Friday 17 June 2016

50.பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்

50.பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர் 
பாடல் :50
பைங்கிளி வண்ணன் சிரீதர னென்பதோர்
பாசத் தகப்பட்டி ருந்தேன்
பொங்கொளி வண்டிரைக் கும்பொழில் வாழ்குயி
லே!குறிக் கொண்டிது நீகேள்
சங்கொடு சக்கரத் தான்வரக் கூவுதல்
பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில்
இரண்டத்தொன் றேல்திண்ணம் வேண்டும்.

விளக்கம் :

பைங்கிளி வண்ணன் சிரீ தரன் என்பதோர் பாசத்தில் அகப்பட்டிருந்தேன் - பசுமையான கிளி வண்ணம் கொண்ட சிறீதரன் என்பதோர் பாசத்தில் நான் அகப்பட்டிருந்தேன்..
பொங்கும் ஒளி வண்டு இரைக்கும் பொழில் வாழ் குயிலே ! - ஒளிமிக்க வண்டுகள்  ரீங்காரமிடும்  சோலையில் வாழும் குயிலே
குறிக் கொண்டு இது நீ கேள் - நான் சொல்றதைக் கவனமா கேளு
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் - சங்கு கூட சேர்த்து சக்கரமும்  வச்சிருக்கறவனை வரக் கூவு
பொன்வளை கொண்டு தருதல் - அல்லது    என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு
இங்குள்ள காவினில் வாழக் கருத்தில் - இங்கு உள்ள சோலையினில் நீ வாழ வேண்டும் எனில்
இரண்டத் தொன்றேல் திண்ணம் வேண்டும்  - இந்த இரண்டில் ஒன்றை நீ உறுதியாகச் செய்தே தீர வேண்டும்..

பசுங்கிளி போன்ற பச்சை நிறத்தவன் ஸ்ரீ தரன்..அவன் மீது பாசம் வைத்து அதிலேயே அகப்பட்டுக் கொண்டேன்.. ஒளிமிகுந்த வண்டுகள் ரீங்காரமிடும் சோலையில் வாழும் குயிலே !


நான் சொல்வதைக் கவனமாகக் கேள்..  (சொல்றதைக் குறிச்சுக்க note it down ..and DO what I say )
சங்குடன் சக்கரமும் வைத்திருப்பவனை வரச் சொல்லிக் கூவு..இல்லையேல்..அவர் என்னைச் சேராத காரணத்தால் மெலிந்ததில் கழண்டு விழுந்த என் பொன் வளையல்களைத் திருப்பிக் கொடு.. இந்தச் சோலையில் நீ வாழனும் என்றால் , நான் சொன்ன இந்த இரண்டில் ஒன்றை நீ உறுதியாகச் செய்தே தீர வேண்டும்...பார்த்துக்க..!


குயிலைக் கெஞ்சி ,  கொஞ்சிப் பார்த்தாச்சு..அடுத்து அதிரடியா மிரட்டல் தான் .. நீ இங்க இருக்கணும்னா அந்த சக்கரத்தான் என்கிட்டே இருக்கணும்..ஒன்னு அவனை வரச் சொல்லு..அல்லது அவன் மீது காதல் அன்றி பச்சைப் பால்முகத்தோடு நான் திரிஞ்சேனே ஒரு காலத்துல..அதே கோதையை திருப்பிக் கொடு..அப்பத்தான்  என்  பொன் வளையல் திரும்பப் போட முடியும்..
காதலனை அவன் இவன் என விளிக்கும் பண்பை ஆரம்பித்தவளே இந்தப் பெண் தான் போல :) ஏதோ அந்தக் கலாசாரம் இப்ப புதுசா வந்த மாதிரி அங்கலாய்க்கறாங்க :)
(இதற்கு திருப்பாவையிலேயே முன் ஜாமீன் பெற்றுக் கொண்டுவிட்டாள் ..சிறுபிள்ளைகள் உன் பேர் அழைத்தால் சீறி அருளாதே..)


1 comment:

மறுமொழி இடுக!