Tuesday 17 May 2016

41.ஊடல் கூடலுணர்தல் புணர்தலை

ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
பாடல் :41
ஊடல் கூட லுணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறைபுக ழாய்ச்சியர்
கூட லைக்குழற் கோதைமுன் கூறிய
பாடல் பத்தும்வல் லார்க்கில்லை பாவமே

விளக்கம் :

ஊடல் கூடல் உணர்தல் -கண்ணனுடனான ஊடலும் அதன்பின்னான கூடலும் ஊடல் கூடல் இன்பத்தை  உணர்தலும்
புணர்தலை -  இவை யாவற்றையும் உணர்ந்தபின்  புணர்தலும்
நீடு நின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர் - நெடுங்காலம் நிலைத்து நின்ற நிறைந்த புகழுடைய ஆய்ச்சியர்
கூடலைக் குழற் கோதை முன் கூறிய -  சோழி உருட்டி ஆடும் கூடல் விளையாட்டை  அழகிய குழல் (கூந்தல் ) உடைய கோதை கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே -  இந்த பத்துப் பாடல்களையும் பாடும் வல்லவர்க்கு இல்லை பாவமே

முதலில் ஊடல் (செல்லச் சண்டைகள் ) பிறகு சமாதானமாகி கூடல்..இவ்விரண்டு இன்பத்தையும் உணர்தல்..உணர்ந்த பின் புணர்தல்
பிரியாமல் , நெடுங்காலம் நிலைத்து,  கண்ணனோடு நின்ற ஆய்ச்சியர்
சோழி உருட்டி விளையாடும் இந்தக் கூடல் விளையாட்டை , அழகிய கூந்தல் கொண்ட கோதை முன் கூறியவர்கள்  .. ,  கூடல் விளையாட்டை வைத்து கோதை பாடிய இந்த பத்துப் பாடல்களையும் பாடும் வல்லமை பெற்றவர்களுக்கு இல்லை பாவமே..

தான் நினைத்த காதலனை கை கூடுவோமா என்று குறி கேட்டலும் கூடல் விளையாட்டு விளையாடும் போது தன் மனம் கொண்ட மணாளன் வருவானா எனச் சொல்லிச் சொல்லிக் கேட்டதும் கோதையின் மன வேட்கையைத் தெரிவிக்கின்றது.. அவர் வருவாரா ..அவர் வருவாரா.. என்று சோழியிடம் கேட்கிறாள் கோதை..

நாச்சியார் திருமொழி நான்காம் பத்து இனிதே நிறைவுற்றது :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!