Monday 15 May 2017

பெரியாழ்வார் திருமொழி -03.07.01

பெரியாழ்வார் பல பாடல்கள் எழுதியுள்ளார்..ஆனால் நான் இவற்றை மட்டும் தேர்ந்தெடுக்கக் காரணம் இதிலே மகளைப் பற்றி அவர் எழுதியதுதான். மகளின் காதல் பித்தும் ஒரு தாயுமானவராக  அதைப் பற்றிய கவலை ஆட்கொண்டு எழுதியவை. வெகு அழகு. அதை ஆண்டாளின் நாச்சியார் திருமொழியோடு இணைந்து எழுதுவதே பொருத்தமாக இருக்கும் :)
பெரியாழ்வார் மூன்றாம் பத்தில் வரும் ஏழாம் திருமொழி இது.

பாடல் :01
ஐய புழுதி உடம்ப
ளைந்துஇவள் பேச்சு மலந்த லையாய்
செய்ய நூலின் சிற்றாடை
செப்பி னுடுக்கவும் வல்ல ளல்லள்
கையி னில்சிறு தூதை
யோடு இவள் முற்றில் பிரிந்துமிலள்
பைய ரவணைப் பள்ளி
யானோடு கைவைத்து இவள்வருமே.

விளக்கம் :
ஐய புழுதி உடம்பு அளைந்து -  ஐயோ புழுதியை உடம்பு முழுக்கப் பூசி
இவள் பேச்சும்  அலந்தலையாய்  - இவள் பேச்சும் கலங்கி குழம்பிப்போய்
செய்ய நூலின் சிற்றாடை  - சிவந்த நூலில் செய்த சின்ன ஆடையைக் கூட
செப்பின் உடுக்கவும் வல்லள் அல்லள்  - செம்மையாக உடுக்கவும் வல்லவளாக இல்லை
கையினில் சிறு தூதையோடு  - கையினில் சிறு மண் பானையோடு இருக்கிறாள்
இவள் முற்றில் பிரிந்தும் இலள் - அதை  இவள் முறத்தைப்  பிரியவும் இல்லை
பை அரவணைப் பள்ளியானோடு  - பாம்பினை அணைத்து பள்ளி கொண்டவனோடு
கை வைத்து இவள் வருமே - கை வைத்து இவள்  வருகிறாளே இவளை என்ன செய்வது ?

எத்தனை பெரிய பிள்ளைகள் ஆயினும் பெற்றவருக்குப் பிள்ளைகள் குழந்தைகள் தான். மண்ணில் விளையாடி புழுதியுடன் இருக்கும் மகளைப் பார்த்து அரற்றுகிறார்.
 ஐயோ , புழுதியை உடம்பு முழுக்கப் பூசி , பேச்சும் மலங்க மலங்க கால் எது தலை எது என அறியாமல்  குழம்பிப்போய் , சிவந்த நூலில் செய்யப்பட்ட சிற்றாடையை (மார்பினில் கட்டும் சிற்றாடையைக் கூடச் செம்மையாக  உடுக்கவும் மாட்டாதவளாக , கையில் மண்ணால் செய்யப்பட்ட   பானையைக்  கொண்டு விளையாடிக்கொண்டு  முறத்தையும் கையில் வைத்துக்கொண்டு இருக்கிறாள்  இவள்.. முறம் பாம்பணையானை நினைவூட்டியதோ என்னவோ ? ஏதோ அவனையையே கையில் பிடித்தது போல வருகிறாளே இவள் இது சரியாக வருமோ ?
இன்னமும் மண்ணில் விளையாடுகிறாள். ஐயோ  அந்தப் புழுதி முழுக்க உடம்புல இருக்கு. ஒழுங்கா ஓர் உடை கூட உடுக்க மாட்டாள்..  குதலைகால் புரியல மயங்கிக் கிடக்கிறா .. பானையையும் சுளகையும் கையில் வைத்துக்கொண்டு திரிகிறாள்.  இவள் போய் அந்த பாம்பணையானைக் கைப்பிடிக்கும்  ஆசையோடு இருக்கின்றாளே இது சரியாகுமோ ?


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!