Thursday 3 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.10

பாடல் : 10
மாயவன் பின்வழி சென்று
வழியிடை மாற்றங்கள் கேட்டு
ஆயர்கள் சேரியி லும்புக்கு
அங்குத்தை மாற்றமு மெல்லாம்
தாயவள் சொல்லிய சொல்லைத்
தண்புது வைப்பட்டன் சொன்ன
தூய தமிழ்ப்பத்தும் வல்லார்
தூமணி வண்ணற்கா ளாரே.

விளக்கம் : 

மாயவன் பின்வழி சென்று - மாயவன் கண்ணன் உடன் பின்னே சென்று
வழி இடை மாற்றங்கள் கேட்டு - செல்கின்ற  வழி இடையில்  அவன் சொல்கின்ற பேச்சுக்கு மாற்றில்லாமல் சொன்னது எல்லாம் கேட்டு

ஆயர்கள் சேரியிலும் புக்கு - ஆயர்கள் கூடி வாழும் சேரியிலும் புகுந்து
அங்குத்தை மாற்றமும் எல்லாம்  - அங்கிருக்கும்  ஆட்கள் சொல்வதையும் எந்த மறுப்பும் இல்லாமல் கேட்டு
தாயவள் சொல்லிய சொல்லைத் -வாழ்கின்ற மகள் பற்றி ,  தாயவள் சொல்லிய சொல்லைத்
தண் புதுவைப் பட்டன் சொன்ன - குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டன் சொன்ன
தூய தமிழ்ப் பத்தும் வல்லார் - தூய தமிழ்ப் பாடல்கள் பத்தும் சொல்ல வல்லவர்கள்
தூமணி வண்ணற்கு ஆளாரே - தூய்மையான மணி வண்ணனுக்கு ஆளாவார்கள்..(அவனுக்கு நெருக்கமாவார்கள் )

மாயவன் கண்ணன் பின் சென்று ,செல்லும் வழியில் எல்லாம் அவன் சொன்ன சொல்லை எந்த மறுப்பும் இன்றி அதற்கு ஒரு மாற்று பேச்சு பேசாமல், ஆயர்கள் சேர்ந்து வாழ்கின்ற சேரிக்கு சென்று (சேர்ந்து வாழ்கின்ற இடம் சேரி..) அங்குள்ளவர்கள் பேச்சுக்களுக்கும் மறுப்பின்றி கேட்டு நடக்கின்றாள் ஆண்டாள். (அவள் பிடிவாதம் அழுத்தம் எல்லாம் கண்ணனைச் சேர்வதற்காக மட்டுமே ஆனால் கண்ணனுக்கு அடங்கிய மனைவி அவன் ஆளுமையை ரசித்து விரும்புகின்ற மனைவியே )
இப்படி திருமணம் செய்தால் என்னவாகுமோ என்றெல்லாம் அம்மாவின் கவலைப் பேச்சுக்களைக் கேளாத மகள் பற்றி, குளிர்ந்த வில்லிபுத்தூர் பட்டர் பிரான் பெரியாழ்வார்  தாயாக தன்னை நினைத்துச் சொன்ன , தூய தமிழ்ப்  பாடல்கள் பத்தையும் பாட வல்லவர்கள் ,தூய்மையான அந்த மணி வண்ணனுக்கு ஆள் ஆவார்கள்..அவனின் அன்பைப் பெற்று நெருக்கமானவர்கள் ஆவார்கள்.

பெரியாழ்வார் திருமொழி மூன்றாம் பத்தில் உள்ள எட்டாம்பகுதி இனிதே நிறைவுற்றது!!!
மகளுக்காக, ஒரு தாயுமானவராக பெரியாழ்வார் எழுதிய இருபது பாடல்களும் இனிதே நிறைவடைந்தன. மகள் மீதான அன்பும் வாஞ்சையும் தோய்ந்த பாசுரங்கள் உங்கள் மனத்தையும் மயக்கி இருக்கும் என நம்புகிறேன்.
படித்தமைக்கு நன்றி !


Wednesday 2 August 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.09

பாடல் : 09

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை
வெள்வரைப் பின்முன் எழுந்து
கண்ணுறங் காதே யிருந்து
கடையவும் தான்வல்லள் கொலோ
ஒண்ணிறத் தாமரைச் செங்கண்
உலகளந் தான்என் மகளை
பண்ணறை யாப்பணி கொண்டு
பரிசற ஆண்டிடுங் கொலோ.

விளக்கம் :

வெண்ணிறத் தோய்தயிர் தன்னை - வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை
வெள்வரைப் பின் முன் எழுந்து - வெள்ளி முளைத்த பின்  ,    கிழக்கு வெளுக்கும் முன்பதற்கு முன்னாக எழுந்து
கண் உறங்காதே இருந்து - தூங்காமல் இருந்து
கடையவும் தான் வல்லள் கொலோ - கடையவும் தான் வல்லமை பெற்றவளோ ?
ஒண் நிறத்  தாமரைச் செங்கண் உலகளந்தான் -ஒளிரும்   தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான்
என் மகளை பண் அறையாப் பணி கொண்டு - என் மகளைஇது போன்ற தகுதியற்ற வேலைகளைச் செய்யச்சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பெருமை கெடும் படி ஆள்வானோ ?

வெண்மை நிறம் கொண்ட , தோய்த்த  தயிரை ,(பால் தோய்த்து தயிர் ஆக்கி தயிர் தோய்த்து வெண்ணெய் ஆக்கி என்று வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறாள் ) வெள்ளி முளைத்த பின்னும் , சூரியன் உதிப்பதற்கு முன்னும் தூங்காமல் இருந்து இதே வேலையாகச் செய்வாளோ ?கடைந்து கொண்டே இருக்கும் வல்லமை பெற்றவளோ ?(என் பெண் அவ்வளவு வேலை செய்து பழக்கம் இல்லையே..வேலை செஞ்சு பழக்கம் இல்லாத பெண்ணை இடுப்பு ஒடிய வேலை வாங்கினா அவள் எப்படிச் செய்வாளோ ? )
ஒளிரும் தாமரை போன்ற சிவந்த கண்களை உடைய உலகளந்தான் , என் மகளை இது போன்ற சீரற்ற வேலை கொண்டு ,அவள் பெருமை கெடும் படி ஆள்வானோ?
 பரிசேலோர் எம் பாவாய் எனப் பாடின பெண் ஆயிற்றே !

Saturday 29 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.08

பாடல் : 08

குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொலோ.

விளக்கம் :
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் - நற் குடியில் பிறந்தவர்கள் செய்யும் குணம் ஒன்றும் இல்லை அதற்குத் தக்க செயல்கள் செய்யாதவன்
அந்தோ நடை ஒன்றும் செய்திலன் - அந்தோ..உலகத்து நடைமுறை என ஒன்று உண்டு அதை எதுவும் செய்யாதவன்
நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நங்கையே ..நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க - இடை இருபக்கமும் வளைய
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி - உடம்பு இளைத்து இளைத்து என் மகள்   ஏங்கி கடைய  கயிற்றைப்பற்றி
வாங்கிக்கை தழும்பு ஏறிடும் கொலோ - இழுத்ததில் கைகளில் தழும்பு ஏறிடுமோ ?

பெரியாழ்வாரோ வேள்வி செய்யும் தொழில் கொண்டவர். ஆனால் கண்ணனோ ஆயர் குலம் . இப்படி சாதி விட்டு சாதி மணம் ஆண்டாளுக்கு. நம்ம சாதி வழக்கப்படி எதுவும் செய்யாம பொண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் கண்ணன். நடைமுறைச் சடங்குகள் எதுவும் செய்யல .
நங்கையே..நந்தகோபன் மகன் கண்ணனுக்கு வாக்கப்பட்ட என் மகளானவள் அவங்க வீட்டிலே ,தயிர் கயிறை இழுத்து இழுத்து கடையும் போது , அவளின் இடைகள் வளைந்து துவள, கைகள் கயிறை இழுத்ததில் தழும்பு ஏறி விடுமோ? (வேலை செய்தே பழக்கம் இல்லாதவங்க புதுசா ஒரு வேலையைச் செய்யும்போது கைல காப்பு வந்துடும்..அங்கங்க தழும்பு ஆகிடும்..ஒத்த மகள் என்று பெரியாழ்வார் ரொம்பச் செல்லமா வளர்த்துட்டார். புகுந்த வீட்டில் புதுசா வேலை செய்யப் போய்,  புள்ள என்ன பாடுபடுதோ..இடை இளைக்குமோ , கை தழும்பு ஏறுமோன்னு மனசு விசனப்படுது அவருக்கு.

Friday 28 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.07

பாடல் : 07

அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொலோ.

விளக்கம் :

அண்டத்து அமரர் பெருமான் - இப்பேரண்டத்தின் பெருமான் ,  அமரர்களுக்கு எல்லாம் தலைவனான எம்பெருமான்
ஆழியான் இன்று என் மகளை - ஆழியைக் கொண்ட ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் - பண்டங்களைக் குறை சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பரிசுகள் கெடும்படி ஆள்வானோ ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து - அவளை அவன் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பம் நடத்தி
கோவலப் பட்டம் கவித்து - அவளுக்கு  கோவலர் தலைவி  என்ற பட்டம் கொடுத்து நல்லபடியாக நடத்துவானோ
பண்டை மணாட்டிமார் முன்னே - அன்றி ,  அவன் அவளுக்கு முன்னால் கட்டிய மனைவிமார் முன்னே
பாதுகாவல் வைக்கும் கொலோ - பத்தோடு பதினொன்று என்று பேசி  அவளை வெறுமனே பாதுகாவல் வைத்து விடுவானோ ?

இப்பேரண்டத்தின் பெருமான் ,அமரர் தலைவன் ,ஆழிச் சக்கரம் கொண்ட திருமால் ,இன்று என் மகளை எப்படி வைத்திருப்பானோ? பண்டம் (உணவு ) .அவள் சமைக்கும் உணவுகளைக் குறை சொல்லி அவன் திட்டுவானோ? (வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரே பெண் .சமையல் முன்னப்பின்ன இருக்கும். அதுக்கு எவ்ளோ திட்டு வாங்குகிறாளோ பாவம் )
அவளைச் சிறப்புடன் நடத்தாமல் வெறும் பெண்டாட்டியாக மட்டுமே நடத்துவானோ ?
கொண்டு செலுத்துதல் என்ற சொல்லாடல் இன்றும் என் அம்மா சொல்வதுண்டு. ஓர் செயலை நல்லபடியாக நடத்துதலை அப்படி,கொண்டு செலுத்துதல் என்பார்கள். அது போல ஆண்டாளைக் கட்டிக்கொண்டு போய் நன்கு கொண்டு செலுத்துவானோ?குடி வாழ்ந்து அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து அவளை நடத்துவானோ அன்றி அவனுக்கு இதற்கு முன் உள்ள மற்ற மனைவிமார்கள் முன்னே , இவளும் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக நடத்தி ,அவளைக் காவலாக வைப்பானோ ?
(எவரேனும் வீட்டில் தேவை இல்லாமல் இருந்தால் இது எதுக்கு எனும் கேள்வி எழும் போது ஆங்..காவலுக்கு என்று நக்கலாக இன்றும் பதில் அளிப்போரைக் காணலாம்..அது போல இப்பெண்ணைத் திருமணம் செய்து முறையாக குடும்பம் நடத்துகிறானோ அல்லது அங்கே சிறுமைப்படுத்துகிறானோ என்று மருமகன் மீது அச்சம் கொள்கிறார் )


Thursday 27 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.06

பாடல் : 06
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா
கைப்பற்றுங் கொலோ.

விளக்கம் :
வேடர் மறக் குலம் போலே - வேட்டை ஆடும் வேடர் வீரக் குலம் போல
வேண்டிற்றுச் செய்து என் மகளை - விரும்பியபடி  எல்லாம் செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு குடி வாழும் கொலோ - கூட்டமாக கூடி அழைத்து அத்தோடு மட்டுமே குடி வைத்துக் கொண்டு வாழ்க்கை  வாழ்வானோ ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து  - இந்த நாடும் அதிலுள்ள மக்களும் அறிய நல்லபடியாக திருமணம் செய்து
சாடி இறப்  பாய்ந்த பெருமான் -  எதிரிகளைச் சாடி வெல்லும் பெருமான்
தக்கவா கைப்பற்றும் கொலோ - அவளைத் தக்கவாறு கைப்பற்றுவானோ ?

மாடு மேய்ப்பவன் எப்படி மறவன் ஆனான் என்ற குழப்பம் வேண்டாம்..அக்காலத்தில் ஆநிரை காப்போர் என்று உண்டு.எதிரிகளிடம் இருந்து தங்கள் மாடுகளைக் காப்பவர்கள்.அப்படியான  வீர மறவர் குலத்தில் , திருமணம் என்பது எப்படி நடக்குமோ..தாங்கள் விரும்பியபடி , கூட்டமாக கூடி நின்று வரவேற்று ஏதேனும் ஓர் இடத்தில் குடி வைத்தாலே முடிந்தது என்று முடித்து விடுவார்களோ ?
ஆனா நம்ம வழக்கம் அப்படி இல்லையே..(ஆண்டாள் தன்னை மாடு மேயப்பவள் எனச் சொல்லிக் கொண்டாலும் வளர்த்தவர் பெரியாழ்வார் இல்லையா..ஆகவே அவர் தன் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்..ஆண்டாள் வாரணம் ஆயிரம் பாடலில் ஆசைப்படுவாளே அது போல..)
ஊரறிய நாடறிய வந்து, முறைப்படி  பெண் கேட்டு இப்படி நல்லதோர் கல்யாணம் செய்ய வேண்டுமே..எதிரிகளைச் சாடி ,அவர்கள் இற வெல்லும் பெருமான் அவளைத் தக்கவாறு (அவளின் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக )  அவளைக் கைப்பிடிப்பாரோ ?
ஆண்டாள் சொல்வாளே..
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..

அப்படியாக என் மகளை எங்கள் சம்பிரதாய சடங்கு வழக்கப்படி அந்தப் பெருமான் திருமணம் செய்வானோ? என்று ஏங்குகிறார்..


Tuesday 25 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.05

பாடல் : 05

தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னுங் கொலோ.

விளக்கம் :
தம்மாமன் நந்தகோபாலன் - யசோதை ,  தம் மாமனான நந்தகோபாலனுடன்  இணைந்து வரவேற்று
தழீஇக் கொண்டு என் மகள் தன்னை - கோதையை  அன்போடு  ஆரத் தழுவிக்கொண்டு,  என் மகள் தன்னை
செம்மாந்து இரு என்று சொல்லிச் -   மன தைரியத்தோடு இரு எனச் சொல்லி
செழுங்கயர் கண்ணும் செவ்வாயும் - அழகிய மீன் போன்ற கண்ணும் சிவந்த இதழ்களும்
கொம்மை முலையும் இடையும் - திரண்ட முலையும் அழகிய இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு - பரந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும் கண்டுவிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர் - இப்பேர்ப்பட்ட மகளைப் பெற்ற தாய்
இனித் தரியார் என்னும் கொலோ - இனி இவளைப் பிரிந்து உயிர் தாங்கி இருக்க மாட்டாள் என்று சொல்வார்களோ ?

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடல் வருகின்றது.. யசோதை தன் மகளிடம் எப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என பெரியாழ்வார் நினைத்தாரோ அதை இப்பாடலில் யசோதை செய்தது போன்ற எண்ணத்தில் வருகிறது இப்பாசுரம்.
கணவரை மாமா என்றழைக்கும் பழக்கம் உண்டு (என் அம்மா இவ்வழியே :) )
ஆகவே யசோதை ,தம் மாமனான நந்தகோபாலனோடு ,மருமகள் கோதையை வரவேற்கும் விதமாக , அவளை ஆரத் தழுவிக் கொண்டு, புது இடத்தில் அச்சத்துடனும் மிரட்சியுடனும் தலை குனிந்து நின்றிருக்கும் கோதையை செம்மாந்து இரு எனச் சொல்லி (அச்சம் தவிர் நிமிர்ந்து நில் என்று சொல்லி )
(புது இடத்தில் அன்னியமாக உணரும் பெண்ணை இது உன் வீடு இயல்பாக இருக்க வைக்க ஆசுவாசம் செய்தல் ) அவளை நன்கு உற்று நோக்குகிறார் யசோதை. தன் மகனுக்குப் பொருத்தமான பெண்ணாக அவள் இருக்கிறாளா (சோடிப் பொருத்தம் பார்ப்பாங்களே...) அழகில் எப்படி இருக்கிறாள் ?
அழகிய மீன் போன்ற கண்கள் ,சிவந்த இதழ்கள், திரண்ட முலைகள் ,குறுகிய இடை என்று அழகில் ஓர் குறை சொல்ல முடியாத படி இருக்கும் மருமகளைக் கண்டு, இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பிரிந்து அவளின் தாயார் அங்கு எங்ஙனம் உயிர் தரித்து இருக்கிறாளோ, பிரிவாற்றாமை கொண்டு வாழ்வாளோ மாட்டாளோ என்று தன் சம்பந்தி பற்றிக் கவலை கொள்கின்றாள்..







Saturday 15 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.04

பாடல் : 04

ஒருமகள் தன்னை யுடையேன்
உலகம் நிறைந்த புகழால்
திருமகள் போல வளர்த்தேன்
செங்கண்மால் தான்கொண்டு போனான்
பெருமக ளாய்க்குடி வாழ்ந்து
பெரும்பிள்ளை பெற்ற அசோதை
மருமக ளைக்கண்டு கந்து
மணாட்டுப்பு றம்செய்யுங் கொலோ.

விளக்கம் :

ஒருமகள் தன்னை உடையேன் - ஒருமகள் எனக்கு இருக்கிறாள்
உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன் - உலகம் நிறைந்த புகழ்பெற்ற திருமகளைப் போல அவளை வளர்த்தேன்
செங்கண்மால்  தான் கொண்டு போனான் - அவளை செம்மையான கண்களை உடைய மாலவன் தன்னோடு கொண்டு போனான்
பெருமகளாய் ஆய்க்குடி வாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை - ஆயர் குடிக்கே பெருமகளாக வாழ்ந்து பெருமை மிக்க பிள்ளையைப் பெற்ற அசோதை
மருமகளைக் கண்டு உகந்து மணாட்டுப் புறம் செய்யும் கொலோ - மருமகளான என் மகளைக் கண்டு விரும்பி மகிழ்ந்து ,மருமகளாக ஏற்று குடித்தனம் வைப்பாளோ ?

அழகான பாசுரம் இது. முந்தைய பத்துப் பாடல்களில் காறை  பூணும் பாடலும், இந்த ஒரு மகளை உடையேன் பாடலும் தான் மிக ஈர்த்து, இந்த இருபது பாடல்களை எழுதத் தூண்டியவை. மகளுக்காக தாய் உரை செய்தது போல அவர் எழுதி இருந்தாலும் அந்தத் தகப்பன்சாமியின் அன்பு நிறைவாகத் தெரிந்தது எனக்கு .
ஒரு மகளை உடையவன் நான். அவளே என் உடைமை. (தட் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு மொமென்ட் )  திருமகள் என்றால் அறியாதோர் இலர். அப்பேர்ப்பட்ட திருமகளைப் போல அவளை நான் வளர்த்தேன். (என் வீட்டு மகாலட்சுமி ஐயா கோதை )
செம்மையான கண்களை உடைய திருமால் என் வீட்டுத் திருமகளை, தான் கொண்டு போனான்.
அவனுடைய அம்மா ஆயர் குடிக்கே பெருமகள் . பெரும் பிள்ளை பெற்றவள் பின்னே அந்த கண்ணனுக்கே அம்மா என்றால் சும்மாவா..ரொம்பப் பெரிய்ய்ய்ய ஆளு. (வளர்த்தவள் என்று சொல்லி யசோதையை சிறுமைப்படுத்திட முடியாது .ஏன்னா பெத்த பாசத்த விட வளர்த்த பாசம் அதிகம். அதனால் அவளைப் பிரிச்சுப் பார்க்க முடியாது )
என் பொண்ணுக்கு மாமியார். மணாட்டுப் பெண் -மருமகளை நல்லபடியா பார்த்துக்குவாளா ..அவளை விரும்பி ஏற்று கண்ணன் கூட குடித்தனம் நடத்த விடுவாளா?(சம்பந்தகாரம்மா மேல பயம் +மரியாதை .
அதனால் வலிய இந்தப் பாசுரத்தில் யசோதையை கொலுவீற்றுகிறார் பெரியாழ்வார்.