Wednesday 17 May 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.02

பாடல் : 02
வாயில் பல்லும் எழுந்தில 
மயிரும் முடிகூ டிற்றில
சாய்வி லாத குறுந்தலைச் 
சிலபிள் ளைகளோ டிணங்கி
தீயி ணக்கிணங் காடிவந்துஇவள் 
தன்னன்ன செம்மை சொல்லி
மாயன் மாமணி வண்ணன் 
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
வாயில் பல்லும் எழுந்தில - வாயில் பல்  போட்டுப் பேசும் அளவுக்கு பேச்சு வரல காதலில் வீழ்ந்த பின்
மயிரும் முடி கூடிற்று இல - நன்கு  தலை சீவிக் கொண்டிருந்தவள் இப்பொழுது ஒழுங்காகத் தலையும் வாருவதில்லை
சாய்வு இலாத குறுந்தலைச் - (சாய்வு இல்லாத -குனியாத தலை )  தலை வணங்காத (நிமிர்ந்து நடக்கின்ற
சில பிள்ளைகளோடு இணங்கி - சில பிள்ளைகளோடு இணங்கி
தீ இணக்கு இணங்கி ஆடி வந்து - தீய இணக்கு இணங்கி (சேர்க்கை சரியில்லை சேரக் கூடாத பிள்ளைகளோடு சேர்ந்து விளையாடிட்டு வந்து )
இவள் தன் அன்ன செம்மை சொல்லி -எங்கே சென்று ஆடிட்டு வந்தீர்கள் எனக் கேட்டால்   இவள் தன்னை ஒத்த (தனக்கு ஏற்றாற்போல் ) பொய்கள் சொல்லி மழுப்புகிறாள்
மாயன் மாமணி வண்ணன் மேல் - மாயன் மாமணி வண்ணன் மேல்
இவள் மால் உறுகின்றாளே - இவள் மயக்கம் கொள்கின்றாளே


எவரேனும் ஒரு சுடு சொல் சொல்லிட்டா என் அம்மா சொல்வார்கள் எவ்வளவு திண்ணக்கம் நாக்கு மேல பல்லைப் போட்டு இப்படி ஒரு சொல்லு சொல்லிட்டானே என்று..கிராமத்து வழக்கு இது.  அப்படி அடுத்தவரை பாதிக்கும் வண்ணம் பேசுவதற்கு பல்லுப் போட்டுப் பேசுதல் என்பார்கள்.. அது போல வெடுக்கென்று எல்லாரிடமும் பேசிக்கொண்டு இருந்த பெண் தான் கோதை. ஆனால் பாருங்கள் திடீரென பேச்சு வரல..என்ன ஆச்சு இவளுக்கு ?

பெண்ணாகச் சீவி அலங்கரிப்பவள் இப்ப தலை கூட ஒழுங்காகச் சீவாமல் போட்டு தலை மயிர் ஆனது கண்டேத்தமாகக் கிடக்கு.

குனிந்த தலை நிமிராம நடப்பது நம் பெண்கள் பண்பு. ஆனால் நிமிர்ந்து நடக்கும் பெண்களோடு சேர்ந்து கொண்டு வெளியே போய் ஆடிட்டு வருகிறாள் கோதை. தீ இணக்கு ..சேர்க்கை சரியில்லை என்பார்களே நம் அம்மா . சேரக் கூடாத நட்புடன் சேர்வதாகக் குற்றம் சாட்டுகிறார் .

(இதுதான் தாய்மை..என்னதான் நம்மபுள்ள தப்பு செய்தாலும் சேர்க்கை சரியில்லை என்று அடுத்த பிள்ளையால் தான் தன் பிள்ளை கெடுவது போலப் பேசுவது )
பொல்லாத பிள்ளைகளோடு சேர்ந்து அவர்களுடன் விளையாடி விட்டு வந்து  ,
எங்கே சென்று வருகிறாய்  என இவளிடம் கேட்டால் ,தனக்குத் தகுந்தாற்போல் ஏதேதோ பொய் சொல்லி மழுப்புகிறாள்

அந்த மாயன் மணிவண்ணன் மேல் இப்படி மயங்கிக் கிடக்கிறாளே..(மகளின் தடுமாற்றங்கள் காதலால் வந்தவை எனக் குறிப்பால் உணர்த்துகிறார் 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!