Sunday 24 July 2016

63.ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை

63.ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
பாடல் :63
ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே

விளக்கம் : 
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை -கண்ணனுடன் தனக்குத் திருமணம் நிகழ்வதாக கண்ட கனவினை
வேயர்புகழ் வில்லிபுத்தூர்க் கோன்  கோதைசொல் - வேயர்குலப் புகழ்பெற்ற வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் - இந்த பத்துப்பாடல்கள்அடங்கிய தூய  தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே - திருமணமாகி அருமையான,  நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வார்கள்


வேயர் குலப் புகழ் வில்லிபுத்தூர் தலைவர் பெரியாழ்வார் மகள் கோதை   தனக்குத் திருமணம் நிகழ்வதாகத்  தோழியிடம் தன் கனவினைச் சொல்வதாக வந்த இந்தப் பத்துப் பாடல்கள் அடங்கிய தூய தமிழ்ப்பாமாலையைப் பாடுபவர்கள் திருமணமாகி, அருமையான நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வார்கள்


143 நாச்சியார் திருமொழியில் இந்தப் பத்துப் பாடல்களைத்தான் வைணவர்கள் கொண்டாடுகிறார்கள்..திருமணங்களில் இதைப் பாடி இன்புறுகின்றனர் . இந்துத் திருமணச் சடங்குகளை அழகாகச் சொல்கின்றன இந்தப் பாடல்கள்.. 
இந்தப் பாடல்களில் சிலவற்றை மட்டும் கேளடி கண்மணி என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து ஜானகி பாடி இருப்பார்.. முழுமையாகப் பாடி இருக்கலாம் என்ற மனக்குறை தவிர ,பாடலும்  படமாக்கப்பட்ட விதமும் ஜானகி பாடிய விதமும் மனத்திற்கு நிறைவு :) 





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!