Sunday 7 August 2016

66.தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்

66.தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
பாடல் :66
தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ ருஞ்சங்கே

விளக்கம் :
தடவரையின் மீதே சரற்கால சந்திரன் - பெரிதாக நின்ற மலையின் மீதே இலையுதிர் கால சந்திரன்
இடை உவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும் - அந்தப் பெரு மலைகளுக்கு இடையில் வந்து எழுந்தாற் போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில் - வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே ! - குடியேறி வீற்றிருந்தாய் அழகிய  பெரும் சங்கே !

அழகிய பெரும் சங்கே ! பெரியதாக நின்ற மலைகளின் இடையே இலையுதிர் கால சந்திரன்  வந்து எழுந்தாற் போல ..ஆமா அது என்ன இலையுதிர் கால சந்திரன் ? பெரிய மரங்கள் தங்கள் இலைகளை உதிர்த்த பின்பு எந்த இடைஞ்சலும் இன்றி முழு நிலவை நாம் முழுமையாக ரசிக்கலாம்.. அப்படியான முழு நிலவு இரு மலைகளின் இடையே எழுந்தால் எவ்வளவு அழகாக இருக்கும்..அந்த அழகை ஒத்தது போல இருந்ததாம் வடமதுரை மன்னன் கண்ணனின் கைகளில் குடியேறி வீற்றிருந்த சங்கு..



அது என்ன வீற்றிருந்த ? ஏன் அமர்ந்து என்று சொன்னாலே போதாதா? அமர்ந்து என்றால் ரொம்பச் சாதாரணமாக இருக்கும்..ஆனால் வீற்றிருந்து என்ற சொல்லாடல் கம்பீரத்தைக் குறிக்கின்றது..ஒரு இடத்தில் பெருமையுடன் அமர்ந்திருப்பதைக் குறிக்கிறது..அம்மன் கொலு வீற்றிருந்தாள் என்றே தான் சொல்வார்கள்..அதைப் போல இந்த அழகிய சங்கானது அந்தக் கண்ணனின் கைத்தலத்தில் குடியேறி கம்பீரமாக வீற்றிருக்கின்றது :)





No comments:

Post a Comment

மறுமொழி இடுக!