Friday 28 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.07

பாடல் : 07

அண்டத் தமரர் பெருமான்
ஆழியான் இன்றுஎன் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப்
பரிசற ஆண்டிடுங் கொலோ
கொண்டு குடிவாழ்க்கை வாழ்ந்து
கோவலப் பட்டம் கவித்து
பண்டை மணாட்டிமார் முன்னே
பாதுகா வல்வைக்குங் கொலோ.

விளக்கம் :

அண்டத்து அமரர் பெருமான் - இப்பேரண்டத்தின் பெருமான் ,  அமரர்களுக்கு எல்லாம் தலைவனான எம்பெருமான்
ஆழியான் இன்று என் மகளை - ஆழியைக் கொண்ட ஆழியான் இன்று என் மகளை
பண்டப் பழிப்புகள் சொல்லிப் - பண்டங்களைக் குறை சொல்லி
பரிசு அற ஆண்டிடும் கொலோ - பரிசுகள் கெடும்படி ஆள்வானோ ?
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து - அவளை அவன் இடத்திற்கு கொண்டு சென்று குடும்பம் நடத்தி
கோவலப் பட்டம் கவித்து - அவளுக்கு  கோவலர் தலைவி  என்ற பட்டம் கொடுத்து நல்லபடியாக நடத்துவானோ
பண்டை மணாட்டிமார் முன்னே - அன்றி ,  அவன் அவளுக்கு முன்னால் கட்டிய மனைவிமார் முன்னே
பாதுகாவல் வைக்கும் கொலோ - பத்தோடு பதினொன்று என்று பேசி  அவளை வெறுமனே பாதுகாவல் வைத்து விடுவானோ ?

இப்பேரண்டத்தின் பெருமான் ,அமரர் தலைவன் ,ஆழிச் சக்கரம் கொண்ட திருமால் ,இன்று என் மகளை எப்படி வைத்திருப்பானோ? பண்டம் (உணவு ) .அவள் சமைக்கும் உணவுகளைக் குறை சொல்லி அவன் திட்டுவானோ? (வீட்டில் செல்லமாக வளர்ந்த ஒரே பெண் .சமையல் முன்னப்பின்ன இருக்கும். அதுக்கு எவ்ளோ திட்டு வாங்குகிறாளோ பாவம் )
அவளைச் சிறப்புடன் நடத்தாமல் வெறும் பெண்டாட்டியாக மட்டுமே நடத்துவானோ ?
கொண்டு செலுத்துதல் என்ற சொல்லாடல் இன்றும் என் அம்மா சொல்வதுண்டு. ஓர் செயலை நல்லபடியாக நடத்துதலை அப்படி,கொண்டு செலுத்துதல் என்பார்கள். அது போல ஆண்டாளைக் கட்டிக்கொண்டு போய் நன்கு கொண்டு செலுத்துவானோ?குடி வாழ்ந்து அவளுக்கு கோவலர் தலைவி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து அவளை நடத்துவானோ அன்றி அவனுக்கு இதற்கு முன் உள்ள மற்ற மனைவிமார்கள் முன்னே , இவளும் அவர்களோடு பத்தோடு பதினொன்றாக நடத்தி ,அவளைக் காவலாக வைப்பானோ ?
(எவரேனும் வீட்டில் தேவை இல்லாமல் இருந்தால் இது எதுக்கு எனும் கேள்வி எழும் போது ஆங்..காவலுக்கு என்று நக்கலாக இன்றும் பதில் அளிப்போரைக் காணலாம்..அது போல இப்பெண்ணைத் திருமணம் செய்து முறையாக குடும்பம் நடத்துகிறானோ அல்லது அங்கே சிறுமைப்படுத்துகிறானோ என்று மருமகன் மீது அச்சம் கொள்கிறார் )


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!