Wednesday 29 June 2016

56.நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி

56.நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பாடல் :56
நாற்றிசைத் தீர்த்தங்கொ ணர்ந்துந னிநல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லாரெ டுத்தேத்தி
பூப்புனை கண்ணிப்பு னிதனோ டென்றன்னை
காப்புநாண் கட்டக்க னாக்கண்டேன் தோழீநான்

விளக்கம் : 
நால் திசை தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி - நான்கு திசைகளில் இருந்தும் புனித நீர் கொண்டு வந்து அதை நன்றாகத்  தெளித்து
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்து ஏத்தி - வேதம் ஓதும் அந்தணர்கள் பலர் மந்திரம் சொல்லி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என் தன்னை - பல வித பூக்களை மாலைகளாக அணிந்த புனிதனான கண்ணனோடு என்னை இணைத்து
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் - காப்புக்கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ நான்

Image result for நால் திசை தீர்த்தம் கொணர்ந்து

நான்கு திசைகளில் இருந்தும் பல புனித நதிகளில் புனித தலங்களில் இருந்தும்  புனித நீர் (தீர்த்தம் ) கொண்டு வரப்பட்டு ,அதை நன்றாக மணமக்கள் மீது தெளித்து , மணம் முடிப்பதற்காக வேள்வி செய்ய வந்த பார்ப்பனர்கள் பலரும் மந்திரங்கள் ஓதி ,

பல விதமான பூக்களைப் புனைந்து (அணிந்து ) வந்த புனிதனான கண்ணனோடு என்னையும் இணைத்து கையில் கங்கணம் எனும் காப்புக் கயிறு கட்ட கனவு கண்டேன் தோழீ நான்..
இந்து மத சடங்கு சம்பிரதாயங்களை ஒவ்வொன்றாகச் சொல்லிப் பாடுகிறாள் கோதை.. மாப்பிள்ளை வந்து பெண் பார்த்து , இதுதான் மாப்பிள்ளை என ஊர் அறிய அவர் வலம் வர , இதுதான் பெண் என்று வீட்டில் இருக்கும் (பெண் திருமணத்திற்கு முன்பு ஊர்வலம் செல்வதில்லை..மணம் முடிந்தபின் கணவரோடு சேர்ந்தே  தான் ) பெண்ணைப் பேசி முடிக்க முப்பத்து முக்கோடி தேவர்களும் வந்து பேசி முடித்து ,புதுப் புடவை கொடுத்து கட்டச் சொல்லி   நாத்தனார் கையால மண மாலை சூட்டியாச்சு..இப்ப தீர்த்தம் தெளிச்சு மந்திரம் சொல்லி கண்ணனோடு சேர்த்து கங்கணம் கட்டியாச்சு..:) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!