Saturday 29 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.08

பாடல் : 08

குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொலோ.

விளக்கம் :
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் - நற் குடியில் பிறந்தவர்கள் செய்யும் குணம் ஒன்றும் இல்லை அதற்குத் தக்க செயல்கள் செய்யாதவன்
அந்தோ நடை ஒன்றும் செய்திலன் - அந்தோ..உலகத்து நடைமுறை என ஒன்று உண்டு அதை எதுவும் செய்யாதவன்
நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நங்கையே ..நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க - இடை இருபக்கமும் வளைய
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி - உடம்பு இளைத்து இளைத்து என் மகள்   ஏங்கி கடைய  கயிற்றைப்பற்றி
வாங்கிக்கை தழும்பு ஏறிடும் கொலோ - இழுத்ததில் கைகளில் தழும்பு ஏறிடுமோ ?

பெரியாழ்வாரோ வேள்வி செய்யும் தொழில் கொண்டவர். ஆனால் கண்ணனோ ஆயர் குலம் . இப்படி சாதி விட்டு சாதி மணம் ஆண்டாளுக்கு. நம்ம சாதி வழக்கப்படி எதுவும் செய்யாம பொண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் கண்ணன். நடைமுறைச் சடங்குகள் எதுவும் செய்யல .
நங்கையே..நந்தகோபன் மகன் கண்ணனுக்கு வாக்கப்பட்ட என் மகளானவள் அவங்க வீட்டிலே ,தயிர் கயிறை இழுத்து இழுத்து கடையும் போது , அவளின் இடைகள் வளைந்து துவள, கைகள் கயிறை இழுத்ததில் தழும்பு ஏறி விடுமோ? (வேலை செய்தே பழக்கம் இல்லாதவங்க புதுசா ஒரு வேலையைச் செய்யும்போது கைல காப்பு வந்துடும்..அங்கங்க தழும்பு ஆகிடும்..ஒத்த மகள் என்று பெரியாழ்வார் ரொம்பச் செல்லமா வளர்த்துட்டார். புகுந்த வீட்டில் புதுசா வேலை செய்யப் போய்,  புள்ள என்ன பாடுபடுதோ..இடை இளைக்குமோ , கை தழும்பு ஏறுமோன்னு மனசு விசனப்படுது அவருக்கு.

Friday 28 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.07

பாடல் : 07

அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொலோ.

விளக்கம் :

அண்டத்து அமரர் பெருமான் - இப்பேரண்டத்தின் பெருமான் ,  அமரர்களுக்கு எல்லாம் தலைவனான எம்பெருமான்
ஆழியான் இன்று என் மகளை - ஆழியைக் கொண்ட ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் - பண்டங்களைக் குறை சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பரிசுகள் கெடும்படி ஆள்வானோ ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து - அவளை அவன் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பம் நடத்தி
கோவலப் பட்டம் கவித்து - அவளுக்கு  கோவலர் தலைவி  என்ற பட்டம் கொடுத்து நல்லபடியாக நடத்துவானோ
பண்டை மணாட்டிமார் முன்னே - அன்றி ,  அவன் அவளுக்கு முன்னால் கட்டிய மனைவிமார் முன்னே
பாதுகாவல் வைக்கும் கொலோ - பத்தோடு பதினொன்று என்று பேசி  அவளை வெறுமனே பாதுகாவல் வைத்து விடுவானோ ?

இப்பேரண்டத்தின் பெருமான் ,அமரர் தலைவன் ,ஆழிச் சக்கரம் கொண்ட திருமால் ,இன்று என் மகளை எப்படி வைத்திருப்பானோ? பண்டம் (உணவு ) .அவள் சமைக்கும் உணவுகளைக் குறை சொல்லி அவன் திட்டுவானோ? (வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரே பெண் .சமையல் முன்னப்பின்ன இருக்கும். அதுக்கு எவ்ளோ திட்டு வாங்குகிறாளோ பாவம் )
அவளைச் சிறப்புடன் நடத்தாமல் வெறும் பெண்டாட்டியாக மட்டுமே நடத்துவானோ ?
கொண்டு செலுத்துதல் என்ற சொல்லாடல் இன்றும் என் அம்மா சொல்வதுண்டு. ஓர் செயலை நல்லபடியாக நடத்துதலை அப்படி,கொண்டு செலுத்துதல் என்பார்கள். அது போல ஆண்டாளைக் கட்டிக்கொண்டு போய் நன்கு கொண்டு செலுத்துவானோ?குடி வாழ்ந்து அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து அவளை நடத்துவானோ அன்றி அவனுக்கு இதற்கு முன் உள்ள மற்ற மனைவிமார்கள் முன்னே , இவளும் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக நடத்தி ,அவளைக் காவலாக வைப்பானோ ?
(எவரேனும் வீட்டில் தேவை இல்லாமல் இருந்தால் இது எதுக்கு எனும் கேள்வி எழும் போது ஆங்..காவலுக்கு என்று நக்கலாக இன்றும் பதில் அளிப்போரைக் காணலாம்..அது போல இப்பெண்ணைத் திருமணம் செய்து முறையாக குடும்பம் நடத்துகிறானோ அல்லது அங்கே சிறுமைப்படுத்துகிறானோ என்று மருமகன் மீது அச்சம் கொள்கிறார் )


Thursday 27 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.06

பாடல் : 06
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா
கைப்பற்றுங் கொலோ.

விளக்கம் :
வேடர் மறக் குலம் போலே - வேட்டை ஆடும் வேடர் வீரக் குலம் போல
வேண்டிற்றுச் செய்து என் மகளை - விரும்பியபடி  எல்லாம் செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு குடி வாழும் கொலோ - கூட்டமாக கூடி அழைத்து அத்தோடு மட்டுமே குடி வைத்துக் கொண்டு வாழ்க்கை  வாழ்வானோ ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து  - இந்த நாடும் அதிலுள்ள மக்களும் அறிய நல்லபடியாக திருமணம் செய்து
சாடி இறப்  பாய்ந்த பெருமான் -  எதிரிகளைச் சாடி வெல்லும் பெருமான்
தக்கவா கைப்பற்றும் கொலோ - அவளைத் தக்கவாறு கைப்பற்றுவானோ ?

மாடு மேய்ப்பவன் எப்படி மறவன் ஆனான் என்ற குழப்பம் வேண்டாம்..அக்காலத்தில் ஆநிரை காப்போர் என்று உண்டு.எதிரிகளிடம் இருந்து தங்கள் மாடுகளைக் காப்பவர்கள்.அப்படியான  வீர மறவர் குலத்தில் , திருமணம் என்பது எப்படி நடக்குமோ..தாங்கள் விரும்பியபடி , கூட்டமாக கூடி நின்று வரவேற்று ஏதேனும் ஓர் இடத்தில் குடி வைத்தாலே முடிந்தது என்று முடித்து விடுவார்களோ ?
ஆனா நம்ம வழக்கம் அப்படி இல்லையே..(ஆண்டாள் தன்னை மாடு மேயப்பவள் எனச் சொல்லிக் கொண்டாலும் வளர்த்தவர் பெரியாழ்வார் இல்லையா..ஆகவே அவர் தன் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்..ஆண்டாள் வாரணம் ஆயிரம் பாடலில் ஆசைப்படுவாளே அது போல..)
ஊரறிய நாடறிய வந்து, முறைப்படி  பெண் கேட்டு இப்படி நல்லதோர் கல்யாணம் செய்ய வேண்டுமே..எதிரிகளைச் சாடி ,அவர்கள் இற வெல்லும் பெருமான் அவளைத் தக்கவாறு (அவளின் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக )  அவளைக் கைப்பிடிப்பாரோ ?
ஆண்டாள் சொல்வாளே..
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..

அப்படியாக என் மகளை எங்கள் சம்பிரதாய சடங்கு வழக்கப்படி அந்தப் பெருமான் திருமணம் செய்வானோ? என்று ஏங்குகிறார்..


Tuesday 25 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.05

பாடல் : 05

தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னுங் கொலோ.

விளக்கம் :
தம்மாமன் நந்தகோபாலன் - யசோதை ,  தம் மாமனான நந்தகோபாலனுடன்  இணைந்து வரவேற்று
தழீஇக் கொண்டு என் மகள் தன்னை - கோதையை  அன்போடு  ஆரத் தழுவிக்கொண்டு,  என் மகள் தன்னை
செம்மாந்து இரு என்று சொல்லிச் -   மன தைரியத்தோடு இரு எனச் சொல்லி
செழுங்கயர் கண்ணும் செவ்வாயும் - அழகிய மீன் போன்ற கண்ணும் சிவந்த இதழ்களும்
கொம்மை முலையும் இடையும் - திரண்ட முலையும் அழகிய இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு - பரந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும் கண்டுவிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர் - இப்பேர்ப்பட்ட மகளைப் பெற்ற தாய்
இனித் தரியார் என்னும் கொலோ - இனி இவளைப் பிரிந்து உயிர் தாங்கி இருக்க மாட்டாள் என்று சொல்வார்களோ ?

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடல் வருகின்றது.. யசோதை தன் மகளிடம் எப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என பெரியாழ்வார் நினைத்தாரோ அதை இப்பாடலில் யசோதை செய்தது போன்ற எண்ணத்தில் வருகிறது இப்பாசுரம்.
கணவரை மாமா என்றழைக்கும் பழக்கம் உண்டு (என் அம்மா இவ்வழியே :) )
ஆகவே யசோதை ,தம் மாமனான நந்தகோபாலனோடு ,மருமகள் கோதையை வரவேற்கும் விதமாக , அவளை ஆரத் தழுவிக் கொண்டு, புது இடத்தில் அச்சத்துடனும் மிரட்சியுடனும் தலை குனிந்து நின்றிருக்கும் கோதையை செம்மாந்து இரு எனச் சொல்லி (அச்சம் தவிர் நிமிர்ந்து நில் என்று சொல்லி )
(புது இடத்தில் அன்னியமாக உணரும் பெண்ணை இது உன் வீடு இயல்பாக இருக்க வைக்க ஆசுவாசம் செய்தல் ) அவளை நன்கு உற்று நோக்குகிறார் யசோதை. தன் மகனுக்குப் பொருத்தமான பெண்ணாக அவள் இருக்கிறாளா (சோடிப் பொருத்தம் பார்ப்பாங்களே...) அழகில் எப்படி இருக்கிறாள் ?
அழகிய மீன் போன்ற கண்கள் ,சிவந்த இதழ்கள், திரண்ட முலைகள் ,குறுகிய இடை என்று அழகில் ஓர் குறை சொல்ல முடியாத படி இருக்கும் மருமகளைக் கண்டு, இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பிரிந்து அவளின் தாயார் அங்கு எங்ஙனம் உயிர் தரித்து இருக்கிறாளோ, பிரிவாற்றாமை கொண்டு வாழ்வாளோ மாட்டாளோ என்று தன் சம்பந்தி பற்றிக் கவலை கொள்கின்றாள்..







Saturday 15 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.04

பாடல் : 04

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.

விளக்கம் :

ஒருமகள் தன்னை உடையேன் - ஒருமகள் எனக்கு இருக்கிறாள்
உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் - உலகம் நிறைந்த புகழ்பெற்ற திருமகளைப் போல அவளை வளர்த்தேன்
செங்கண்மால்  தான் கொண்டு போனான் - அவளை செம்மையான கண்களை உடைய மாலவன் தன்னோடு கொண்டு போனான்
பெருமகளாய் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை - ஆயர் குடிக்கே பெருமகளாக வாழ்ந்து பெருமை மிக்க பிள்ளையைப் பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ - மருமகளான என் மகளைக் கண்டு விரும்பி மகிழ்ந்து ,மருமகளாக ஏற்று குடித்தனம் வைப்பாளோ ?

அழகான பாசுரம் இது. முந்தைய பத்துப் பாடல்களில் காறை  பூணும் பாடலும், இந்த ஒரு மகளை உடையேன் பாடலும் தான் மிக ஈர்த்து, இந்த இருபது பாடல்களை எழுதத் தூண்டியவை. மகளுக்காக தாய் உரை செய்தது போல அவர் எழுதி இருந்தாலும் அந்தத் தகப்பன்சாமியின் அன்பு நிறைவாகத் தெரிந்தது எனக்கு .
ஒரு மகளை உடையவன் நான். அவளே என் உடைமை. (தட் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு மொமென்ட் )  திருமகள் என்றால் அறியாதோர் இலர். அப்பேர்ப்பட்ட திருமகளைப் போல அவளை நான் வளர்த்தேன். (என் வீட்டு மகாலட்சுமி ஐயா கோதை )
செம்மையான கண்களை உடைய திருமால் என் வீட்டுத் திருமகளை, தான் கொண்டு போனான்.
அவனுடைய அம்மா ஆயர் குடிக்கே பெருமகள் . பெரும் பிள்ளை பெற்றவள் பின்னே அந்த கண்ணனுக்கே அம்மா என்றால் சும்மாவா..ரொம்பப் பெரிய்ய்ய்ய ஆளு. (வளர்த்தவள் என்று சொல்லி யசோதையை சிறுமைப்படுத்திட முடியாது .ஏன்னா பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் அதிகம். அதனால் அவளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது )
என் பொண்ணுக்கு மாமியார். மணாட்டுப் பெண் -மருமகளை நல்லபடியா பார்த்துக்குவாளா ..அவளை விரும்பி ஏற்று கண்ணன் கூட குடித்தனம் நடத்த விடுவாளா?(சம்பந்தகாரம்மா மேல பயம் +மரியாதை .
அதனால் வலிய இந்தப் பாசுரத்தில் யசோதையை கொலுவீற்றுகிறார் பெரியாழ்வார்.

Wednesday 12 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.03

பாடல் : 03
குமரி மணம்செய்து கொண்டு
கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொலோ.

விளக்கம் : 

குமரி மணம் செய்து கொண்டு -
இவள் தான் பெண் என்ற மண உறுதி செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி - அழகாக அலங்கரித்து நற் கோலத்தில் இல்லத்தில் அமர வைத்து
தமரும் பிறரும் அறியத் தாமோதரருக்கு என்று சாற்றி - உற்றோரும் மற்றோரும் அறிய இவள் அந்தக் கண்ணபிரானுக்கே தாமோதரனுக்கே என்று அறிவித்து
அமரர் பதி உடைத் தேவி அரசாணியை வழிபட்டு - அப்பேர்ப்பட்டவனைக் கணவனாகக் கொள்ளப் போகும்  எம் தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித் - பேரொலி (பெரிய ஆரவாரத்தோடு ) பறை கொட்டி
தோரணம் நாட்டிடும் கொலோ - தோரணம் நாட்டி அனைத்தும் செய்வார்களோ ?
துமிலம் - பெரிய ஆரவாரம்..பேரொலி முழங்க

குமரி மணம் - வெகு அழகான சொல்லாடல் ..மணத்திலே இளைய நிகழ்வு அதாவது மண உறுதி (நிச்சயதார்த்தம் )

இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை என்று உறுதி செய்து , உற்றார் உறவினருக்கு அறிவித்தல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு .
பொண்ணை நன்கு அலங்கரித்து வீட்டில் அமர வைத்து , உற்றாரும் ஊராரும் அறிய ,இவளை அந்தக் கண்ணபிரான் தாமோதரனுக்கே என அறிவித்து , அமரர் பதி என்ற பெருமானைக் கணவனாக அடையப் போகும் என் மகள், அரசாணியை  (அரச மரக் கிளை ..அனைத்து மங்கல காரியங்களிலும் இது உண்டு. அரசாணிப் பானை கூட உண்டு ) வழிபாட்டு , பேரொலி முழங்க பறை கொட்டி (பறையும் மங்கல வாத்தியமே..அதைச் சாவு மேளம் ஆக்கியது பிற்கால சதியே ) தோரணம் நாட்டிடுவார்களோ..

மகளைப் பற்றி என்ன ஓர் அழகிய கற்பனை. எல்லா தாய்க்கும் வேறென்ன வேண்டும். கண் நிறைய இவற்றை ரசிப்பதைத் தவிர :) 

Saturday 8 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.02

பாடல் : 02
ஒன்று மறிவொன்றில் லாத
உருவறைக் கோபாலர் தங்கள்
கன்றுகால் மாறுமா போலே
கன்னி யிருந்தாளைக் கொண்டு
நன்றும் கிறிசெய்து போனான்
நாராய ணன்செய்த தீமை
என்றும் எமர்கள் குடிக்குஓ
ரேச்சுக்சொ லாயிடுங் கொலோ.
விளக்கம் :
ஒன்றும் அறிவு ஒன்றில்லாத -  சேரும் அறிவு ஒன்று இல்லாத
உரு அறைக்  கோபாலர் - உருவம் அழகற்ற  கோபாலர்( மாடு மேய்ப்பவர்கள் )
தங்கள் கன்று கால் மாறுமா போலே - தங்கள்   கன்று தாங்களே அறியாமல் தன் அம்மாவிடம் இருந்து பிரித்து வைக்கப்படுவது போலே
கன்னி இருந்தாளைக் கொண்டு நன்றும் கிறி செய்து போனான் - என் வீட்டில் இருந்த கன்னியை , நல்லவன் போல நடித்துக்  கொள்ளை கொண்டு போனான்
நாராயணன் செய்த தீமை என்றும் எமர்கள் குடிக்கு - நாராயணன் செய்த தீமை என்றும் எங்கள் குடும்பத்துக்கு
ஓர்ஏச்சுச் சொல் ஆயிடுங் கொலோ - ஒரு பழி சொல்லுக்கு இடம் கொடுத்திடுமோ ?
ஒன்றும் - ஒன்றுதல் /சேருதல்
கிறி - உபாயம்

தாயும் கன்றும் இணைந்து இருத்தல் பற்றிய அறிவே இல்லாமல் உருவம் அழகற்ற கோபாலர்கள், தங்கள் கன்றை , அதுவே அறியாமல் அதன் அம்மாவிடம் இருந்து பிரித்து  வைப்பது போலே , என் வீட்டில் இருந்த கன்னியை ,  நல்ல வழி கண்டுபிடித்து,   அவளைக் கொள்ளை கொண்டு போனான். இப்படி கன்னியைக் கவர்ந்து சென்றதால் , நாராயணன் செய்த தீமை , வாழ்நாள் முழுவதும் எங்களின் குடும்பத்துக்கு தீராதப் பழி சொல்லைத் தந்து விடுமோ என்று அச்சமாக இருக்கிறது.