Monday 5 June 2017

பெரியாழ்வார் திருமொழி 03.07.07

பாடல் : 08
காறை பூணும் கண்ணாடி
காணும்தன் கையில் வளைகுலுக்கும்
கூறை யுடுக்கும் அயர்க்கும்தங்
கொவ்வைச் செவ்வாய் திருத்தும்
தேறித் தேறிநின்று ஆயிரம்பேர்த்
தேவன் திறம்பி தற்றும்
மாறில் மாமணி வண்ணன்
மேல்இவள் மாலுறு கின்றாளே.

விளக்கம் : 
காறை பூணும் கண்ணாடி காணும் - கழுத்திலே அணியக் கூடிய அணிகலனை அணிந்து கொள்ளும் ,அடிக்கடி கண்ணாடி பார்த்துக் கொண்டும்
தன் கையில் வளைகுலுக்கும் - தன் கையில் உள்ள வளையல்களைத் தானே குலுக்கிக் கொள்ளுவாள்
கூறை உடுக்கும் அயர்க்கும் - உடை உடுப்பாள் .பின் ஏதோ நினைத்து அயர்ந்து கொள்வாள்
தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும் - அடிக்கடி தன் கொவ்வைப் பழம் போன்ற சிவந்த இதழ்களை ஒழுங்குபடுத்திக் கொள்வாள்
தேறித் தேறி நின்று ஆயிரம் பேர்த் தேவன் திறம் பிதற்றும்  - தனக்குத்தானே தேற்றிக் கொண்டு நின்று ஆயிரம் பெயர்களை உடையவன் திறனைப் பிதற்றுவாள்
மாறு இல்  மாமணிவண்ணன் மேல் இவள் மால் உறுகின்றாளே - வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான மாமணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே
இது ஒரு மிக அழகிய பாடல். காதல் கொண்ட பெண்ணின் நடவடிக்கைகளை உளவறிந்து ,தாய்மையோடு வருந்திச் சொல்லும் பாடல். இப்பாடலைப் படிக்கும் போதே கோதை என்ற பெண்ணைக் கற்பனை செய்யுங்கள் அவர் சொல்லிய வண்ணமே.. ஒரு சிறுபிள்ளைத்தனம் தெரியும்.. :)
பெரியாழ்வாரின் இந்தத் திருமொழிகளை எழுத எனக்கு உந்துதல் அளித்ததே இந்தப் பாடல்தான்..
காறை என்பது கழுத்தை இறுக்கி மூடிய நகை..காறை பூணும் (அணிதல் ) கண்ணாடி காணும்.. ஆமாம் ஏன் நகை அணிய வேண்டும் அதை ஏன் கண்ணாடியில் பார்க்க வேண்டும்..சில பெண்கள் இயல்பாகவே தன்னை அழகுபடுத்திக் கொள்ள விரும்புவர். ஆனால் சில பெண்களோ பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டார்கள்.. ஆனால் அத்தகு பெண்கள் கூட காதல் என வந்துவிட்டால் தோற்றத்தில் கவனம் செலுத்துவார்கள்.. தான் விரும்புபவன் தன்னைப் பார்க்கும்போது அழகாகத் தெரிய வேண்டும் என்ற எண்ணமே காரணம்.  அதற்காகத் தான் தனக்கு அழகூட்டும் நகையை அணிந்து பார்த்தலும் அது எப்படி இருக்கு என கண்ணாடியில் அழகு பார்த்தலுமாகத் திரிகிறாள்..தன் வளையலைத் தானே குலுக்கிப் பார்க்கிறாள்.. சின்னச்சின்ன செயல்களில் கூட செய்து பார்த்து ரசிக்கத் தோன்றும் காதல் கொண்ட பெண் மனது.. அத்தோடு..அத்தோடு.. என்ன அத்தோடு..அதுதான்  இந்த வளையல் அவன் கையில் சிக்கினால் என்னவாகும் என்ற எண்ணமும் வந்து போயிருக்கும் வேறென்ன :)
உடை அணிந்து கொள்வாளாம் அயர்ந்தும் கொள்வாளாம்..ஏனாம் ? புத்தாடை அணிந்தால் உற்சாகம் தானே வரும்..ஆமாம் உற்சாகம் தான் அடுத்த நொடியே அவன் நினைவு வந்துவிடுகிறது.. இதை எல்லாம் ரசிக்க வேண்டியவன் அவனாகிற்றே.. எந்த ஒரு பொருளும் அதைக் கொள்ள வேண்டியவனிடம் போய்ச் சேர்ந்தால் தானே அது தன் பிறவிப்பயனை அடையும்.. இவனைத் தான் காணலையே ..பிறகு மனம் சோர்வடையாமல் என்ன செய்யுமாம் ?

அடிக்கடி தன் சிவந்த இதழ்களைத் திருத்திக் கொள்வாளாம்.. என்றேனும் ஒரு நாள் வருவான் என்று தன்னைத்தானே தேற்றிக் கொள்வாள். ஆயிரம் பெயர்கள் கொண்ட அந்தத் தேவன் திறமையைச் சொல்லிப் பிதற்றுவாள் .. (ஏதேதோ உளறுதல் )
வேறு மாற்று இல்லாத ஒப்பற்றவனான அந்த மணி வண்ணன் மேல் இவள் மயக்கம் கொள்கின்றாளே.. இவளை என்ன செய்ய ?




No comments:

Post a Comment

மறுமொழி இடுக!