Friday 10 February 2017

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பாடல் :143
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே
விளக்கம் :
பருந்தாட்  களிற்றுக்கு அருள் செய்த - பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த
பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்
விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தே கண்டு அமைந்தது பற்றி
விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம்மனத்தே - விட்டு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல் மருந்து  என்றே கொண்டு தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - வைத்துக் கொண்டு வாழ்பவர்கள்
பெரும் தாள் உடைய பிரானடிக் கீழ்ப் - பெரிய திருவடிகள் கொண்ட பிரான் அடிக் கீழ்ப்
பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாது என்றும் இருப்பாரே

பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த ( முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட யானை , வெகு நேரம் போராடி இறுதி நேரத்தில் திருமாலை அழைக்கின்றது.. உடனே  யானைக்கு அருள புவி வருகிறார் திருமால்..அதனைத் துன்பத்தில் இருந்து விடுவித்து   காப்பாற்றி அருள்கிறார்..வைகுந்தம் புகுன்றது திருமாலின் அருள் பெற்ற யானை.. உலகத் துன்பங்களில் எல்லாம் உழன்றாலும் அவன் திருவடிகளை அடைக்கலம் புகும் பொழுது அவன் வந்து காத்து அருள்வான் என்ற நம்பிக்கையை மகள் கோதைக்குக் கொடுத்தவர் பெரியாழ்வார்..
எப்படி..
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -  பெரியாழ்வார் திருமொழி 4,10,1

பெரியாழ்வார் 

அடியவர்களைக் காப்பதில் வல்லவர் ஆகிய  உம்மை அடைக்கலம் புகுவது நான் சோர்வடையும் காலத்தில் துணை ஆவாய் என்றே..நான் ஒன்றும் பெரிய தகுதி உடையவன் அல்லன்.ஆனாலும் நின் திருப்பாதம் அடைந்தேன்.அதற்குக் காரணம் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்.
மரண காலத்தில் இளைப்பு  வந்து இழுத்துக் கொண்டு  கிடக்கும்போது உன்னை நினைக்க மாட்டேன்..(நினைக்க முடியாத அளவுக்கு சுய நினைவு அற்றுப் போய் இருக்கும் சித்தம் கலங்கி இருக்கும் இல்லையா..) ஆகவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கனே  என்கிறார் பெரியாழ்வார்..எத்துணை அன்பு.. இப்படித் தன் தந்தை சொல்லித் தந்தது துன்பம் நேர்கையில் ஆனைக்கு அருளாளனை நினைத்துக் கொள் அம்மா..


Image result for vishnu saves elephant

இறுதிவரை துன்பத்தில் உழன்ற கோதை , அதன் விளிம்பில் நின்று இந்தக் கதையை நினைவு கூர்கிறாள்..எப்படி யானையைத் துன்பத்தில் இருந்து விடுவித்தானோ அந்தத் திருமால் அதைப் போலவே தன்னையும் விடுவிப்பான் என்ற நம்பிக்கையையும் வைக்கிறாள் .
அந்தப் பரமன் தன்னை விருந்தாவனத்தில் கண்டீர்களா கண்டீர்களா என்று கேட்டு கண்டோம் என  அடியார்கள் சொன்ன பதிலில்  அங்கேயே அமைந்து போனாள்.. விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை (வில்லிபுத்தூர் கோன் என்ற சொல்லை இங்கே பயன்படுத்தவில்லை..ஏனெனில் அவள் மனம் வில்லிபுத்தூரில் தற்பொழுது இல்லை.விருந்தாவனத்தில் தேடி அலைந்து  ,  அங்கேயே நிலைத்தும்  விட்டது)  சொன்ன சொல்லை மருந்தாக தம் மனத்தே கொண்டு..பிறவிப் பிணியில் இருந்த நீங்க உதவும் மருந்தாகக் கொண்டு வாழ்பவர்கள் பெருமானடிக் கீழ்ப் பிரியாது இருப்பார்கள்..பெருமான் திருவடிகளை விட பாதுகாப்பு இவ்வுலகத்தில் வேறு கிடையாது. அங்கே  துன்பம் நெருங்காமல் நலத்துடன் இருப்பார்கள்.


அன்று அவள் காதல் கைகூடாமல் இருந்திருக்கலாம். ஆனால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நான் உறவாக வேண்டும் உனக்கே ஆட்கொள்ள வேண்டும் என்று அவள் வைத்த வேண்டுகோளை காலம் நிறைவேற்றி வைத்திருக்கிறது.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவளுக்கு 10 நூற்றாண்டில் இராமானுசர் என்ற "அண்ணன்"கிடைத்தார் அவளது வேண்டுதலை நிறைவேற்றியதன் மூலம். அவளின் மாலையை முதன்முதலாக அரங்கனுக்கு எடுத்துச் சென்றார். இன்றும் திருப்பதிக்கு ஆண்டாள் மாலை தான் செல்கின்றது . இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அவள் புகழ் ஓங்கி நிற்கின்றது. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பெருமாளின் பெயரை அவளன்றி ஒலிக்க முடியாது..இங்கு திருமால் இருக்கும் வரை நம் குலத் திருமகளும் நீடித்து நிலைத்து நிற்பாள்


நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து இனிதே நிறைவுற்றது..ஆண்டாள் திருவடிகளே போற்றி..!!!

Wednesday 8 February 2017

142.நாட்டைப் படையென்று அயன்முதலாத்

142.நாட்டைப் படையென்று அயன்முதலாத்
பாடல் :142
நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்மடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
நாட்டைப் படை என்று அயன் முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை
நளிர் மாமலர் உந்தி - குளிர்ந்த தாமரையில் தொப்புள் கொடியிலே  உந்தி படைத்து அந்த பிரம்மன் மூலமாக பல் உயிர்களைப் பிறப்பித்து
வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல்   வீடு பேறு  வரை ஒருவரின்
வாழ்வில் விளையாடும்
விமலன் தன்னைக் கண்டீரே - விமலன் தன்னைக் கண்டீர்களா ?
காட்டை நாடித் தேனுகனும் - காட்டிலே சென்று தேனுகன் என்னும் அசுரனையும்
களிறும் புள்ளும் உடன் மடிய - குவலயபீடம் என்னும் யானையையும் பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்
வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

உந்தி -பிறப்பு
வீடு - வீடு பேறு (முக்தி /மோட்சம் )
கேள்வி : 

குளிர்ந்த தாமரையில் இருந்து வந்த  தனது   தொப்புள் கொடியிலே  பிரம்மனைப் படைத்து , அவனிடம் நாட்டைப்படைக்கச் சொல்லி , அந்த பிரம்மன் பல உயிர்களைப்  படைத்தார். இவ்வாறு  ஓர் உயிரின் பிறப்புக்கும் காரணமாகி  இறந்து வைகுந்தம் அடையும் வீடு பேறு  வரை எல்லாவற்றுக்கும் காரணமாகி நம் வாழ்வோடு விளையாடும் விமலன் தன்னைக் கண்டீர்களா ?

Image result for sriranganathar


பதில் :  
காட்டிற்கே சென்று , தேனுகன் எனும் கழுதை வடிவ அரக்கனையும் (பலதேவன் கொல்ல ), குவலய பீடம் எனும் யானையையும் , பறவை வடிவம் கொண்ட பகாசுரனின் வாய் பிளந்து கொன்று ஒழிய வேட்டையாடி வருவானை விருந்தாவனத்தே கண்டோமே

இது நாச்சியார் திருமொழி இறுதிப் பாடலுக்கு முந்தைய பாடல்.. இத்தனை பாடல்களில்  கண்ணனுக்காக உருகி வேதனை கொண்டவள் அதற்குக் காரணமும் கண்ணன் என்றே பழி சொல்கிறாள்..
எப்படி..?
உயிர்களைப் படைக்கும் பிரம்மனைப் படைத்ததே அந்தப் பெருமான் தான். அவருடைய தொப்புள் கோடியில் இருந்து வந்தவர் பிரம்மா..(அயன்முதலா ) அவர் பல உயிர்களைப் படைத்தார்..உயிர்களின் முடிவு வைகுந்தம் அடைவது..வீடு பேறு ..இப்படி ஓர் மனிதனின் ஆதி முதல் இறுதி  வரை எல்லாவற்றிலும் தொடர்புடையவன்  இவள் வாழ்க்கையிலும் உட்புகுந்து  காரணமும் ஆகி செயலும் ஆகியவன் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற பழமொழிக்கு ஏற்ப தனது இந்த நிலைக்குக் காரணமே இவனது விளையாட்டு தான் என்கிறாள்..அவனுக்குத் தெரியாமல் எதுவும் நடக்கவில்லை. அவன் அறிந்தே தான் இங்கு அனைத்தும்..யாவுமானவன் யாதொன்றும் அறியாதவன் அல்லன். என் பிறப்பும் அவனுக்கானது என் முடிவும் அவனுள் அடங்குவதே . அவனே முதலும் அவனே முடிவும்.   வாழ்வும் அவனே வைகுந்தமும் அவனே..
கண்ணனால்  நான் கண்ணனுக்காகவே நான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறாள் .இதில் ஒளிந்திருக்கும் உறுதியும் இவனைக் காதலித்த காரணத்தினால் பட்ட வேதனையின் வெளிப்பாடும் அறியலாம்..விளையாடுகிறான்  விமலன் என்று  சொல்லிவிட்டாளே

வாழ்வின் இறுதி நிலையில் நின்று அவனைக் காணாமல் தேடி உறைந்து நிற்கும் அவளின் மனச் சுமையை  அறிய முடிகிறதா.?.:(

Sunday 5 February 2017

141.வெளிய சங்கொன் றுடையானைப்

141.வெளிய சங்கொன் றுடையானைப்
பாடல் : 141
வெளிய சங்கொன் றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங் குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் : 
வெளிய சங்கு ஒன்று உடையானைப் - வெண்ணிற சங்கு ஒன்று உடையவனை
பீதக ஆடை உடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை
அளி நன்கு உடைய திருமாலை - இரக்கம் /அன்பு நன்கு கொண்ட திருமாலை
ஆழி யானைக் கண்டீரே ? - சக்கரம் உடையவனைக் கண்டீரே ?
களிவண்டு எங்கும் கலந்தாற்போல் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல
கமழ் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர - மணம் கமழும்  பூங்குழல்கள் பெரிய தோள் மேல் மிளிர
நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே  - அவன்  நின்று விளையாட விருந்தாவனத்தே கண்டோமே
அளி -  இரக்கம் /அன்பு
பீதகம் - மஞ்சள் ஆடை
கேள்வி :
வெண் சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை ,இரக்கமும் அன்பும் நன்றாகவே கொண்ட திருமாலை,  சக்கரம் உடையவனைக் கண்டீர்களா ? (என்னடா..போன பாடல் வரை திட்டிட்டு இருந்தவள் இந்தப் பாடலில் இரக்கம் நன்கு கொண்ட திருமால் என்கிறாளே மனம் திருந்திவிட்டாளா என ஐயம் வேண்டாம்.. எந்த ஒரு சொல்லையும் சொல்கின்ற விதம் என ஒன்று உண்டில்லையா? அளி உடையவன் என்று சொல்லல அளி நன்கு உடையவன் என்கிறாள்..சற்றே எள்ளலாக..வஞ்சப்புகழ்ச்சி அணி என்றே உண்டு தமிழில்..ஒருவரைப் புகழ்வது போல இகழ்வது..இகழ்வது போலப் புகழ்வது..இவள் புகழ்வது போல இகழ்கிறாள்..திருமால் இரக்கமுடையவன் என்று சொன்னால் ஆமாமா நல்ல இரக்கமுடையவன் என்று சற்று ஏளனப் புன்னகையோடு சொன்னால் எப்படி இருக்குமோ அப்படிக் கற்பனை செய்துகொள்ளுங்கள் ..அடையாளம் சொல்கிறாள்.. வெண்சங்கு வச்சிருப்பான்..சக்கரம் வச்சிருப்பான்..மஞ்சள் நிறத்தில் ஆடை உடுத்தி இருப்பான்..அன்பு தான..நல்லா உடையவன் ம்க்கும்.. அவனைப் பார்த்தீங்களா..? )

Image result for vishnu images

பதில் : 
பூக்களில் தேனுண்டு மகிழ்ந்து இருக்கும் வண்டு எங்கும் கலந்தது போல ,மணம் கமழும் பூங்குழல்கள் (முடி ) அவனது பெரிய அகன்ற தோளின் மேல் மிளிர , அவன் நின்று விளையாடக் கண்டோமே
மணம் கமழ்கிறதாம் அவனது குழல்..அந்தக் குழலானது அவனது அகன்ற தோளில் விரும்பிப் படர்ந்திருக்கிறது வண்டுகள் பூக்களில் எ வ்வளவு மகிழ்ந்து தேன் உண்ணுமோ அதைப் போல .ஏனெனில் அந்தத் தோள் பரந்தாமனுடையது அல்லவா..அதற்கு மயங்காதோர் உண்டோ.. அதனால் அந்தக் குழலானது மகிழ்ந்து விளையாடுதாம் பரமனின் தோளில் ..

சற்றே பொறாமை தெரியுதுல்ல :) அந்தப் பேறு தனக்குக் கிடைக்காத ஆற்றாமையும்





Friday 3 February 2017

140.பொருத்த முடைய நம்பியைப்

140.பொருத்த முடைய நம்பியைப்

பாடல் : 140
பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்றஅக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :

பொருத்தம் உடைய நம்பியைப்  புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை,  உடல் போலவே உள்ளமும் கருப்பானவனை
கருத்தைப் பிழைத்து நின்ற அக் கருமா முகிலைக் கண்டீரே? - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா ?
அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான  விண்மீன் கூட்டங்களால்
ஆரப் பெருகு வானம் போல்  - நிறைந்து வழியும் வானம் போல்
விருத்தம் பெரிதாய் வருவானை - கூட்டம்  பெரிதாக வருவானை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே

கேள்வி :  பொருத்தம் இலி என்று சொன்ன வாயாலேயே அடுத்த பாட்டில் பொருத்தம் உடைய நம்பி என்கிறாள் எனில் தன் கருத்தை மாற்றிக் கொண்டாளா என்ன ? ;) அல்ல.. நன்கு கவனியுங்கள்..சென்ற பாட்டில் அவள் சொன்னது இரக்கமற்ற அவன் கண்களுக்கு அழகுப் புருவங்கள் பொருத்தமற்றது என ..கண்களுக்கு அழகு இரக்கம் கருணை..அது அற்ற கண்களுக்கு அழகிய புருவம் எப்படிப் பொருந்தும் ?

சரி இந்தப் பாட்டில் ஏன் பொருத்தம் உடையவன் என்கிறாள்..ஆமாம் கருநிற வண்ணன் அகமும் புறமும் ஒன்றே போல இருக்கின்றான்..உடல் தான் கருப்பு என்றால் அவன் உள்ளமும் கருப்பு..இரக்கமற்றது..இவளைப் பற்றிச் சிந்திக்க மறுக்கிறது. நல்ல மனசு இல்ல..அந்த மனசுல இவள் இல்லை. இருந்திருந்தால் இப்படித் தவிக்க விட மாட்டான் . அதனால்தான் உள்ளும் புறமும் ஒன்றானவன் எனச் சாடுகிறாள். என்றேனும் இவன் வருவான் நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றெண்ணி இருந்தவள்..தன் காதலில் கற்பனையில் வந்து இவன் காப்பாற்றுவதாகச் சொல்லி இருந்த வாக்கைக் காப்பாற்றவில்லை. கற்பனையில் இவள் கண்டால் அதுக்கு அவன் என்ன பண்ண முடியும் எனக் கேட்காதீர்..
அடியவர் துயர் நீக்க ஓடோடி வருவான் எனக் காலங்காலமாக சொல்லப்பட்டதே..அதுவாவது நிறைவேற்றி இருக்க வேண்டாமா ?

 சொன்ன சொல் தவறியவன் அந்தக் கருவாப் பய கண்ணனைக் கண்டீர்களா ?
Image result for black krishna

பாருங்கள் இந்தப் பத்து முழுக்க வேறெந்தப் பத்திலும் இல்லாத அளவுக்கு அவனைத் திட்டுகிறாள்..வேதனையில் விளிம்பில் இருக்கின்றாள்..காப்பாற்றக் கை கொடுக்கல..கண்ணன் வரல..வேதனையில் மூழ்கிக் கொண்டு இருப்பவள் வேறென்ன செய்வாள்..? நன்கு திட்டுகிறாள்..அடுத்த வரியிலேயே புகழவும் செய்கிறாள்..இப்பேதைப் பெண்ணை என்ன செய்தால் தகும் ?  காதல் செய்தால் தகும்..
அதைத் தானே அவள் கேட்கின்றாள்.. :)
பதில் : 
அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்து வழியும் வானம் போல , பெருங்கூட்டத்தில் தனியாகத் தெரிகின்றான்..தனது நண்பர்களோடு அவன் வருகின்றான்..அவனைப் பார்த்தோமே விருந்தாவனத்தில்.. அருந்ததி எப்படித் தனித்துத் தெரியுமோ அது போல அவ்வளவு பெருங் கூட்டத்திலும்  அவன் தனியாகத் தெரிந்தான் ஆகா..அவன் அழகே அழகு.. !

Wednesday 1 February 2017

139.தரும மறியாக் குறும்பனைத்

139.தரும மறியாக் குறும்பனைத்
பாடல் : 139
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
தருமம் அறியாக் குறும்பனைத் - நியாயம் என்பது அறியாத குறும்பனைத்
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் -தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே ? - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா ?
உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கருமையாக முகம் செம்மையாய்
உதயப் பருப் பதத்தின் -மலையின் மீது
மேல் விரியும் கதிரே போல்வானை-   விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
 பருப்பதம் - பர்வதம் /மலை
சார்ங்கம் -வில்

கேள்வி : 
தருமம் அறியா குறும்பன்..நியாயம் என்பதே இவனிடம் கிடையாது..இரக்கமற்றவன் பயங்கரக் குறும்பன்..ஏன் இவனிடம் நியாயம் இல்லை என்கிறாள்..பின்னே ? ஒரு பெண் இவ்வளவு கதறுகிறாள் அவனுக்காக ..ஆனால் அவன் வரவே இல்லையே..அவள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் எங்கே சென்றான் அவன் ? நியாயமாக இது போன்ற பெண் கிடைக்க அவனல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்..எவ்வளவு காதல் எவ்வளவு ஆசை..இப்படி வெளிப்படையாக ஆசையைச் சொல்லி முழு மொத்தமும் அணு அணுவாகக் காதலிப்பவள் கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்..ஆனால் அவன் வரவே இல்லையே சேரவே இல்லையே..இவளைப் புரிந்து கொள்ளாதவன் இரக்கமற்றவன் தானே..நியாயம் அற்றவன் என்று அவள் சொல்வதில் என்ன தவறு ?
குறும்புத் தனங்களால் தானே அவள் மனத்தைக் கொள்ளை கொண்டான்.

தனது கையில் உள்ள வில்லைப் போன்ற புருவம் உடையவன்.  அழகிய புருவம் தான். ஆனால் அவன் கண்களுக்கு அவை பொருத்தம் இல்லை..
இல்லையா? ஏனாம் ? அந்தக் கண்கள் அவளைக் காணாமல் திரிகின்றது..அவளை இரக்கமற்றுக் கொல்கின்றது.. பிறகு எப்படி அந்தப் புருவம் இந்தக் கண்களுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும்..இரக்கமற்ற கண்கள் அழகுமில்லை அவை அந்த அழகான புருவத்துக்குப் பொருத்தமும் இல்லை. அதுதான் பொருத்தம் இலி என்கிறாள்.
நியாயம் அறியாதவன் ,வில்லைப் போன்ற அழகிய  பொருத்தமற்ற புருவங்களை உடையவனைக் கண்டீர்களா ?

பதில் : ஆமாம்..கருத்த உருவம் ஆனால் முகம் சிவந்தது எப்படிச் சிவந்து இருந்தது தெரியுமா ? மலைகளின் ஊடே பெரிதாக விரியும் கதிரவனின் கதிர்கள் போன்று இருந்தது..அவனை விருந்தாவனத்தில் கண்டோமே .