Sunday 14 August 2016

69.போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்

69.போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
பாடல் : 69
போய்த்தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த்த  மாய்நின்ற செங்கண்மால் தன்னுடய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே

விளக்கம் : 
போய்த் தீர்த்தம் ஆடாதே நின்ற புணர்மருதம் - எவ்வளவோ புண்ணிய நதிகள் நாட்டிலே இருக்க அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே , மருத மரமாய் நின்றவர்களைச்
சாய்த் தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடிகொண்டு - சாய்த்து அவர்களின் சாபம் தீர்த்தவன் கைத் தலத்தில் ஏறிக் குடி கொண்டு
சேய்த் தீர்த்தமாய் நின்ற செங்கண் மால் தன்னுடைய -  இளமையான ,  வேர்க்கும் உடம்புடன்  நின்ற செம்மையான திருமாலுடைய
வாய்த் தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே ! - வாய்த் தீர்த்தம் உன் மீது படும் அளவுக்கு பாய்ந்து ஆட வல்லமை பெற்றாய் வலம்புரியே !


புண்ணிய நதிகளில் தீர்த்தம் ஆட எல்லாரும் எங்கெங்கோ போகும் போது அங்கெல்லாம் போய்த் தீர்த்தம் ஆடாமலே அதற்காக எந்த ஒரு  சிரமப்படாமலே மருத மரமாய்ச் சாபம் பெற்றவர்களைச் சாய்த்து அவர்களின் சாபம் நீக்கியவனான
( நள குபாரன் மற்றும் மாணிக்ரீவன் என்ற இரட்டையர்கள் (குபேரனின் பிள்ளைகள் ) ஆற்றிலே நிர்வாணமாக பெண்களுடனே குளித்ததால் மரமாய்ப் போகும்படி சாபம் கிடைக்கப் பெற்றனர். கண்ணன் உரலிலே கட்டப்பட்டு இருந்த பொழுது உருண்டு செல்ல அப்பொழுது இடிக்கப்பட்டு சாப விமோசனம் பெற்றவர்கள் இவர்கள்.. ) கண்ணனின் கைத்தலத்தில் நீ ஏறிக் கொண்டு

சேய்மை - இளமை/செம்மை ..கண்ணனின் உடம்பில் துளிர்க்கும் வியர்வை கூட தீர்த்தம் தான்..இளமை கொண்ட , வேர்க்கும் உடம்புடன்  நின்று கொண்டிருந்த அந்தத்  திருமாலின் செம்மையான வாயின்  தீர்த்தம் பெறும் வல்லமை பெற்றாய் வலம்புரியே !
கங்கையோ யமுனையோ மட்டுமே புனிதத் தீர்த்தங்கள் அல்ல..கண்ணனின் உடம்பில் வேர்க்கும் வியர்வையும் அவன் திரு வாய் எச்சில் அமுதமும் கூட புனிதத் தீர்த்தங்களே :) அவன் கைத்தலம் புகுந்து அவன் உடல் வியர்வை தீர்த்தம் பெற்றதோடல்லாமல் அவன் வாய்த் தீர்த்தமும் பெற்ற உன் வல்லமை எத்தகு தன்மை வாய்ந்தது :)
இந்தாம்மா கோதை..ஆனாலும்  உனக்கு இம்புட்டு..இம்புட்டு  இம்புட்டுக் காதல் ஆகாது :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!