Saturday 8 October 2016

83.நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்

83.நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
பாடல் :83
நாகத்தி னணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே

விளக்கம் :
 நாகத்தினை அணையானை நன்னுதலாள் நயந்து உரை செய்  - நாகத்தினை படுக்கையாக்கிப் படுத்தவனை அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த
மேகத்தை வேங்கடக் கோன் விடு தூதில் விண்ணப்பம் திரு வேங்கட அரசனுக்கு மேகத்தைத் தூது விட்டு  விண்ணப்பம் செய்த
போகத்தில் வழுவாத புதுவையர் கோன் கோதை தமிழ் - ஒழுக்கத்தில் வழுவாத வில்லிபுத்தூர் தலைவன்  பெரியாழ்வார் மகள் கோதை தமிழ்ப் பாடல்களை
ஆகத்து வைத்து உரைப்பார் அவர் அடியாராக ஆகுவரே ! - தங்கள் அகத்திலே வைத்து உரைப்பவர்கள் பெருமானின் அடியவர் ஆகுவார்களே !

நாகத்தினை அணைத்துக் கொண்டு கிடப்பவனை ,அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த ,மேகத்தைக் கொண்டு வேங்கட அரசனுக்கு தூது விட்டு விண்ணப்பம் செய்தவளுமான


வழுவாத நெறியுடைய வில்லிபுத்தூர் தலைவர்  பெரியாழ்வாரின் மகள் கோதை சொன்ன இந்தப் பத்துப் பாடல்களையும் நெஞ்சகத்தே வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவார்கள் !

திருவேங்கடமுடையானுக்கு மேகத்தைத் தூதாக விட்ட பாடல்களைக் கொண்ட  நாச்சியார் திருமொழி எட்டாம் பத்து இனிதே நிறைவுற்றது !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!