Friday 19 August 2016

72.பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

72.பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
பாடல் :72
பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்
வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்கால்
சிதையாரோ வுன்னோடு செல்வப்பெ ருஞ்சங்கே

விளக்கம் : 
பதினாறு ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப - பதினாறு ஆயிரம் தேவிமார்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க
மது வாயில் கொண்டாற்போல் மாதவன் தன் - மதுவினை வாயினில் கொண்டவனைப் போல மாதவனின்
வாய் அமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால் - வாய் அமுதம் என்ற பொதுச் சொத்தை நீ ஒருவனாக  தேனினை உண்பவன் போல நீ உண்டால்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெரும் சங்கே ! - இதை வேடிக்கை பார்க்கும் பெண்கள் மனம் சிதைந்து போய் நோக மாட்டாரோ ? செல்வம் மிக்க பெரும் சங்கே !

பெரும் செல்வம் கொண்ட சங்கே! பதினாறாயிரம் தேவிமார்களை பார்க்க வச்சுக்கிட்டு தேனினை உண்பவன் போல  , பொதுச் சொத்தான மாதவனின் வாயமுதத்தை நீ ஒருவனே எவருக்கும் பகிராமல் உண்டால் இதைப் பார்க்கும் பெண்களின் மனம் சிதைந்து போகாதோ ? ஒருவரைப் பார்க்க வச்சு , பகிர்ந்து உண்ணாமல்தானாகச் சாப்பிட்டா  வயிறு வலிக்கும் என்ற சொலவடையை ஆண்டாள்தான் கிளப்பி விட்டிருக்கணும் :)


அடேங்கப்பா...! சங்குகிட்ட கண்ணனின் வாய் அமுதம் என்ன மணம் மணக்கும் சொல்லேன் ஆசையாக் கேட்கறேன் என்று நல்லபிள்ளை மாதிரி சமர்த்தாக ஆரம்பித்து , சங்கிற்கு அது இருக்கும் இடம் எவ்வளவு உயர்ந்து எனச் சொல்லி ,அதன் மேன்மையை அதற்கே விளக்கி, அது எவ்வளவு பெரிய செல்வம் பெற்றிருக்கின்றது என்பதை உணர்த்தி ,அதனோடு பிறந்த யாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்பதையும் சொல்லி ,சங்கு மட்டும் எப்பேர்ப்பட்ட புனித தீர்த்தத்தை ஆடுகின்றது என்று மெலிதாகப் பொறாமையை வெளிப்படுத்தி, பிறகு வெளிப்படையாகவே தனக்குக் கிடைக்காத ஒன்றை சங்கு பெற்று மாதவன் கைத்தலத்தில்  வீற்றிருப்பதற்கு சண்டை இட்டு இறுதியில் அந்த மாதவன் வாய் அமுதம் சங்கு உண்பதைப் பார்த்து தன் மனம் சிதைவது வரை அழகாகச் சொல்லி இருக்கின்றாள் ஆண்டாள்..அந்த மாதவனின் வாய் அமுதத்திற்கு எவ்வளவு ஏங்கி இருந்தால் இப்படி அதற்காகவே பத்துப் பாடல்கள் மனதில் உதித்து இருக்கும் ?

சங்கின்பால் உண்டாகின்ற பொறாமையும் தனக்குக்கிடைக்கவில்லையே என்ற ஏக்கமும் அப்பட்டமாக இப்பாடல்களில்  கண்ணன் மீதான காமத்தை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறாள் ஆண்டாள் :)


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!