Wednesday 23 November 2016

99.கணமா மயில்காள்

99.கணமா மயில்காள்
பாடல் :99
கணமா மயில்காள் கண்ணபி
ரான்திருக் கோலம்போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

விளக்கம் :
கணம் மா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று - திரண்டு இருக்கும்  பெரும்  மயில்களே ..கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் (கண்ணனின் நிறம் நீலம் மயிலும் அவ்வண்ணமே )
அணிமா நடம் பயின்று ஆடுகின்றீர்க்கு  அடி வீழ்கின்றேன் - அழகாக நடனம் ஆடுகின்றவர்களுக்கு  பாதத்தில் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்
பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளர் - படம் எடுத்து ஆடும்  பாம்பினைப் பல காலமாகப் படுக்கையாக்கித் தூங்கும் என் மணவாளர்
நம்மை வைத்த பரிசிது காண்மினே - எனக்குக் கொடுத்த வாழ்வு  இதோ உங்கள் பாதத்தில் வீழ்ந்ததுவே தாம் ..நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்

கணம் - கூட்டம் (கணத்தல் - கூடுதல் ,திரள்தல் ) கூட்டமாய்   உலவும் பெரு மயில்களே ! கண்ணபிரான் திருக்கோலம் போன்று இருக்கின்றீர்கள் அவனை மறந்து இங்கே வந்தால் இங்கேயும் அவன் நிறம் கொண்டு நினைவூட்டி விடுகின்றீர்கள்.. ஆனால் என் மனநிலை உங்களுக்குப் புரியவில்லை.. அழகாக நடம் பயின்று ஆடுபவர்களுக்கு நான் சொல்வது என்னவெனில்  உங்கள் பாதம் வீழ்கின்றேன் போதும் நிறுத்துங்கள்!




பணம் (பாம்பின் படம் )  படம் எடுத்து ஆடும் பாம்பினைப் படுக்கையாக்கித் துயிலும் என் மணவாளர் (மாப்பிள்ளை  ) என்னை இப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்..அவர் கொடுத்த பரிசு இத்துன்பமே..இத்துன்ப வாழ்க்கையே அவர் எனக்குத் தந்தது..உங்கள் அடியில் வீழ வைத்து விட்டார் பாருங்கள்..அவரை நினைத்ததற்கு நல்ல பரிசு இது..

ஓர் அழகிய இள மயில் மற்றொரு மயிலின் காலில் வீழ்ந்து விட்டது :( இந்தக் காதலினால் இன்னும் என்னென்ன இழிநிலைக்குச் செல்லப் போகிறாளோ  இன்னும் எதை எல்லாம் பார்க்கணுமோ ?

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!