Wednesday 1 February 2017

139.தரும மறியாக் குறும்பனைத்

139.தரும மறியாக் குறும்பனைத்
பாடல் : 139
தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சார்ங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம்செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே
விளக்கம் :
தருமம் அறியாக் குறும்பனைத் - நியாயம் என்பது அறியாத குறும்பனைத்
தன் கைச் சார்ங்கம் அதுவே போல் -தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல்
புருவ வட்டம் அழகிய பொருத்தம் இலியைக் கண்டீரே ? - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா ?
உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கருமையாக முகம் செம்மையாய்
உதயப் பருப் பதத்தின் -மலையின் மீது
மேல் விரியும் கதிரே போல்வானை-   விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தே கண்டோமே
 பருப்பதம் - பர்வதம் /மலை
சார்ங்கம் -வில்

கேள்வி : 
தருமம் அறியா குறும்பன்..நியாயம் என்பதே இவனிடம் கிடையாது..இரக்கமற்றவன் பயங்கரக் குறும்பன்..ஏன் இவனிடம் நியாயம் இல்லை என்கிறாள்..பின்னே ? ஒரு பெண் இவ்வளவு கதறுகிறாள் அவனுக்காக ..ஆனால் அவன் வரவே இல்லையே..அவள் காதலை ஏற்றுக் கொள்ளாமல் எங்கே சென்றான் அவன் ? நியாயமாக இது போன்ற பெண் கிடைக்க அவனல்லவா கொடுத்து வைத்திருக்க வேண்டும்..எவ்வளவு காதல் எவ்வளவு ஆசை..இப்படி வெளிப்படையாக ஆசையைச் சொல்லி முழு மொத்தமும் அணு அணுவாகக் காதலிப்பவள் கிடைக்க எவ்வளவு புண்ணியம் செய்திருக்க வேண்டும்..ஆனால் அவன் வரவே இல்லையே சேரவே இல்லையே..இவளைப் புரிந்து கொள்ளாதவன் இரக்கமற்றவன் தானே..நியாயம் அற்றவன் என்று அவள் சொல்வதில் என்ன தவறு ?
குறும்புத் தனங்களால் தானே அவள் மனத்தைக் கொள்ளை கொண்டான்.

தனது கையில் உள்ள வில்லைப் போன்ற புருவம் உடையவன்.  அழகிய புருவம் தான். ஆனால் அவன் கண்களுக்கு அவை பொருத்தம் இல்லை..
இல்லையா? ஏனாம் ? அந்தக் கண்கள் அவளைக் காணாமல் திரிகின்றது..அவளை இரக்கமற்றுக் கொல்கின்றது.. பிறகு எப்படி அந்தப் புருவம் இந்தக் கண்களுக்குப் பொருத்தமானதாக இருக்க முடியும்..இரக்கமற்ற கண்கள் அழகுமில்லை அவை அந்த அழகான புருவத்துக்குப் பொருத்தமும் இல்லை. அதுதான் பொருத்தம் இலி என்கிறாள்.
நியாயம் அறியாதவன் ,வில்லைப் போன்ற அழகிய  பொருத்தமற்ற புருவங்களை உடையவனைக் கண்டீர்களா ?

பதில் : ஆமாம்..கருத்த உருவம் ஆனால் முகம் சிவந்தது எப்படிச் சிவந்து இருந்தது தெரியுமா ? மலைகளின் ஊடே பெரிதாக விரியும் கதிரவனின் கதிர்கள் போன்று இருந்தது..அவனை விருந்தாவனத்தில் கண்டோமே .





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!