Friday 10 February 2017

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

143.பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பாடல் :143
பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே
விளக்கம் :
பருந்தாட்  களிற்றுக்கு அருள் செய்த - பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த
பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்
விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தே கண்டு அமைந்தது பற்றி
விட்டு சித்தன் கோதை சொல் மருந்தாம் என்று தம்மனத்தே - விட்டு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல் மருந்து  என்றே கொண்டு தம் மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - வைத்துக் கொண்டு வாழ்பவர்கள்
பெரும் தாள் உடைய பிரானடிக் கீழ்ப் - பெரிய திருவடிகள் கொண்ட பிரான் அடிக் கீழ்ப்
பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாது என்றும் இருப்பாரே

பருத்த கால்களை உடைய யானைக்கு அருள் செய்த ( முதலையின் பிடியில் மாட்டிக்கொண்ட யானை , வெகு நேரம் போராடி இறுதி நேரத்தில் திருமாலை அழைக்கின்றது.. உடனே  யானைக்கு அருள புவி வருகிறார் திருமால்..அதனைத் துன்பத்தில் இருந்து விடுவித்து   காப்பாற்றி அருள்கிறார்..வைகுந்தம் புகுன்றது திருமாலின் அருள் பெற்ற யானை.. உலகத் துன்பங்களில் எல்லாம் உழன்றாலும் அவன் திருவடிகளை அடைக்கலம் புகும் பொழுது அவன் வந்து காத்து அருள்வான் என்ற நம்பிக்கையை மகள் கோதைக்குக் கொடுத்தவர் பெரியாழ்வார்..
எப்படி..
துப்புடையாரை அடைவதெல்லாம்
சோர்விடத்து துணை ஆவர் என்றே!
ஒப்பிலேன் ஆகிலும் நின்னடைந்தேன்!
ஆனைக்கு நீ அருள் செய்தமையால்!
எய்ப்பு என்னை வந்து நலியும்போது
அங்கு ஏதும் நான் உன்னை நினைக்கமாட்டேன்!
அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்
அரங்கத்து அரவணைப் பள்ளியானே! -  பெரியாழ்வார் திருமொழி 4,10,1

பெரியாழ்வார் 

அடியவர்களைக் காப்பதில் வல்லவர் ஆகிய  உம்மை அடைக்கலம் புகுவது நான் சோர்வடையும் காலத்தில் துணை ஆவாய் என்றே..நான் ஒன்றும் பெரிய தகுதி உடையவன் அல்லன்.ஆனாலும் நின் திருப்பாதம் அடைந்தேன்.அதற்குக் காரணம் ஆனைக்கு நீ அருள் செய்தமையால்.
மரண காலத்தில் இளைப்பு  வந்து இழுத்துக் கொண்டு  கிடக்கும்போது உன்னை நினைக்க மாட்டேன்..(நினைக்க முடியாத அளவுக்கு சுய நினைவு அற்றுப் போய் இருக்கும் சித்தம் கலங்கி இருக்கும் இல்லையா..) ஆகவே அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன் அரங்கனே  என்கிறார் பெரியாழ்வார்..எத்துணை அன்பு.. இப்படித் தன் தந்தை சொல்லித் தந்தது துன்பம் நேர்கையில் ஆனைக்கு அருளாளனை நினைத்துக் கொள் அம்மா..


Image result for vishnu saves elephant

இறுதிவரை துன்பத்தில் உழன்ற கோதை , அதன் விளிம்பில் நின்று இந்தக் கதையை நினைவு கூர்கிறாள்..எப்படி யானையைத் துன்பத்தில் இருந்து விடுவித்தானோ அந்தத் திருமால் அதைப் போலவே தன்னையும் விடுவிப்பான் என்ற நம்பிக்கையையும் வைக்கிறாள் .
அந்தப் பரமன் தன்னை விருந்தாவனத்தில் கண்டீர்களா கண்டீர்களா என்று கேட்டு கண்டோம் என  அடியார்கள் சொன்ன பதிலில்  அங்கேயே அமைந்து போனாள்.. விஷ்ணு சித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை (வில்லிபுத்தூர் கோன் என்ற சொல்லை இங்கே பயன்படுத்தவில்லை..ஏனெனில் அவள் மனம் வில்லிபுத்தூரில் தற்பொழுது இல்லை.விருந்தாவனத்தில் தேடி அலைந்து  ,  அங்கேயே நிலைத்தும்  விட்டது)  சொன்ன சொல்லை மருந்தாக தம் மனத்தே கொண்டு..பிறவிப் பிணியில் இருந்த நீங்க உதவும் மருந்தாகக் கொண்டு வாழ்பவர்கள் பெருமானடிக் கீழ்ப் பிரியாது இருப்பார்கள்..பெருமான் திருவடிகளை விட பாதுகாப்பு இவ்வுலகத்தில் வேறு கிடையாது. அங்கே  துன்பம் நெருங்காமல் நலத்துடன் இருப்பார்கள்.


அன்று அவள் காதல் கைகூடாமல் இருந்திருக்கலாம். ஆனால் எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உனக்கே நான் உறவாக வேண்டும் உனக்கே ஆட்கொள்ள வேண்டும் என்று அவள் வைத்த வேண்டுகோளை காலம் நிறைவேற்றி வைத்திருக்கிறது.எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவளுக்கு 10 நூற்றாண்டில் இராமானுசர் என்ற "அண்ணன்"கிடைத்தார் அவளது வேண்டுதலை நிறைவேற்றியதன் மூலம். அவளின் மாலையை முதன்முதலாக அரங்கனுக்கு எடுத்துச் சென்றார். இன்றும் திருப்பதிக்கு ஆண்டாள் மாலை தான் செல்கின்றது . இந்த இருபதாம் நூற்றாண்டிலும் அவள் புகழ் ஓங்கி நிற்கின்றது. எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பெருமாளின் பெயரை அவளன்றி ஒலிக்க முடியாது..இங்கு திருமால் இருக்கும் வரை நம் குலத் திருமகளும் நீடித்து நிலைத்து நிற்பாள்


நாச்சியார் திருமொழி பதினான்காம் பத்து இனிதே நிறைவுற்றது..ஆண்டாள் திருவடிகளே போற்றி..!!!

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!