34.ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பாடல் :34ஆய்ச்சி மார்களு மாயரு மஞ்சிட
பூத்த நீள்கடம் பேறிப் புகப்பாய்ந்து
வாய்த்த காளியன் மேல்நட மாடிய
கூத்த னார்வரில் கூடிடு கூடலே!
விளக்கம் :
ஆய்ச்சி மார்களும் - ஆயர் குலத்தைச் சேர்ந்த பெண்களும்
ஆயரும் அஞ்சிட - ஆயர் குலத்தைச் சேர்ந்த ஆண்களும் அஞ்சும்படி
பூத்த நீள் கடம்பு ஏறி - பூக்கள் நிறைந்து உயர்ந்த கடம்ப மரம் ஏறி
புகப் பாய்ந்து - நீரில் உட்புகப் பாய்ந்து குதித்து
வாய்த்த காளியன் மேல் நடமாடிய - காளியன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய
கூத்தனார் வரில் - கூத்தாடிய கூத்தனார் வரில்
கூடிடு கூடலே ! - நீ கூடிடு கூடலே!
ஆயர் குலப் பெண்களும் ஆண்களும் அஞ்சும்படி , பூக்கள் நிறைந்து, உயர்ந்த கடம்ப மரம் ஏறி , நீரில் தாவி அதன் உட்புகப் பாய்ந்து குதித்து காளிங்கன் என்ற நாகத்தின் மீது நடனம் ஆடிய கூத்தனார் (கூத்தாடுபவன் ) என்னைக் கூட வருவார் எனில் நீ கூடிடு கூடலே!
காளிங்க நடனம் |
யாரோ ஒருவரை குளத்தில் இருந்த பாம்பு பிடிக்க, அதை ஓடிச் சென்று கண்ணனிடம் யாரோ சொல்ல உடனே அவன் பூக்கள் நிறைந்த மிக உயரமான கடம்ப மரத்தின் மீதேறி அங்கிருந்து குளத்தின் மீது பாய்ந்து குதித்து , அந்தப் பாம்பினை அடக்கி அதன் மீது நடனம் ஆடினான். அப்படி ஆடுபவனைக் கூத்தன் என்கிறாள் கோதை..அந்தக் கூத்தன் தன்னைச் சேர வருவான் எனில் நீ கூடிடு கூடலே ! பெருமாள் திருவடி தன் மீது பட பாக்கியம் வாய்க்கப் பெற்றவன் என்பதால் வாய்த்த காளியன் என்கிறாள் கோதை ..
No comments:
Post a Comment
மறுமொழி இடுக!