Friday 19 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.04

பாடல் : 04
ஏழை பேதைஓர் பாலகன்
வந்துஎன் பெண்மக ளையெள்கி
தோழி மார்பலர் கொண்டு போய்ச்செய்த
சூழ்ச்சியை யார்க்குரைக்கேன்
ஆழியா னென்னு மாழ
மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி
மூழை யுப்பறி யாத
தென்னும் மூதுரையு மிலளே.

விளக்கம் :
ஏழை பேதை ஓர் பாலகன் வந்து - ஏழையானவள் பேதையானவள்
என்று  ஆராய்ந்து யோசித்து , பாலகன் வந்து
என்  பெண்மகளை எள்கி - என் பெண்மகளை ஏய்த்து
தோழிமார்  பலர் கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை யார்க்கு உரைக்கேன் - தோழிமார் பலர் இருந்தும்,  கொண்டு போய்ச் செய்த சூழ்ச்சியை நான் யாருக்கு உரைப்பது ?
ஆழியான் என்னும் ஆழ மோழையில் பாய்ச்சி அகப்படுத்தி - ஆழியான் என்னும் ஆழ மோழையில் (மதுவின் அடியில் ஓடும் ஆழமான அடி நீர் ) பாய்ச்சி அகப்படுத்தி
மூழை உப்பு அறியாதது என்னும் - உணவை அள்ளும் அகப்பை உப்பு அறியாதது
மூதுரையும் இலளே -என்னும் முதியோர் வாக்கும் அறியாதவளே
மூழை - அகப்பை
மோழை -மடுவின் /ஆற்றின்  அடியில் ஓடும் ஆழமான  அடிநீர்
ஓர் - ( இவ்விடம் வினைத்தொகை ) ஓர்தல் -ஆராய்தல் /யோசித்தல்
ஆழியான் -திருமால்

என் மகள் ஏழை, பேதை என்று நன்கு ஆய்ந்து அறிந்து கொண்டு , தோழிமார் பலர் சூழ அவள் இருந்தும் அவளை ஏய்த்து ஏமாற்றி இருக்கிறான்..இந்த சூழ்ச்சியை நான் யாரிடம் சென்று சொல்வேன் ?
திருமால் என்னும் ஆழமான அடிநீரில் அகப்பட்டுக் கொண்டாளே (ஆற்றின் /மடுவின் ஆழத்தில் இருக்கும் அடி நீர் )
கரண்டிக்கு கறிச்சுவை தான் தெரியுமா ,அகப்பைக்கு உப்புச் சுவை தான் தெரியுமா என்பது நாட்டார் தமிழ்ப் பழமொழி

அதாவது அள்ளுகின்ற கரண்டிக்கு உணவின் ருசி தெரியாதாம்..உண்மை தானே
ஆனா இங்க அவர் கரண்டி என்பது யாரை ?உலகளந்த உத்தமனை :)
மகளின் அருமை தெரியாதவனாம்..அவளின் அருமை பெருமை தெரியாதவனிடம் போய் மயங்கிக் கிடக்கின்றாளே :(


Thursday 18 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.03

பாடல் : 03
பொங்கு வெண்மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு
மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில
கோவிந்த னோடு இவளை
சங்கை யாகிஎன் னுள்ளம்
நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.

விளக்கம் :
பொங்கு வெண்மணல் கொண்டு - நிறைய  வெண்ணிற நுண் மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கல் உறில் - சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள் - சங்கு சக்கரம் தண்டு உடைய வாள் வில்லும் தவிர வேறு  இன்னபிறவற்றை வரைவதில்லை
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில - அவள் கொங்கைகள் கூட திரண்டு இன்னமும் எழவில்லை..வளரவில்லை
கோவிந்தனோடு இவளை - கோவிந்தனோடு இவளை
சங்கையாகி என் உள்ளம் -   ஐயத்தினால் அச்சமாகி  என் உள்ளம்
நாள்தோறும் தட்டுளுப்பாகின்றதே - நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

நிறைய ,வெண்ணிற நுண்மணல் கொண்டு சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலுமே கூட, மாலுக்கு உரிய சங்கு ,சக்கரம் , தண்டு ,(கதை ) ,வாள் ,வில் என்ற ஐம்படைத் தாலிகள் தவிர வேறு ஒன்றை வரைய மாட்டேன் என்கிறாள்.. அவளின் கொங்கைகள் கூட இன்னமும் சரியாக வளரவில்லை. இப்படியாப்பட்ட பெண்ணை கோவிந்தனோடு நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது உள்ளம். அவனே கதி எனக் கிடக்கின்றாள்.. அதை நினைத்து எப்படி இவளை இதிலிருந்து மீட்டப் போகின்றேனோ என்ற ஐயத்தில் அச்சம் கொண்டு மனம் நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

முல்லை நிலத்தின் கடவுள் மாயோன் - காடும் காடு சார்ந்த இடத்தில் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு ஐம்படை ஆயுதங்கள் சங்கு,சக்கரம் ,தண்டு ,(கதை ) வாள் ,வில்..(இதுதான் பின்னாளில் விஷ்ணுவுக்கு ஆகி வந்தது  )


Wednesday 17 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.02

பாடல் : 02
வாயில் பல்லும் எழுந்தில 
மயிரும் முடிகூ டிற்றில
சாய்வி லாத குறுந்தலைச் 
சிலபிள் ளைகளோ டிணங்கி
தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் 
தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மாமணி வண்ணன் 
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
வாயில் பல்லும் எழுந்தில - வாயில் பல்  போட்டுப் பேசும் அளவுக்கு பேச்சு வரல காதலில் வீழ்ந்த பின்
மயிரும் முடி கூடிற்று இல - நன்கு  தலை சீவிக் கொண்டிருந்தவள் இப்பொழுது ஒழுங்காகத் தலையும் வாருவதில்லை
சாய்வு இலாத குறுந்தலைச் - (சாய்வு இல்லாத -குனியாத தலை )  தலை வணங்காத (நிமிர்ந்து நடக்கின்ற
சில பிள்ளைகளோடு இணங்கி - சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கி ஆடி வந்து - தீய இணக்கு இணங்கி (சேர்க்கை சரியில்லை சேரக் கூடாத பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிட்டு வந்து )
இவள் தன் அன்ன செம்மை சொல்லி -எங்கே சென்று ஆடிட்டு வந்தீர்கள் எனக் கேட்டால்   இவள் தன்னை ஒத்த (தனக்கு ஏற்றாற்போல் ) பொய்கள் சொல்லி மழுப்புகிறாள்
மாயன் மாமணி வண்ணன் மேல் - மாயன் மாமணி வண்ணன் மேல்
இவள் மால் உறுகின்றாளே - இவள் மயக்கம் கொள்கின்றாளே


எவரேனும் ஒரு சுடு சொல் சொல்லிட்டா என் அம்மா சொல்வார்கள் எவ்வளவு திண்ணக்கம் நாக்கு மேல பல்லைப் போட்டு இப்படி ஒரு சொல்லு சொல்லிட்டானே என்று..கிராமத்து வழக்கு இது.  அப்படி அடுத்தவரை பாதிக்கும் வண்ணம் பேசுவதற்கு பல்லுப் போட்டுப் பேசுதல் என்பார்கள்.. அது போல வெடுக்கென்று எல்லாரிடமும் பேசிக்கொண்டு இருந்த பெண் தான் கோதை. ஆனால் பாருங்கள் திடீரென பேச்சு வரல..என்ன ஆச்சு இவளுக்கு ?

பெண்ணாகச் சீவி அலங்கரிப்பவள் இப்ப தலை கூட ஒழுங்காகச் சீவாமல் போட்டு தலை மயிர் ஆனது கண்டேத்தமாகக் கிடக்கு.

குனிந்த தலை நிமிராம நடப்பது நம் பெண்கள் பண்பு. ஆனால் நிமிர்ந்து நடக்கும் பெண்களோடு சேர்ந்து கொண்டு வெளியே போய் ஆடிட்டு வருகிறாள் கோதை. தீ இணக்கு ..சேர்க்கை சரியில்லை என்பார்களே நம் அம்மா . சேரக் கூடாத நட்புடன் சேர்வதாகக் குற்றம் சாட்டுகிறார் .

(இதுதான் தாய்மை..என்னதான் நம்மபுள்ள தப்பு செய்தாலும் சேர்க்கை சரியில்லை என்று அடுத்த பிள்ளையால் தான் தன் பிள்ளை கெடுவது போலப் பேசுவது )
பொல்லாத பிள்ளைகளோடு சேர்ந்து அவர்களுடன் விளையாடி விட்டு வந்து  ,
எங்கே சென்று வருகிறாய்  என இவளிடம் கேட்டால் ,தனக்குத் தகுந்தாற்போல் ஏதேதோ பொய் சொல்லி மழுப்புகிறாள்

அந்த மாயன் மணிவண்ணன் மேல் இப்படி மயங்கிக் கிடக்கிறாளே..(மகளின் தடுமாற்றங்கள் காதலால் வந்தவை எனக் குறிப்பால் உணர்த்துகிறார் 

Monday 15 May 2017

பெரியாழ்வார் திருமொழி -03.07.01

பெரியாழ்வார் பல பாடல்கள் எழுதியுள்ளார்..ஆனால் நான் இவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் இதிலே மகளைப் பற்றி அவர் எழுதியதுதான். மகளின் காதல் பித்தும் ஒரு தாயுமானவராக  அதைப் பற்றிய கவலை ஆட்கொண்டு எழுதியவை. வெகு அழகு. அதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழியோடு இணைந்து எழுதுவதே பொருத்தமாக இருக்கும் :)
பெரியாழ்வார் மூன்றாம் பத்தில் வரும் ஏழாம் திருமொழி இது.

பாடல் :01
ஐய புழுதி உடம்ப
ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை
செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில்சிறு தூதை
யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி
யானோடு கைவைத்து இவள்வருமே.

விளக்கம் :
ஐய புழுதி உடம்பு அளைந்து -  ஐயோ புழுதியை உடம்பு முழுக்கப் பூசி
இவள் பேச்சும்  அலந்தலையாய்  - இவள் பேச்சும் கலங்கி குழம்பிப்போய்
செய்ய நூலின் சிற்றாடை  - சிவந்த நூலில் செய்த சின்ன ஆடையைக் கூட
செப்பின் உடுக்கவும் வல்லள் அல்லள்  - செம்மையாக உடுக்கவும் வல்லவளாக இல்லை
கையினில் சிறு தூதையோடு  - கையினில் சிறு மண் பானையோடு இருக்கிறாள்
இவள் முற்றில் பிரிந்தும் இலள் - அதை  இவள் முறத்தைப்  பிரியவும் இல்லை
பை அரவணைப் பள்ளியானோடு  - பாம்பினை அணைத்து பள்ளி கொண்டவனோடு
கை வைத்து இவள் வருமே - கை வைத்து இவள்  வருகிறாளே இவளை என்ன செய்வது ?

எத்தனை பெரிய பிள்ளைகள் ஆயினும் பெற்றவருக்குப் பிள்ளைகள் குழந்தைகள் தான். மண்ணில் விளையாடி புழுதியுடன் இருக்கும் மகளைப் பார்த்து அரற்றுகிறார்.
 ஐயோ , புழுதியை உடம்பு முழுக்கப் பூசி , பேச்சும் மலங்க மலங்க கால் எது தலை எது என அறியாமல்  குழம்பிப்போய் , சிவந்த நூலில் செய்யப்பட்ட சிற்றாடையை (மார்பினில் கட்டும் சிற்றாடையைக் கூடச் செம்மையாக  உடுக்கவும் மாட்டாதவளாக , கையில் மண்ணால் செய்யப்பட்ட   பானையைக்  கொண்டு விளையாடிக்கொண்டு  முறத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறாள்  இவள்.. முறம் பாம்பணையானை நினைவூட்டியதோ என்னவோ ? ஏதோ அவனையையே கையில் பிடித்தது போல வருகிறாளே இவள் இது சரியாக வருமோ ?
இன்னமும் மண்ணில் விளையாடுகிறாள். ஐயோ  அந்தப் புழுதி முழுக்க உடம்புல இருக்கு. ஒழுங்கா ஓர் உடை கூட உடுக்க மாட்டாள்..  குதலைகால் புரியல மயங்கிக் கிடக்கிறா .. பானையையும் சுளகையும் கையில் வைத்துக்கொண்டு திரிகிறாள்.  இவள் போய் அந்த பாம்பணையானைக் கைப்பிடிக்கும்  ஆசையோடு இருக்கின்றாளே இது சரியாகுமோ ?