Friday 29 April 2016

38.ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி

ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
பாடல் : 38
ஆவ லன்புட யார்தம் மனத்தன்றி
மேவ லன்விரை சூழ்துவ ராபதிக்
காவ லன்கன்று மேய்த்து விளையாடும்
கோவ லன்வரில் கூடிடு கூடலே

விளக்கம் :
ஆவலும் அன்பும் உடையார்தம் மனத்தன்றி - ஆவலும் அன்பும் உடையவர்களின் மனத்திலன்றி
மேவலன் - மேவு செய்யாதவன் (வேறெங்கும் இல்லாதவன்)
விரை சூழ் துவராபதிக் காவலன் - நறுமணம் சூழ்ந்த துவரா பதிக்  காவலன்
கன்று மேய்த்து விளையாடும் கோவலன் - கன்று மேய்த்து விளையாடும் ஆயர் குலத் தலைவன்
வரில் கூடிடு கூடலே ! - வருவார் எனில் கூடிடு கூடலே

தன் மீது ஆவலும் அன்பும் உடையவர்களின் மனத்தில் அன்றி மேவு அலன் .. அடியவர் மனமே கடவுளின் இருப்பிடம் என்கிறாள் கோதை. அங்கு தவிர வேறெங்கும் இருக்க மாட்டாராம்..மனமே முருகனின் மயில் வாகனம் என்ற பாடல் ஏனோ நினைவுக்கு வருகின்றது :) தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான் என்றான் பிரகலாதன்..கோதையோ மனமார  நேசிக்கும் மனத்தில் (மனதில் என்பதில்லை மனத்தில் என்றுதான் சொல்கிறாள்..மனத்திற்கு இனியான் என்று திருப்பாவையிலும் குறிப்பிடுவாள் ) தான் கடவுள் இருக்கிறார். நறுமணம் சூழ்ந்த துவாரகையின் தலைவன் ,காவலன் ,கன்று மேய்த்து விளையாடும் கோவலன் (மாட்டுச் சந்தையின் தலைவன் )



என்னைத் தேடி வந்து கூடி விடுவார் எனில்,  நீ கூடிடு கூடலே என்கிறாள் கோதை..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!