Friday 2 September 2016

75.மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்

75.மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்

பாடல் :75

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்காள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கிங் கிலக்காய்நா னிருப்பேனே

விளக்கம் :

மாமுத்த நிதி சொரியும் மாமுகில் காள் - பெரும் முத்துக்களைப் போன்று   வெண் துளிகள்  பொழியும் பெரும் மேகங்களே
வேங்கடத்துச் சாமத்தின் நிறம் கொண்ட தாடாளன் வார்த்தை என்னே ? -  திரு வேங்கட மலையின் சாமத்தின் (நடு இரவு கருமை நிறம் ) கொண்ட தாடாளனிடம் இருந்து சேதி எதுவும் எனக்கு உண்டா ?
காமத்தீ உள் புகுந்து கதுவப்பட்டு இடைக் கங்குல் - காமத் தீ என் உள் புகுந்து எனைக் கவ்வி இழுக்க முன் இரவுக்கும் நடு இரவுக்கும் இடையில்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே  -வீசும்இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

பெரும் முத்துக்களைப் போன்று வெண் துளிகளைப் பொழியும் பெரும் முகில்களே !
வேங்கடத்து மலையில் நடுநிசி நேரத்தின் நிறம் கொண்ட தாடாளன் சொன்ன வார்த்தை என்ன?(தாடாளன் - பெருமை/முதன்மை மிக்கவன்  .திருக்காழிச் சீராம விண்ணகரம் தாடாளன் (சீர்காழியில் உள்ள 108 வைணவ தளங்களில் ஒன்று திரி விக்கிரமன் ..உலகளந்த பெருமாள் கோலம் )

அவரிடம் இருந்து எனக்கு சேதி எதுவும் உண்டா ? காமத் தீ என் உள் புகுந்து என்னைக் கவ்வி இழுக்க கங்குல் - முன் இரவு  சாமம் - நடு இரவு இவ்விரண்டுக்கும் இடையில் வீசும் இந்த இன்பம் தரும்தென்றலுக்கு  நான் இலக்காய்  ஆகி விட்டேனே ..இன்பம் தர வேண்டிய தென்றலோ  என்னை மிகவும் துயரம் செய்கின்றதே !
Related image
தாடாளன்



முன்பே ஒரு பாடலில் சொல்லி இருக்கிறேன்..மார்கழிக் காலையும் மழை மாலையும் தனித்திருப்போருக்கு சாபம் என.. போலவே ஏகாந்தம் தரும் தென்றல் காற்று , நடுச் சாமத்தின் தனிமை தன் துணையின்றி  இருப்பவர்களுக்கு வேதனை தரும் வல்லமை படைத்தவை .. பகலின் பேரிரைச்சல் கூட ஏதோ பேரமைதியைத் தந்து விட்டுச் செல்லும் . ஆனால் துணையற்ற சாமத்தின் அமைதி பேரிரைச்சலாகத் துன்புறுத்தும்..

மோகத்தில் தவித்து  இருக்கும் பெண்ணின் தனிமை  எத்தகு துன்பம் வாய்ந்தது என்று ஆண்டாளின் பாடல் வாயிலாக நாம் உணரலாம் .
அது ஏன் காமத் தீ கவ்வுகிறது என்கிறாள் ? விழுங்கினால் கூட ஒரே வாயில் அமுங்கிடும்..ஆனா கவ்விக் கவ்வி உண்பது உடனே நிகழாது சிறிது சிறிதாக உயிரைப் பறித்தல் அது இன்னும் ஆழமாகத் தாக்கும் .மிகவும் வேதனையளிக்கும் செயல் கவ்வுதல் .. காமத்தீ  அப்படிக் கவ்வுகிறதாம் அவளை..
சாமம் ஏமம் என்ற சொல்லாடல் கிராமத்தில் இன்னமும் புழங்கப் படுகிறது.
நான் கவனித்தவரையில் ஆண்டாளுக்கு உலகளந்த உத்தமன் என்ற அவதாரத்தின்  மீது அலாதிப்ரியம் இருக்கிறது :)
அடிக்கடி அவரைத்தான் அழைக்கிறாள்..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!