Thursday 8 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.08

பாடல் : 08
கைத்தலத் துள்ள மாடழியக் 
கண்ணா லங்கள் செய்துஇவளை
வைத்து வைத்துக் கொண்டுஎன்ன 
வாணிபம் நம்மை வடுப்படுத்தும்
செய்த்த லையெழு நாற்றுப் 
போல்அவன் செய்வன செய்துகொள்ள
மைத்த டமுகில் வண்ணன் 
பக்கல் வளர விடுமின்களே.

விளக்கம் : 

கைத்தலத்தில் உள்ள மாடு அழியக் - என் கைகளிலே உள்ள செல்வங்கள் அழியக்
கண்ணாலங்கள் செய்து - கண்ணாலங்கள் செய்து
இவளை வைத்து வைத்துக் கொண்டு என்ன வாணிபம் நம்மை வடுப்படுத்தும் - வைத்து ,இவளை என் வீட்டின் பெருமை என வைத்துக் கொண்டு  ,என் மகளாக வைத்து வாழ்கிறேன். ஆயினும்  என்ன வாணிபம் செய்து என்ன ஆகப் போகிறது..அது நமக்கு பழியை ஏற்படுத்தும்
செய்த்தலை எழு நாற்றுப் போல் அவன் செய்வன செய்துகொள்ள - நாற்று வயலில் விளைந்த நாற்றினை விளைத்தவன் விருப்பம்போல் நடவு  வயலில் நடுவது போல , அவன் செய்வன செய்து கொள்ள
மைத்தடம் முகில் வண்ணன் பக்கல் வளர விடுமின்களே ! - இவளை மைத்தடம் (மை போன்ற கரிய நிறம் கொண்ட மேகத்தின் வண்ணன் பக்கமாக வாழும்படி கொண்டு விட்டுவிடுங்கள்

ஒரே பெண் அவளுக்குக் கல்யாணம் செய்யணும்..அதைச் சீரும் சிறப்புமாகச் செய்யணும். கையில் இருக்கின்ற செல்வங்கள் எல்லாம் கரைந்தாலும் பரவாயில்லை. அவளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுக்கணும்.  இவளே என் குலப்பெருமையாக வைத்து ,மகளாக வைத்துக்கொண்டு வாழ்கிறேன். ஆனால் அப்படி வைத்துக்கொண்டு வாழ்வதில் ஒரு பயனும் இல்லையே .
வயலில் நடும் நாற்றானது நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நட்டால் தான் பயன்பெறும்..( நாற்றாங்காலை இப்படி நாற்று வயலில் இருந்து நடவு வயலில் நடுவதே வழக்கம். போலவே பெண்ணும் பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டுக்குச் செல்லுவதே இயல்பு )
மை இட்ட தடம் தெரியும் அந்த மேகத்தின் நிறம் கொண்டவன் அவன் விருப்பப்படி இவளை என்னவோ செய்து கொள்ளட்டும் அவன் பக்கம் இவளைக் கொண்டு சேர்த்து விடுங்களேன் ! (கோதை என் மகள் என்பது பெருமை ஆயினும் அவள் என்வீட்டிலேயே இருப்பதால் யாதொரு பயனும் இல்லை ஆகவே அவள் சேரிடம் சேர வேண்டும் அந்தக் கண்ணனோடு சேருவதே அவளுக்கும் பெருமை அவளைப் பெற்ற தனக்கும் பெருமை என்கிறார் ) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!