Wednesday 12 July 2017

பெரியாழ்வார் திருமொழி 03.08.03

பாடல் : 03
குமரி மணம்செய்து கொண்டு
கோலம்செய்து இல்லத் திருத்தி
தமரும் பிறரும் அறியத்
தாமோத ரற்கென்று சாற்றி
அமரர் பதியுடைத் தேவி
அரசாணி யைவழி பட்டு
துமில மெழப்பறை கொட்டித்
தோரணம் நாட்டிடுங் கொலோ.

விளக்கம் : 

குமரி மணம் செய்து கொண்டு -
இவள் தான் பெண் என்ற மண உறுதி செய்து கொண்டு
கோலம் செய்து இல்லத்து இருத்தி - அழகாக அலங்கரித்து நற் கோலத்தில் இல்லத்தில் அமர வைத்து
தமரும் பிறரும் அறியத் தாமோதரருக்கு என்று சாற்றி - உற்றோரும் மற்றோரும் அறிய இவள் அந்தக் கண்ணபிரானுக்கே தாமோதரனுக்கே என்று அறிவித்து
அமரர் பதி உடைத் தேவி அரசாணியை வழிபட்டு - அப்பேர்ப்பட்டவனைக் கணவனாகக் கொள்ளப் போகும்  எம் தேவி அரசாணியை வழிபட்டு
துமிலம் எழப் பறை கொட்டித் - பேரொலி (பெரிய ஆரவாரத்தோடு ) பறை கொட்டி
தோரணம் நாட்டிடும் கொலோ - தோரணம் நாட்டி அனைத்தும் செய்வார்களோ ?
துமிலம் - பெரிய ஆரவாரம்..பேரொலி முழங்க

குமரி மணம் - வெகு அழகான சொல்லாடல் ..மணத்திலே இளைய நிகழ்வு அதாவது மண உறுதி (நிச்சயதார்த்தம் )

இதான் பொண்ணு இதான் மாப்பிள்ளை என்று உறுதி செய்து , உற்றார் உறவினருக்கு அறிவித்தல் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வு .
பொண்ணை நன்கு அலங்கரித்து வீட்டில் அமர வைத்து , உற்றாரும் ஊராரும் அறிய ,இவளை அந்தக் கண்ணபிரான் தாமோதரனுக்கே என அறிவித்து , அமரர் பதி என்ற பெருமானைக் கணவனாக அடையப் போகும் என் மகள், அரசாணியை  (அரச மரக் கிளை ..அனைத்து மங்கல காரியங்களிலும் இது உண்டு. அரசாணிப் பானை கூட உண்டு ) வழிபாட்டு , பேரொலி முழங்க பறை கொட்டி (பறையும் மங்கல வாத்தியமே..அதைச் சாவு மேளம் ஆக்கியது பிற்கால சதியே ) தோரணம் நாட்டிடுவார்களோ..

மகளைப் பற்றி என்ன ஓர் அழகிய கற்பனை. எல்லா தாய்க்கும் வேறென்ன வேண்டும். கண் நிறைய இவற்றை ரசிப்பதைத் தவிர :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!