Saturday 3 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.06

பாடல் : 07
பேச வும்தெரி யாத பெண்மையின்
பேதையேன் பேதைஇவள்
கூச மின்றிநின் றார்கள் தம்மெதிர்
கோல்கழிந் தான்மூழையாய்
கேசவா வென்றும் கேடிலீ
யென்றும் கிஞ்சுக வாய்மொழியாள்
வாச வார்குழல் மங்கை
மீர்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 

பேசவும் தெரியாத பெண்மையின் பேதையேன்  பேதை இவள் - பேசவும் தெரியாத பெண்மையின் பேதை என் பேதை இவள்
கூச மின்றி நின்றார்கள் தம் எதிர் கோல் கழிந்தான் மூழையாய் - கூச்சமில்லாமல்  தம் எதிர்  மற்றவர்கள்  நிற்கின்றார்கள் என்ற எண்ணமின்றி  கோல் அற்ற அகப்பையாய் வெட்கம் விடுத்தவளாக
கேசவா என்றும் கேடு இலி என்றும் கிஞ்சுக வாய்மொழியாள் - கேசவா என்றும் கேடு அற்றவனே என்றும் சொல்லும் கிளி போன்று பேசும் வாய்மொழியாள்
வாசவார் குழல் மங்கை மீர் இவள் மால் உறுகின்றாளே - நறுமணம் கொண்ட நீண்ட குழல் மங்கையரே இவள் மயக்கம் கொள்கின்றாளே

இடம் பொருள் ஏவல் தெரியாமல் பேசத் தெரியாத பெண் ஆகிவிட்டாள் கோதை. யானே ஓர் பேதை இந்தப் பேதை பெற்ற மகள் இவளும் ஓர் பேதையாகிப் போனாள் . தம் எதிரே மற்றவர்கள் நிற்கின்றார்கள் என்ற எண்ணம் இன்றி கூச்சமற்றவளாக கோல் அற்ற அகப்பை போல ( அகப்பையில் கோல் நீங்கி விட்டால் அது வீண்தான். தக்க தருணத்தில் கோல் நீங்கி அச் சமையல் நிறைவுறாமல்  அரைகுறை ஆகி விடுவது போல )  பெண்ணானவள் வெட்கம் நீங்கி விட்டால் எப்படி ? ) பலர் முன்னிலையில்,கேசவா, கேடு இல்லாதவனே என்றும் பிதற்றுகிறாள் கிளி எப்படி சொன்னதையே திருப்பிச் சொல்லுமோ அது போன்றுள்ளது அவள் பேச்சு..
நறுமணம் கொண்ட நீண்ட முடி கொண்ட மங்கையரே ! இவள் இப்படி மால் மேல் மால் (மயக்கம் ) உறுகின்றாளே .. 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!