Tuesday 25 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.05

பாடல் : 05

தம்மாமன் நந்தகோ பாலன்
தழீஇக்கொண்டு என்மகள் தன்னை
செம்மாந் திரேயென்று சொல்லிச்
செழுங்கயற் கண்ணும்செவ் வாயும்
கொம்மை முலையும் இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு
இம்மக ளைப்பெற்ற தாயர்
இனித்தரி யாரென்னுங் கொலோ.

விளக்கம் :
தம்மாமன் நந்தகோபாலன் - யசோதை ,  தம் மாமனான நந்தகோபாலனுடன்  இணைந்து வரவேற்று
தழீஇக் கொண்டு என் மகள் தன்னை - கோதையை  அன்போடு  ஆரத் தழுவிக்கொண்டு,  என் மகள் தன்னை
செம்மாந்து இரு என்று சொல்லிச் -   மன தைரியத்தோடு இரு எனச் சொல்லி
செழுங்கயர் கண்ணும் செவ்வாயும் - அழகிய மீன் போன்ற கண்ணும் சிவந்த இதழ்களும்
கொம்மை முலையும் இடையும் - திரண்ட முலையும் அழகிய இடையும்
கொழும்பணைத் தோள்களும் கண்டிட்டு - பரந்த மூங்கிலைப் போன்ற தோள்களையும் கண்டுவிட்டு
இம்மகளைப் பெற்ற தாயர் - இப்பேர்ப்பட்ட மகளைப் பெற்ற தாய்
இனித் தரியார் என்னும் கொலோ - இனி இவளைப் பிரிந்து உயிர் தாங்கி இருக்க மாட்டாள் என்று சொல்வார்களோ ?

முந்தைய பாடலின் தொடர்ச்சியாக இப்பாடல் வருகின்றது.. யசோதை தன் மகளிடம் எப்படி நடந்தால் நன்றாக இருக்கும் என பெரியாழ்வார் நினைத்தாரோ அதை இப்பாடலில் யசோதை செய்தது போன்ற எண்ணத்தில் வருகிறது இப்பாசுரம்.
கணவரை மாமா என்றழைக்கும் பழக்கம் உண்டு (என் அம்மா இவ்வழியே :) )
ஆகவே யசோதை ,தம் மாமனான நந்தகோபாலனோடு ,மருமகள் கோதையை வரவேற்கும் விதமாக , அவளை ஆரத் தழுவிக் கொண்டு, புது இடத்தில் அச்சத்துடனும் மிரட்சியுடனும் தலை குனிந்து நின்றிருக்கும் கோதையை செம்மாந்து இரு எனச் சொல்லி (அச்சம் தவிர் நிமிர்ந்து நில் என்று சொல்லி )
(புது இடத்தில் அன்னியமாக உணரும் பெண்ணை இது உன் வீடு இயல்பாக இருக்க வைக்க ஆசுவாசம் செய்தல் ) அவளை நன்கு உற்று நோக்குகிறார் யசோதை. தன் மகனுக்குப் பொருத்தமான பெண்ணாக அவள் இருக்கிறாளா (சோடிப் பொருத்தம் பார்ப்பாங்களே...) அழகில் எப்படி இருக்கிறாள் ?
அழகிய மீன் போன்ற கண்கள் ,சிவந்த இதழ்கள், திரண்ட முலைகள் ,குறுகிய இடை என்று அழகில் ஓர் குறை சொல்ல முடியாத படி இருக்கும் மருமகளைக் கண்டு, இப்பேர்ப்பட்ட பெண்ணைப் பிரிந்து அவளின் தாயார் அங்கு எங்ஙனம் உயிர் தரித்து இருக்கிறாளோ, பிரிவாற்றாமை கொண்டு வாழ்வாளோ மாட்டாளோ என்று தன் சம்பந்தி பற்றிக் கவலை கொள்கின்றாள்..







No comments:

Post a Comment

மறுமொழி இடுக!