Thursday 1 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.05

பாடல் :05
நாடும் ஊரும் அறிய
வேபோய் நல்ல துழாயலங்கல்
சூடி நாரணன் போமிட
மெல்லாம் சோதித் துழிதருகின்றாள்
கேடு வேண்டு கின்றார்
பலருளர் கேசவ னோடுஇவளை
பாடு காவ லிடுமி
னென்றென்று பார்தடு மாறினதே.

விளக்கம் : 

நாடும் ஊரும் அறியவே போய் - இந்த  நாடும் ஊரும் அறியவே போய்
நல்ல துழாய் அலங்கல் சூடி - நல்ல துளசி மாலையைச் சூடி
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் - நாரணன் செல்லும் இடம் எல்லாம் தேடி  அதைத் தன் இடமாகக் கொள்ளுகின்றாள்
கேடு வேண்டுகிறார் பலர் உளர் - இவளுக்கு கேடு நினைப்பவர்கள் பலர் உள்ளனர்
கேசவனோடு இவளை பாடு காவலில் இடுமின் என்றென்று - கேசவனோடு இவளை இணைக்க வேண்டும் ,  இவளை வெளியில் செல்லாதவாறு பாதுகாவலில் வைக்க  வேண்டும் என   என்னிடம் இவ்வுலகம்  சொல்லியதில்
பார் தடுமாறினதே - மனம் தடுமாறியதே

நாடும் ஊரும் , (தென்பாண்டி நாடு முழுவதும், இந்த வில்லிபுத்தூரும் ) அறியவே போகின்றாள். நல்ல துளசி மாலையை அணிந்து கொள்கின்றாள்.  நாரணன் எங்கெல்லாம் சென்றான் என விசாரித்து  பலரும் பல இடம் சொல்ல,இவளும் அந்த இடங்களை எல்லாம் தன் இடமாகக் கொள்ளுகிறாள் (இராமன் வாழும் இடமே சீதைக்கு அயோத்தி என்பார்களே அது போல நாரணன் இருக்கும் இடமெல்லாம் தன் இடமாக எண்ணிக் கொள்கின்றாள் )
அக்கம்பக்கம் எல்லாம் இவளை அந்தக் கேசவனோடு இணைத்துக் கிசுகிசுக்கின்றார்கள் . இவளுக்குக் கேடு வேண்டுபவர்களும் பலர் உள்ளனர்.
பொம்பளைப் புள்ள அங்க இங்க அவ காதலனைத் தேடி அலைஞ்சா நல்லாவா இருக்கும்..அவ வீட்டை விட்டு வெளியே போகாதபடி பாதுகாவலில் வைக்கச்சொல்லி என்னிடமே பலர் சொல்கின்றார்கள்..இவ்வுலகம்  இதைச் சொல்லக்  கேட்டு பெற்ற மனம் தடுமாறியதே..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!