Thursday 7 April 2016

34.ஆய்ச்சிமார்களு மாயரு மஞ்சிட

34.ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பாடல் :34
ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே!

விளக்கம் : 

ஆய்ச்சி மார்களும் - ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களும்
ஆயரும் அஞ்சிட -  ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆண்களும் அஞ்சும்படி
பூத்த நீள் கடம்பு ஏறி - பூக்கள் நிறைந்து உயர்ந்த கடம்ப மரம் ஏறி
புகப் பாய்ந்து  - நீரில் உட்புகப் பாய்ந்து குதித்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய - காளியன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய
கூத்தனார் வரில் - கூத்தாடிய கூத்தனார் வரில்
கூடிடு கூடலே ! - நீ கூடிடு கூடலே!

ஆயர் குலப் பெண்களும் ஆண்களும் அஞ்சும்படி , பூக்கள் நிறைந்து, உயர்ந்த கடம்ப மரம் ஏறி , நீரில் தாவி அதன் உட்புகப் பாய்ந்து குதித்து காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய கூத்தனார் (கூத்தாடுபவன் ) என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே!
காளிங்க நடனம் 

யாரோ ஒருவரை குளத்தில் இருந்த பாம்பு பிடிக்க, அதை ஓடிச் சென்று கண்ணனிடம் யாரோ சொல்ல உடனே அவன் பூக்கள் நிறைந்த மிக உயரமான கடம்ப மரத்தின் மீதேறி அங்கிருந்து குளத்தின் மீது பாய்ந்து குதித்து ,  அந்தப் பாம்பினை அடக்கி அதன் மீது நடனம் ஆடினான். அப்படி ஆடுபவனைக் கூத்தன் என்கிறாள் கோதை..அந்தக் கூத்தன் தன்னைச் சேர  வருவான் எனில் நீ கூடிடு கூடலே ! பெருமாள் திருவடி தன் மீது  பட பாக்கியம் வாய்க்கப் பெற்றவன் என்பதால் வாய்த்த காளியன் என்கிறாள் கோதை ..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!