Thursday 18 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.03

பாடல் : 03
பொங்கு வெண்மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கலுறில்
சங்கு சக்கரம் தண்டு வாள்வில்லு
மல்லது இழைக்க லுறாள்
கொங்கை இன்னம் குவிந்தெ ழுந்தில
கோவிந்த னோடு இவளை
சங்கை யாகிஎன் னுள்ளம்
நாள்தொறும் தட்டுளுப் பாகின்றதே.

விளக்கம் :
பொங்கு வெண்மணல் கொண்டு - நிறைய  வெண்ணிற நுண் மணல் கொண்டு
சிற்றிலும் முற்றத் திழைக்கல் உறில் - சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலும்
சங்கு சக்கரம் தண்டு வாள் வில்லும் அல்லது இழைக்கல் உறாள் - சங்கு சக்கரம் தண்டு உடைய வாள் வில்லும் தவிர வேறு  இன்னபிறவற்றை வரைவதில்லை
கொங்கை இன்னம் குவிந்து எழுந்தில - அவள் கொங்கைகள் கூட திரண்டு இன்னமும் எழவில்லை..வளரவில்லை
கோவிந்தனோடு இவளை - கோவிந்தனோடு இவளை
சங்கையாகி என் உள்ளம் -   ஐயத்தினால் அச்சமாகி  என் உள்ளம்
நாள்தோறும் தட்டுளுப்பாகின்றதே - நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

நிறைய ,வெண்ணிற நுண்மணல் கொண்டு சிறிய வீட்டினை முற்றத்தில் கட்டுகின்ற போதிலுமே கூட, மாலுக்கு உரிய சங்கு ,சக்கரம் , தண்டு ,(கதை ) ,வாள் ,வில் என்ற ஐம்படைத் தாலிகள் தவிர வேறு ஒன்றை வரைய மாட்டேன் என்கிறாள்.. அவளின் கொங்கைகள் கூட இன்னமும் சரியாக வளரவில்லை. இப்படியாப்பட்ட பெண்ணை கோவிந்தனோடு நினைத்துப் பார்க்கவே நடுங்குகிறது உள்ளம். அவனே கதி எனக் கிடக்கின்றாள்.. அதை நினைத்து எப்படி இவளை இதிலிருந்து மீட்டப் போகின்றேனோ என்ற ஐயத்தில் அச்சம் கொண்டு மனம் நாள்தோறும் தடுமாற்றம் ஆகின்றதே

முல்லை நிலத்தின் கடவுள் மாயோன் - காடும் காடு சார்ந்த இடத்தில் வேட்டையைத் தொழிலாகக் கொண்டவர்களுக்கு ஐம்படை ஆயுதங்கள் சங்கு,சக்கரம் ,தண்டு ,(கதை ) வாள் ,வில்..(இதுதான் பின்னாளில் விஷ்ணுவுக்கு ஆகி வந்தது  )


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!