Thursday 17 November 2016

98.பாடும் குயில்காள் ஈதென்ன

98.பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல் :98
பாடும் குயில்காள் ஈதென்ன
 பாடல்நல் வேங்கட
நாடர் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில் கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

விளக்கம் :
பாடும் குயில்காள் இது என்ன பாடல் - பாடும் குயில்களே ..இது என்ன பாட்டு
நல் வேங்கட நாடர் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் வந்து பாடுமின் - நல்ல எனக்கு  நன்மை செய்யக்கூடிய  திருவேங்கட நாட்டினை உடையவன் நமக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள்
ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து - ஆடும் கருளக்கொடி உடையவர் வந்து எமக்கு அருள் செய்து
கூடுவாராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே - என்னைக் கூடுவார் எனில் அப்பொழுது நான் உங்களைக் கூவி அழைக்கிறேன் அப்போ கூவுங்க  உங்கள்பாட்டுகளைக் கேட்கிறேன்

துணையற்ற பொழுதுகளாக என் பொழுதுகள் போய்க் கொண்டிருக்கின்றன..ஆனால் குயில்களே நீங்கள் இங்கு  என்ன பாடிக் கொண்டிருக்கின்றீர்கள்..? எனக்கு நன்மை செய்யக்கூடிய திரு வேங்கட நாடன் எனக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு அப்பொழுது வந்து பாடுங்கள்..ஆடும் கருடக் கொடி உடையார் வந்து எனக்கு அருள் செய்து என்னைக் கூடுவாராகில் அப்பொழுது நானே உங்களைக் கூவி அழைக்கிறேன்.அன்று வந்து நீங்கள் பாடுங்கள் .(இப்பக் கேட்கும் மனநிலையில் நான் இல்லை..இசை கூட என் காதுகளுக்குப் பேரிரைச்சலாகவே இருக்கின்றது..என்னைப் புரிந்து கொள்ளுங்கள் )

Image result

ஏற்கனவே குயில் விடு தூது செய்தவள்..முதலில் கெஞ்சி இறுதியில் அவரை வரச்சொல்லி கூவாட்டி காட்டை விட்டேத் துரத்தி விடுவேன் என்று மிரட்டியவள் இன்று பிரிவாற்றாமை தாளாது சற்று உன் கூவலை நிறுத்து எனக் கட்டளை இடுகிறாள் எப்பொழுதும் அவன் நினைவிலேயே வாடுபவளுக்கு குயில் கூவுவது கூட இடைஞ்சலாக இருக்கிறது .
கருளக் கொடி - தமிழில் கருளம் சமஸ்கிருதம் சென்று கருட் ஆகித் திரும்ப  கருடனாக வந்தது..  கலுழன் (வெண்மையும் செம்மையும் கலந்த பருந்தினம்..(தமிழ்அகராதியில் படித்தேன் ) 
கலுழன் மேல் வந்து தோன்றினான் - கம்ப இராமாயணம் ) 
முல்லை நிலக் காட்டில் முன் சென்று பருந்து சென்று,  வேட்டை ஆடுவோருக்கு உதவுமாம்..இது பறப்பதை வைத்தே இருக்கும் பொருள் வழி  அறிந்து செல்வார்களாம் 
அடர்ந்த காட்டுக்குள் ஆள் திரட்ட  ஒலி எழுப்பவே சங்கு (ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள (COMMUNICATION  
அடர்ந்த காட்டுக்குள் வேட்டைப் பொருளைத் தாக்கித் திரும்பி வர ஆழி எனப்படும் சக்கரம் (பூமராங் ) (வளரி )
இவை எல்லாம் முல்லை நிலத்தின் பயன்பாட்டுப் பொருட்கள்..ஆகவே தான் முல்லை நிலக் கடவுளான  திருமாலுக்கு உரியவை ஆகின 
ஆண்டாளின் பாடல்களில் நமக்கு எவ்வளவு செய்தி இருக்கிறது பார்த்தீர்களா?

அவனைக் கூடும் போது மட்டுமே குயில்பாட்டு இன்பப் பாட்டாக ஒலிக்கும் ..அப்படி ஓர் இனிய நாள் வரும்போது நானே உங்களைக் கூவி அழைப்பேன் அன்று வந்து பாடுங்கள் 


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!