Friday 23 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.09

பாடல் : 09
பெருப்பெ ருத்தகண் ணாலங்கள்செய்து 
பேணிநம் மில்லத் துள்ளே
இருத்துவா னெண்ணி நாமிருக்க
இவளும்ஒன் றெண்ணு கின்றாள்
மருத்து வப்பதம் நீங்கினா
ளென்னும் வார்த்தை படுவதன்முன்
ஒருப்ப டுத்திடு மின்இவளை
உலகளந் தானி டைக்கே.

விளக்கம் : 
 பெருப் பெருத்த கண்ணாலங்கள் செய்து - பெரிய  பெரிய மங்கல நலன்கள் இவளுக்குச் செய்து
பேணி நம் இல்லத்து உள்ளே இருத்துவான் என எண்ணி நாம் இருக்க - பாதுகாத்து நம் வீட்டில் உள்ளேயே வைத்துக் கொள்ளலாம் என நாம் எண்ணி இருக்க
இவளும் ஒன்று எண்ணுகின்றாள் - இவளோ வேறொன்று நினைக்கின்றாள்
மருத்துவப் பதம் நீங்கினாள் என்னும் வார்த்தை படுவதன் முன் - மருந்து செய்யும் பதம் தவறி விட்டால்  அதன் நலன் முழுவதும் போய் விடுவது போல, இவளைக் கொஞ்சம் கவனிக்காமல் விட்டு தவறு    நிகழ்ந்து விடும் அந்த ஒரு பழி சொல் வருவதற்கு முன்
ஒருப்படுத்திடுமின் இவளை உலகளந்தான் இடைக்கே - இவளை உலகளந்தான் இடத்தில் ஒன்று சேர்த்து விடுங்கள்..

கல்யாணங்கள் - மங்கல நிகழ்வுகள்
கல்யாணம் என்பது திருமணம் மட்டுமே அல்ல.பல மங்கல நிகழ்வுகளும் கல்யாணம் என்ற பொருளே . ஆகவே ஒரு தகப்பனாக மகளுக்கு பல மங்கலங்கள் செய்து பார்க்க விரும்புகிறார் பெரியாழ்வார்.  இதை நாம் பேச்சு வழக்கில் ,என் கண்ணுக்கு முன்னாலேயே உனக்கு ஒரு நல்லது பண்ணிப் பார்த்துப்புடனும் என்போம். அதைத்தான் அவரும் சொல்கின்றார். அவளுக்குப் பல நல்லது செய்ய வேண்டும்  ,அவளைப் பேணி பாதுகாத்து ,நம் வீட்டின் உள்ளேயே அவளை இருக்க வைக்கலாம் என நாம் எண்ணி இருக்க ,
இவளோ வேறொன்று எண்ணுகின்றாள் . மருந்தானது சரியான அளவில் இருக்க வேண்டும். மீறினால் துன்பம். அது போலவேதான் இவளைச் சரியாக கவனித்து வர வேண்டும். கொஞ்சம் நாம் தவறினாலும் துன்பம் ஆகிவிடும் (இதைத்தான் பெண்ணைப் பெற்று வயிற்றிலேயே நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன் எனச் சொல்வார்கள் )
அப்படி ஒரு பழி சொல்லுக்கு இவள் கோதை ஆளாகும் முன்னம் , அவளை உலகளந்தானிடம் ஒன்றிணைத்து விட வேண்டும். அதற்குப்பின் அவள் பாடு அவள் கணவன் பாடு. 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!