் பற்றி, குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெரியாழ்வார்  தாயாக தன்னை நினைத்துச் சொன்ன , தூய தமிழ்ப்  பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் ,தூய்மையான அந்த மணி வண்ணனுக்கு ஆள் ஆவார்கள்..அவனின் அன்பைப் பெற்று நெருக்கமானவர்கள் ஆவார்கள்.

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் உள்ள எட்டாம்பகுதி இனிதே நிறைவுற்றது!!!
மகளுக்காக, ஒரு தாயுமானவராக பெரியாழ்வார் எழுதிய இருபது பாடல்களும் இனிதே நிறைவடைந்தன. மகள் மீதான அன்பும் வாஞ்சையும் தோய்ந்த பாசுரங்கள் உங்கள் மனத்தையும் மயக்கி இருக்கும் என நம்புகிறேன்.
படித்தமைக்கு நன்றி !


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!