Wednesday 30 November 2016

101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்



101.மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற

பாடல் :101
மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத் துள்நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்றுஎன்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

விளக்கம் :

மழையே மழையே மண்புறம் பூசி உள்ளாய்  நின்ற - மழையே மழையே வெளியே (புறத்தே ) மண் பூசி  உள்ளே நின்ற
மெழுகு ஊற்றினாற்போல்  ஊற்று  - மெழுகு ஊற்றியது போல்  ஊற்றி
நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற
அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சகத்து அகப்படத்  தழுவ நின்று - அழகிய பிரான் தன்னை என் நெஞ்சகத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி
என்னைத் ததர்த்திக் கொண்டூற்றவும் வல்லையே ! - என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு  அவரை  ஊற்றவும் வல்லாயோ ?

ததர் - நெருக்கி

இந்தப்  பாடல் பலச் செய்திகளை உள்ளடக்கியது.. மழையிடம்வேண்டிக் கொள்கிறாள் .எப்படி? இதோ கீழே புகைப்படம் பாருங்கள்.. மழைத்துளி பெற்றதும் மண் எப்படி இருக்குனு..அப்படியே மெழுகு மாதிரி இருக்குல்ல.. :) ஆனால் இதுதானா அவள் சொல்ல வந்தது? இல்லை.. உலோகத்தில் சிலை செய்வது பற்றி அறிந்து வைத்திருக்கிறாள்.. பெருமாளின் உலோகச் சிலை செய்யத் தன்னையே மெழுகாக உருக்கித் தர சித்தமாய் இருக்கிறாள்..


மண்ணோடு இணைந்த மழைத்துளி 
MOLD அதாவது ஓர் உருவத்தை மெழுகில் செய்து அதிலே மண் பூசி இறுக்கி , பின்பு ,சூடான  திரவ உலோகத்தை அதிலே ஊற்றுவார்கள்
மண்ணும் மெழுகும் கலந்த mold இல் உலோகம் ஊற்றுதல்

மெழுகு உருகி உலோகம் உருவம் பெற்றதும் ,மண்ணைத் தட்டிவிடுவார்கள் .
Image result

கற்சிற்பம் போல நேரடியாக உலோகத்தில் செய்ய முடியாத காரணத்தினால் இந்த முறை . இவ்வளவு அறிவுடன் இதை அறிந்து வைத்திருந்த பெண்ணாகிலும் காதலும் பிரிவாற்றாமையும் அவளை ஆழ்ந்த துயரத்தில் விட்டுவிட்ட படியால் , இந்த மோசமான வாழ்வில் இருந்து விடுபட,   தானே மெழுகாகி ,அதிலே பெருமாள் என்னும் உலோகத்தை ,ஓர் இடைவெளி இன்றி அவள் மெழுகு உடலில் எந்த  இடமும் விடாம நெருக்கி நெருக்கி   ஊற்றினால்  ,  அவரை என்ஆசை தீரக் கட்டி அணைத்துக் கொள்கிறேன்..
தகிக்கின்ற காதலின் முன்னால் தகிக்கின்ற உலோகத்தின் சூடு பெரிதில்லை. 

பின்னர் அவர் என்னுள் கெட்டிப்பட்டதும் , அன்பின் மழையே நீ பொழிந்து  இந்த மண்ணை  , அதாவது என்னுடைய இந்தத் துன்பவியலான வாழ்வை விலக்கி விடு.  என்னில் இருந்து நலம் மிகும் வேங்கட மலையில் நின்ற வேங்கடவன் வெளியே வரட்டும் .என் ஆவி முழுதும் வேங்கடவன் பரவி , அவன் மீது நானும் விரவி ,சிலையாகி வெளியே வரட்டும்..என்னில் இருந்து அவனே சிலையாகி வெளிப்படட்டும்..(இராமாயணத்தில் அனுமன் நெஞ்சைப் பிளந்ததும் இராமன் தெரிந்தாராம் அதைப் போல இவள் உடைந்தாலும் மண்ணாகிப் போனாலும் இவளில் இருந்து அந்தப் பரமனே வெளியே வருவான் ) 



அவன் வேறு அவள் வேறாக அல்லாமல் அவனே நின்று ஈருடல் ஓர் உயிர் என்பதன்றி ஓருடல் ஈருயிர் ஆகட்டும் ❤❤❤
என் உடலும் உள்ளமும் அவன் ஒருவனுக்கே என்றாகுக ..

இந்த கோதைக்கு ஆண்டாள் எனப் பெயர் வைத்தது யார் ? தீர்க்கதரிசி..

ஆண்டவனையே ஆண்டவள் ஆண்டாள் திருவடிகளே  போற்றி !!!

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!