Monday 26 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.01


பெரியாழ்வார் மூன்றாம் திருமொழியில் எட்டாவது பகுதியில் முதல் பாடல். இதுவும் மகளுக்கானதே.. இனிதே ஆரம்பம் !
பாடல் : 01
நல்லதோர் தாமரைப் பொய்கை
நாண்மலர் மேல்பனி சோர
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு
அழகழிந் தாலொத்த தாலோ
இல்லம் வெறியோடிற் றாலோ
என்மக ளைஎங்கும் காணேன்
மல்லரை யட்டவன் பின்போய்
மதுரைப்பு றம்புக்காள் கொலோ.

விளக்கம் : 

நல்லதோர் தாமரைப் பொய்கை - அழகிய நல்ல ஓர் தாமரைக் குளத்தில்
நாண் மலர்மேல் பனி சோர - அன்று பூத்த மலர் மீது பனி பொழிய
அல்லியும் தாதும் உதிர்ந்திட்டு - அதன் அல்லியும் தாதும் உதிர்ந்து
அழகு அழிந்தால் ஒத்ததாலோ - அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ அதைப் போல
இல்லம் வெறியோடிற்றாலோ - என் இல்லமானது வெறிச் என்று கிடக்கின்றது
என் மகளை எங்கும் காணேன்  - என் மகளை எங்கும் பார்க்க முடியவில்லையே
மல்லரை அட்டவன் பின்போய்  - மல்லர்களை அழித்த அந்தக் கண்ணன் பின்போய்
மதுரைப்புறம் புக்காள் கொலோ - மதுரைப்புறம் புகுந்திருப்பாளோ ?

அழகிய நல்லதோர் தாமரைப் பொய்கையில் உள்ள அன்றலர்ந்த (fresh )  மலர்
மீது பனி பொழிந்து அதன் பூவின் உள் தாளும் , மகரந்தமும் உதிர்ந்து அழகு அழிந்தால் எப்படி இருக்குமோ , அதைப் போலவே என் மகளற்ற இல்லமும் வெறிச்சோடிக் கிடக்கின்றது. அவளை எங்கும் காணமுடியல . மல்லர்களை அழித்த அந்தக் கண்ணனின் பின்னே போய் வடமதுரைப் புறம் புகுந்திருப்பாளோ ?

என் மகள் கோதை அன்று பூத்த மலர் போல இருப்பாள்.  பூவின் மகரந்தத்தை எப்படி அல்லிதழும் ,தாதும் உள்ளனவோ அது போல நான் பாதுகாத்தேன்.பனி கோட்டியில் பூ அழகிழந்து போனது. அது போலத்தான் அவளைக் கண்ணார நான் ரசிக்கும் முன்பே அவள் அந்தக் கண்ணனின் வீட்டுக்குப் போய்விட்டாள் போல. அவளன்றி வீடே வெறிச் என்று இருக்கிறது. அவள் நிறைந்து இருந்த இல்லத்தில் இன்று அவளை எங்கும் காணவில்லை.
(பெரியாழ்வார் குலத் தொழில் வேள்வியே.ஆனாலும் அதை அவர் செய்ய விரும்பாமல் பூத் தொடுத்து பண்டாரமாக வாழ்ந்தார். வாழ்நாள் முழுவதும் பூத் தொடுத்து வாழ்ந்தவர் என்பதால் அவர் பாடல்களிலும் பூ மணக்கின்றது !

Saturday 24 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.10

பாடல் : 10
ஞால முற்றும்உண்டு ஆலி
லைத்துயில் நாரா யணனுக்குஇவள்
மால தாகி மகிழ்ந்தன
ளென்று தாயுரை செய்ததனை
கோல மார்பொழில் சூழ்புது
வையர்கோன் விட்டுசித்தன்சொன்ன
மாலை பத்தும் வல்ல
வர்கட்கு இல்லை வருதுயரே.

விளக்கம் : 

ஞாலம் முற்றும் உண்டு - உலகம் முழுவதையும் உண்டு
ஆல் இலைத் துயில்  நாராயணனுக்கு இவள் - ஆல் இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள்
மால் அது ஆகி மகிழ்ந்தனள் என்று தாயுரை செய்ததனை - மயக்கமுற்று காதலாகி மகிழ்ந்தனள் என்று தாய் உரை செய்ததனை
கோலமார் பொழில் சூழ் - அழகிய சோலை சூழ்ந்த
புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்னமாலை பத்தும் - புதுவையர்   சான்றோன் விட்டு சித்தன் சொன்ன இத் தமிழ்ப் பாமாலை பத்தும் பாட
வல்லவர்கட்கு இல்லை வருதுயரே - வல்லவர்களுக்கு வரக்கூடிய துயர் ஒன்றும்  இல்லை
வரு துயர் - வந்த/வருகின்ற /வரக்கூடிய துயர்

உலகம் முழுவதையும் உண்டு ஆல மர இலையில் உறங்கிய நாராயணனுக்கு இவள் மயங்கிக் காதலாகி மகிழ்ந்தாள் என்பதைத் தாய் உரை செய்ததனை , அழகிய சோலை சூழ்ந்த ,வில்லிபுத்தூர் சான்றோன் விட்டு சித்தன் சொன்ன தமிழ் மாலை பத்தும் பாட வல்லவர்களுக்கு ,வருகின்ற துயர் என ஒன்றும் இல்லை.
மூன்றாம் திருமொழியில் உள்ள  ஆண்டாளுக்காக பெரியாழ்வார் எழுதிய  ஏழாம் பத்து இனிதே நிறைவுற்றது !!!

Friday 23 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.09

பாடல் : 09
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து 
பேணிநம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
இவளும்ஒன் றெண்ணு கின்றாள்
மருத்து வப்பதம் நீங்கினா
ளென்னும் வார்த்தை படுவதன்முன்
ஒருப்ப டுத்திடு மின்இவளை
உலகளந் தானி டைக்கே.

விளக்கம் : 
 பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து - பெரிய  பெரிய மங்கல நலன்கள் இவளுக்குச் செய்து
பேணி நம் இல்லத்து உள்ளே இருத்துவான் என எண்ணி நாம் இருக்க - பாதுகாத்து நம் வீட்டில் உள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என நாம் எண்ணி இருக்க
இவளும் ஒன்று எண்ணுகின்றாள் - இவளோ வேறொன்று நினைக்கின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் - மருந்து செய்யும் பதம் தவறி விட்டால்  அதன் நலன் முழுவதும் போய் விடுவது போல, இவளைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டு தவறு    நிகழ்ந்து விடும் அந்த ஒரு பழி சொல் வருவதற்கு முன்
ஒருப்படுத்திடுமின் இவளை உலகளந்தான் இடைக்கே - இவளை உலகளந்தான் இடத்தில் ஒன்று சேர்த்து விடுங்கள்..

கல்யாணங்கள் - மங்கல நிகழ்வுகள்
கல்யாணம் என்பது திருமணம் மட்டுமே அல்ல.பல மங்கல நிகழ்வுகளும் கல்யாணம் என்ற பொருளே . ஆகவே ஒரு தகப்பனாக மகளுக்கு பல மங்கலங்கள் செய்து பார்க்க விரும்புகிறார் பெரியாழ்வார்.  இதை நாம் பேச்சு வழக்கில் ,என் கண்ணுக்கு முன்னாலேயே உனக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்த்துப்புடனும் என்போம். அதைத்தான் அவரும் சொல்கின்றார். அவளுக்குப் பல நல்லது செய்ய வேண்டும்  ,அவளைப் பேணி பாதுகாத்து ,நம் வீட்டின் உள்ளேயே அவளை இருக்க வைக்கலாம் என நாம் எண்ணி இருக்க ,
இவளோ வேறொன்று எண்ணுகின்றாள் . மருந்தானது சரியான அளவில் இருக்க வேண்டும். மீறினால் துன்பம். அது போலவேதான் இவளைச் சரியாக கவனித்து வர வேண்டும். கொஞ்சம் நாம் தவறினாலும் துன்பம் ஆகிவிடும் (இதைத்தான் பெண்ணைப் பெற்று வயிற்றிலேயே நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் எனச் சொல்வார்கள் )
அப்படி ஒரு பழி சொல்லுக்கு இவள் கோதை ஆளாகும் முன்னம் , அவளை உலகளந்தானிடம் ஒன்றிணைத்து விட வேண்டும். அதற்குப்பின் அவள் பாடு அவள் கணவன் பாடு. 

Thursday 8 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.08

பாடல் : 08
கைத்தலத் துள்ள மாடழியக் 
கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன 
வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த்த லையெழு நாற்றுப் 
போல்அவன் செய்வன செய்துகொள்ள
மைத்த டமுகில் வண்ணன் 
பக்கல் வளர விடுமின்களே.

விளக்கம் : 

கைத்தலத்தில் உள்ள மாடு அழியக் - என் கைகளிலே உள்ள செல்வங்கள் அழியக்
கண்ணாலங்கள் செய்து - கண்ணாலங்கள் செய்து
இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் - வைத்து ,இவளை என் வீட்டின் பெருமை என வைத்துக் கொண்டு  ,என் மகளாக வைத்து வாழ்கிறேன். ஆயினும்  என்ன வாணிபம் செய்து என்ன ஆகப் போகிறது..அது நமக்கு பழியை ஏற்படுத்தும்
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்துகொள்ள - நாற்று வயலில் விளைந்த நாற்றினை விளைத்தவன் விருப்பம்போல் நடவு  வயலில் நடுவது போல , அவன் செய்வன செய்து கொள்ள
மைத்தடம் முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே ! - இவளை மைத்தடம் (மை போன்ற கரிய நிறம் கொண்ட மேகத்தின் வண்ணன் பக்கமாக வாழும்படி கொண்டு விட்டுவிடுங்கள்

ஒரே பெண் அவளுக்குக் கல்யாணம் செய்யணும்..அதைச் சீரும் சிறப்புமாகச் செய்யணும். கையில் இருக்கின்ற செல்வங்கள் எல்லாம் கரைந்தாலும் பரவாயில்லை. அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  இவளே என் குலப்பெருமையாக வைத்து ,மகளாக வைத்துக்கொண்டு வாழ்கிறேன். ஆனால் அப்படி வைத்துக்கொண்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லையே .
வயலில் நடும் நாற்றானது நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நட்டால் தான் பயன்பெறும்..( நாற்றாங்காலை இப்படி நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நடுவதே வழக்கம். போலவே பெண்ணும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லுவதே இயல்பு )
மை இட்ட தடம் தெரியும் அந்த மேகத்தின் நிறம் கொண்டவன் அவன் விருப்பப்படி இவளை என்னவோ செய்து கொள்ளட்டும் அவன் பக்கம் இவளைக் கொண்டு சேர்த்து விடுங்களேன் ! (கோதை என் மகள் என்பது பெருமை ஆயினும் அவள் என்வீட்டிலேயே இருப்பதால் யாதொரு பயனும் இல்லை ஆகவே அவள் சேரிடம் சேர வேண்டும் அந்தக் கண்ணனோடு சேருவதே அவளுக்கும் பெருமை அவளைப் பெற்ற தனக்கும் பெருமை என்கிறார் ) 

Monday 5 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.07

பாடல் : 08
காறை பூணும் கண்ணாடி
காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த்
தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன்
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
காறை பூணும் கண்ணாடி காணும் - கழுத்திலே அணியக் கூடிய அணிகலனை அணிந்து கொள்ளும் ,அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டும்
தன் கையில் வளைகுலுக்கும் - தன் கையில் உள்ள வளையல்களைத் தானே குலுக்கிக் கொள்ளுவாள்
கூறை உடுக்கும் அயர்க்கும் - உடை உடுப்பாள் .பின் ஏதோ நினைத்து அயர்ந்து கொள்வாள்
தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் - அடிக்கடி தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த இதழ்களை ஒழுங்குபடுத்திக் கொள்வாள்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்  - தனக்குத்தானே தேற்றிக் கொண்டு நின்று ஆயிரம் பெயர்களை உடையவன் திறனைப் பிதற்றுவாள்
மாறு இல்  மாமணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே - வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான மாமணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே
இது ஒரு மிக அழகிய பாடல். காதல் கொண்ட பெண்ணின் நடவடிக்கைகளை உளவறிந்து ,தாய்மையோடு வருந்திச் சொல்லும் பாடல். இப்பாடலைப் படிக்கும் போதே கோதை என்ற பெண்ணைக் கற்பனை செய்யுங்கள் அவர் சொல்லிய வண்ணமே.. ஒரு சிறுபிள்ளைத்தனம் தெரியும்.. :)
பெரியாழ்வாரின் இந்தத் திருமொழிகளை எழுத எனக்கு உந்துதல் அளித்ததே இந்தப் பாடல்தான்..
காறை என்பது கழுத்தை இறுக்கி மூடிய நகை..காறை பூணும் (அணிதல் ) கண்ணாடி காணும்.. ஆமாம் ஏன் நகை அணிய வேண்டும் அதை ஏன் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சில பெண்கள் இயல்பாகவே தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவர். ஆனால் சில பெண்களோ பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.. ஆனால் அத்தகு பெண்கள் கூட காதல் என வந்துவிட்டால் தோற்றத்தில் கவனம் செலுத்துவார்கள்.. தான் விரும்புபவன் தன்னைப் பார்க்கும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணமே காரணம்.  அதற்காகத் தான் தனக்கு அழகூட்டும் நகையை அணிந்து பார்த்தலும் அது எப்படி இருக்கு என கண்ணாடியில் அழகு பார்த்தலுமாகத் திரிகிறாள்..தன் வளையலைத் தானே குலுக்கிப் பார்க்கிறாள்.. சின்னச்சின்ன செயல்களில் கூட செய்து பார்த்து ரசிக்கத் தோன்றும் காதல் கொண்ட பெண் மனது.. அத்தோடு..அத்தோடு.. என்ன அத்தோடு..அதுதான்  இந்த வளையல் அவன் கையில் சிக்கினால் என்னவாகும் என்ற எண்ணமும் வந்து போயிருக்கும் வேறென்ன :)
உடை அணிந்து கொள்வாளாம் அயர்ந்தும் கொள்வாளாம்..ஏனாம் ? புத்தாடை அணிந்தால் உற்சாகம் தானே வரும்..ஆமாம் உற்சாகம் தான் அடுத்த நொடியே அவன் நினைவு வந்துவிடுகிறது.. இதை எல்லாம் ரசிக்க வேண்டியவன் அவனாகிற்றே.. எந்த ஒரு பொருளும் அதைக் கொள்ள வேண்டியவனிடம் போய்ச் சேர்ந்தால் தானே அது தன் பிறவிப்பயனை அடையும்.. இவனைத் தான் காணலையே ..பிறகு மனம் சோர்வடையாமல் என்ன செய்யுமாம் ?

அடிக்கடி தன் சிவந்த இதழ்களைத் திருத்திக் கொள்வாளாம்.. என்றேனும் ஒரு நாள் வருவான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்தத் தேவன் திறமையைச் சொல்லிப் பிதற்றுவாள் .. (ஏதேதோ உளறுதல் )
வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான அந்த மணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே.. இவளை என்ன செய்ய ?




Saturday 3 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.06

பாடல் : 07
பேச வும்தெரி யாத பெண்மையின்
பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர்
கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ
யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை
மீர்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 

பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன்  பேதை இவள் - பேசவும் தெரியாத பெண்மையின் பேதை என் பேதை இவள்
கூச மின்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் - கூச்சமில்லாமல்  தம் எதிர்  மற்றவர்கள்  நிற்கின்றார்கள் என்ற எண்ணமின்றி  கோல் அற்ற அகப்பையாய் வெட்கம் விடுத்தவளாக
கேசவா என்றும் கேடு இலி என்றும் கிஞ்சுக வாய்மொழியாள் - கேசவா என்றும் கேடு அற்றவனே என்றும் சொல்லும் கிளி போன்று பேசும் வாய்மொழியாள்
வாசவார் குழல் மங்கை மீர் இவள் மால் உறுகின்றாளே - நறுமணம் கொண்ட நீண்ட குழல் மங்கையரே இவள் மயக்கம் கொள்கின்றாளே

இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசத் தெரியாத பெண் ஆகிவிட்டாள் கோதை. யானே ஓர் பேதை இந்தப் பேதை பெற்ற மகள் இவளும் ஓர் பேதையாகிப் போனாள் . தம் எதிரே மற்றவர்கள் நிற்கின்றார்கள் என்ற எண்ணம் இன்றி கூச்சமற்றவளாக கோல் அற்ற அகப்பை போல ( அகப்பையில் கோல் நீங்கி விட்டால் அது வீண்தான். தக்க தருணத்தில் கோல் நீங்கி அச் சமையல் நிறைவுறாமல்  அரைகுறை ஆகி விடுவது போல )  பெண்ணானவள் வெட்கம் நீங்கி விட்டால் எப்படி ? ) பலர் முன்னிலையில்,கேசவா, கேடு இல்லாதவனே என்றும் பிதற்றுகிறாள் கிளி எப்படி சொன்னதையே திருப்பிச் சொல்லுமோ அது போன்றுள்ளது அவள் பேச்சு..
நறுமணம் கொண்ட நீண்ட முடி கொண்ட மங்கையரே ! இவள் இப்படி மால் மேல் மால் (மயக்கம் ) உறுகின்றாளே .. 

Thursday 1 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.05

பாடல் :05
நாடும் ஊரும் அறிய
வேபோய் நல்ல துழாயலங்கல்
சூடி நாரணன் போமிட
மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்
கேடு வேண்டு கின்றார்
பலருளர் கேசவ னோடுஇவளை
பாடு காவ லிடுமி
னென்றென்று பார்தடு மாறினதே.

விளக்கம் : 

நாடும் ஊரும் அறியவே போய் - இந்த  நாடும் ஊரும் அறியவே போய்
நல்ல துழாய் அலங்கல் சூடி - நல்ல துளசி மாலையைச் சூடி
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் - நாரணன் செல்லும் இடம் எல்லாம் தேடி  அதைத் தன் இடமாகக் கொள்ளுகின்றாள்
கேடு வேண்டுகிறார் பலர் உளர் - இவளுக்கு கேடு நினைப்பவர்கள் பலர் உள்ளனர்
கேசவனோடு இவளை பாடு காவலில் இடுமின் என்றென்று - கேசவனோடு இவளை இணைக்க வேண்டும் ,  இவளை வெளியில் செல்லாதவாறு பாதுகாவலில் வைக்க  வேண்டும் என   என்னிடம் இவ்வுலகம்  சொல்லியதில்
பார் தடுமாறினதே - மனம் தடுமாறியதே

நாடும் ஊரும் , (தென்பாண்டி நாடு முழுவதும், இந்த வில்லிபுத்தூரும் ) அறியவே போகின்றாள். நல்ல துளசி மாலையை அணிந்து கொள்கின்றாள்.  நாரணன் எங்கெல்லாம் சென்றான் என விசாரித்து  பலரும் பல இடம் சொல்ல,இவளும் அந்த இடங்களை எல்லாம் தன் இடமாகக் கொள்ளுகிறாள் (இராமன் வாழும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்களே அது போல நாரணன் இருக்கும் இடமெல்லாம் தன் இடமாக எண்ணிக் கொள்கின்றாள் )
அக்கம்பக்கம் எல்லாம் இவளை அந்தக் கேசவனோடு இணைத்துக் கிசுகிசுக்கின்றார்கள் . இவளுக்குக் கேடு வேண்டுபவர்களும் பலர் உள்ளனர்.
பொம்பளைப் புள்ள அங்க இங்க அவ காதலனைத் தேடி அலைஞ்சா நல்லாவா இருக்கும்..அவ வீட்டை விட்டு வெளியே போகாதபடி பாதுகாவலில் வைக்கச்சொல்லி என்னிடமே பலர் சொல்கின்றார்கள்..இவ்வுலகம்  இதைச் சொல்லக்  கேட்டு பெற்ற மனம் தடுமாறியதே..