Friday 14 October 2016

84 . சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

84.சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்

நாச்சியார் திருமொழி  ஒன்பதாம் பத்து இனிதே ஆரம்பம் :) இந்தப் பத்துப் பாடல்களும் ஆண்டாள் , அழகருக்குச் சமர்ப்பணம் செய்தவை .திருமால் இரும் சோலை எனப் பெயர்பெற்ற அழகர்மலை அல்லவா ? அதனால் அங்கிருக்கும் பூக்களிடம் பிதற்றுகிறாள் இந்தப் பூவை .
 முன்பு ஒருமுறை கீழிருந்து அழகர் மலை மேலே நடந்து  சென்றது ஓர் அற்புதமான அனுபவம்.. மேலிருந்து வரும் தண்ணீர் வரும் வழி நெடுக பசுமை.. பல திரைப்பாடல்கள் அழகர் மலையில் படமாக்கப்பட்டிருக்கின்றன.. அழகர்கோயில் செல்லும் வழியே முன்பு பசுமையாக இருக்கும்.  ஆனால் நம் மக்களுக்குத்தான் எதையும் பராமரிக்கத் தெரியாதே..அதனால் அன்று ஆண்டாள் கண்ட அழகர்மலை இன்று இல்லை.
Image result for அழகர்கோயில்
அழகர்கோயில் 

 மதுரைக்குப் பெருமை சேர்க்கும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் சித்திரைப் பெருவிழா இந்த மலைவாழ் பெருமாள் தான் .பாண்டிய வைணவத் தலங்களில் முதன்மையானது . அழகான கோட்டை வாசல் வரவேற்கும் . ஆங்காங்கே பழமையின் எச்சங்கள் இன்றும் . மலை மீதுள்ள ஊற்று எங்கிருந்து தோன்றுகிறது என்றே சொல்ல முடியாது.. வற்றாத ஊற்று அது . இன்று நூபுர கங்கை எனப் பெயர் மாற்றம் பெற்ற ,  அதன் உண்மைப் பெயர் என்னவென அறிய இந்தப் பத்துப் பாடல்களைத் தொடர்ந்து படியுங்கள். . பதினெட்டாம்படி கருப்பு தான் முதலில் வரவேற்பார் .

அவருக்குப் பலி (ஆடு அல்லது கோழி )  கூடக் கொடுப்பார்கள்.    மலை மேலே பழமுதிர்சோலை முருகன் அதற்கும் மேலே ராக்காயி அம்மன் கோவில் . கொசுறுத் தகவல் அழகர்மலை போனா நெய்த் தோசை வாங்கிச் சாப்பிடாம வராதீங்க :)


பாடல் : 84
சிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ

விளக்கம் :
 சிந்துரச் செம்பொடிப் போல் திருமால் இரும் சோலை எங்கும் -  பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையான நுண்  பொடி போல திருமால் இருக்கும் சோலை எங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால் - பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளானவை மேலெழும்பியும் பரந்தும் சோலைக்கு வண்ணங்கள்  இட்டன
மந்தரம் நாட்டியன்று மதுரக் கொழுஞ்சாறு கொண்ட - மந்தர மலையைக் கடைந்து அமிழ்தம் பெற்ற பிறகு தோன்றிய ,   அமிழ்தம் போன்ற திருமகளை உண்டவன்
சுந்தரத் தோள் உடையான் சுழலை யினில் இன்று உய்துங் கொலோ - அழகிய தோளை உடையவன் காதல் என்னும் சுழலில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன் ?

சிந்தூரம் என்பது செந்தூரம் என ஆகிவிட்டது தற்பொழுது. சிவப்பை மட்டுமே குறிப்பதாகவும்..

பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையாக அரைத்த நுண்பொடி போல , வண்ணத்துப் பூச்சிகள் மலை மீது மேலே எழுந்தும் பரவியும் தன் வண்ணங்களை மலைக்கு இட்டன

மந்தர மலையைக் கடைந்த பிறகு தோன்றியவள் திருமகள்.. அவளைத்தான் இங்கே மதுரக் கொழுஞ்சாறு என வர்ணிக்கிறாள் கோதை..  அதுவும் மிகக் கெட்டியான (நீர்த்துப் போய் இல்லாம அடர்த்தியாக இருக்கும் -கொழுஞ் சாறு ) அப்படி இனிமையான பிராட்டியைக் கொண்டவன் ( கணவன் ) அதாவது  அவளை உண்டவன் அவளைக் கொண்டவன் :) (உள்ள கொஞ்சம் லைட்டா பொறாமை தெரியுதுல்ல :)) )
அழகிய தோளுடையோன் அவனது காதல் வலையில் சுழன்று கொண்டிருக்கிறேன்.. அதில் இருந்து மீள்வேனோ ?
Image result

எந்நேரமும் அவனையே நினைக்கின்றாள்..அவன் மீதான காதலையேச் சுமக்கின்றாள் அதிலிருந்து தனக்கு விடுதலை கிடைக்குமா என்று சலித்துக் கொள்கிறாள்


விடுதலையை விரும்பாமல் அதிலேயே சுழல்வதும் பின்னர் அவன் சுழலிலே தான் சிக்கிக்கொண்டதாக குற்றம் சாட்டுவதும் அப்பப்பா..பொல்லாதவர்களப்பா இந்தப் பெண்கள் !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!