Thursday 27 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.06

பாடல் : 06
வேடர் மறக்குலம் போலே
வேண்டிற்றுச் செய்துஎன் மகளை
கூடிய கூட்டமே யாகக் கொண்டு
குடிவாழுங் கொலோ
நாடும் நகரும் அறிய நல்லதோர்
கண்ணாலம் செய்து சாடிறப்
பாய்ந்த பெருமான் தக்கவா
கைப்பற்றுங் கொலோ.

விளக்கம் :
வேடர் மறக் குலம் போலே - வேட்டை ஆடும் வேடர் வீரக் குலம் போல
வேண்டிற்றுச் செய்து என் மகளை - விரும்பியபடி  எல்லாம் செய்து என் மகளை
கூடிய கூட்டமே ஆகக் கொண்டு குடி வாழும் கொலோ - கூட்டமாக கூடி அழைத்து அத்தோடு மட்டுமே குடி வைத்துக் கொண்டு வாழ்க்கை  வாழ்வானோ ?
நாடும் நகரும் அறிய நல்லதோர் கண்ணாலம் செய்து  - இந்த நாடும் அதிலுள்ள மக்களும் அறிய நல்லபடியாக திருமணம் செய்து
சாடி இறப்  பாய்ந்த பெருமான் -  எதிரிகளைச் சாடி வெல்லும் பெருமான்
தக்கவா கைப்பற்றும் கொலோ - அவளைத் தக்கவாறு கைப்பற்றுவானோ ?

மாடு மேய்ப்பவன் எப்படி மறவன் ஆனான் என்ற குழப்பம் வேண்டாம்..அக்காலத்தில் ஆநிரை காப்போர் என்று உண்டு.எதிரிகளிடம் இருந்து தங்கள் மாடுகளைக் காப்பவர்கள்.அப்படியான  வீர மறவர் குலத்தில் , திருமணம் என்பது எப்படி நடக்குமோ..தாங்கள் விரும்பியபடி , கூட்டமாக கூடி நின்று வரவேற்று ஏதேனும் ஓர் இடத்தில் குடி வைத்தாலே முடிந்தது என்று முடித்து விடுவார்களோ ?
ஆனா நம்ம வழக்கம் அப்படி இல்லையே..(ஆண்டாள் தன்னை மாடு மேயப்பவள் எனச் சொல்லிக் கொண்டாலும் வளர்த்தவர் பெரியாழ்வார் இல்லையா..ஆகவே அவர் தன் குடும்ப வழக்கப்படி திருமணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார்..ஆண்டாள் வாரணம் ஆயிரம் பாடலில் ஆசைப்படுவாளே அது போல..)
ஊரறிய நாடறிய வந்து, முறைப்படி  பெண் கேட்டு இப்படி நல்லதோர் கல்யாணம் செய்ய வேண்டுமே..எதிரிகளைச் சாடி ,அவர்கள் இற வெல்லும் பெருமான் அவளைத் தக்கவாறு (அவளின் பெண்மையைப் பெருமைப்படுத்தும் விதமாக )  அவளைக் கைப்பிடிப்பாரோ ?
ஆண்டாள் சொல்வாளே..
மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்று ஊத 
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல் கீழ்
மைத்துனன் நம்பி மது சூதனன் வந்து என்னைக் 
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்..

அப்படியாக என் மகளை எங்கள் சம்பிரதாய சடங்கு வழக்கப்படி அந்தப் பெருமான் திருமணம் செய்வானோ? என்று ஏங்குகிறார்..


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!