Saturday 29 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.08

பாடல் : 08

குடியில் பிறந்தவர் செய்யும்
குணமொன்றும் செய்திலன் அந்தோ
நடையொன்றும் செய்திலன் நங்காய்
நந்தகோ பன்மகன் கண்ணன்
இடையிரு பாலும்வ ணங்க
இளைத்திளைத்து என்மகள் ஏங்கி
கடைகயி றேபற்றி வாங்கிக்
கைதழும் பேறிடுங் கொலோ.

விளக்கம் :
குடியில் பிறந்தவர் செய்யும் குணம் ஒன்றும் செய்திலன் - நற் குடியில் பிறந்தவர்கள் செய்யும் குணம் ஒன்றும் இல்லை அதற்குத் தக்க செயல்கள் செய்யாதவன்
அந்தோ நடை ஒன்றும் செய்திலன் - அந்தோ..உலகத்து நடைமுறை என ஒன்று உண்டு அதை எதுவும் செய்யாதவன்
நங்காய் நந்தகோபன் மகன் கண்ணன் - நங்கையே ..நந்தகோபன் மகன் கண்ணன்
இடை இருபாலும் வணங்க - இடை இருபக்கமும் வளைய
இளைத்து இளைத்து என்மகள் ஏங்கி கடை கயிறே பற்றி - உடம்பு இளைத்து இளைத்து என் மகள்   ஏங்கி கடைய  கயிற்றைப்பற்றி
வாங்கிக்கை தழும்பு ஏறிடும் கொலோ - இழுத்ததில் கைகளில் தழும்பு ஏறிடுமோ ?

பெரியாழ்வாரோ வேள்வி செய்யும் தொழில் கொண்டவர். ஆனால் கண்ணனோ ஆயர் குலம் . இப்படி சாதி விட்டு சாதி மணம் ஆண்டாளுக்கு. நம்ம சாதி வழக்கப்படி எதுவும் செய்யாம பொண்ணைக் கல்யாணம் செய்து கொண்டான் கண்ணன். நடைமுறைச் சடங்குகள் எதுவும் செய்யல .
நங்கையே..நந்தகோபன் மகன் கண்ணனுக்கு வாக்கப்பட்ட என் மகளானவள் அவங்க வீட்டிலே ,தயிர் கயிறை இழுத்து இழுத்து கடையும் போது , அவளின் இடைகள் வளைந்து துவள, கைகள் கயிறை இழுத்ததில் தழும்பு ஏறி விடுமோ? (வேலை செய்தே பழக்கம் இல்லாதவங்க புதுசா ஒரு வேலையைச் செய்யும்போது கைல காப்பு வந்துடும்..அங்கங்க தழும்பு ஆகிடும்..ஒத்த மகள் என்று பெரியாழ்வார் ரொம்பச் செல்லமா வளர்த்துட்டார். புகுந்த வீட்டில் புதுசா வேலை செய்யப் போய்,  புள்ள என்ன பாடுபடுதோ..இடை இளைக்குமோ , கை தழும்பு ஏறுமோன்னு மனசு விசனப்படுது அவருக்கு.

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!