Thursday 11 February 2016

16.முற்றிலாத பிள்ளைகளோம்

16.முற்றிலாத பிள்ளைகளோம் 
பாடல் :16
முற்றிலாத பிள்ளைகளோம் முலை 
போந்திலா தோமை நாடொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீசிறி
துண்டு திண்ணென நாமது
கற்றிலோம், கடலையடைத்தரக்
கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய
வேகா! எம்மை வாதியேல்.
விளக்கம் : 
முற்று இலாத  பிள்ளைகளோம்- முதிர்ச்சி பெறாத இளம் பிள்ளைகள் நாங்கள்
முலை போந்திலாதோமை நாள்தோறும் - முலை கூட சரியாக வளராத எங்களை நாள்தோறும்
சிறிய இல் மேல் இட்டுக்கொண்டு - நாங்கள் கட்டும் சின்ன வீட்டு மேல் ஏறிக் கொண்டு
நீ சிறிது உண்டு - நீ செய்யும் செயல்கள் சில உண்டு
திண்ணென நாம் அது கற்றிலோம் -  அதை முறிக்கும் வல்லமை நாங்கள் கற்க வில்லை
கடலை அடைத்த அரக்கர் குலங்களை முற்றவும் - கடலை அடைத்து (அணை கட்டி ) அரக்கர் குலங்களை முழுமையா அழிக்கவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா ! - பகையை  இலங்கைக்கே சென்று   சண்டையிட்டு வென்ற வீரமுடையவனே செயலில் வேகம் கொண்டவனே
எம்மை வாதியேல் - எங்களைத் துன்புறுத்தாதே


முற்றிலாத..முற்றுப் பெறாத (முடிவடையாத ) என்றொரு பொருள் உண்டு..ஆனால் அது இங்கு பொருந்தாது.. முற்றிலாத - முற்றாத..பேச்சு வழக்கில் முத்தாத.. முதிராத,  முதிர்ச்சி அடையாத முலைகள் கூட சரியாக வளராத இளம் பிள்ளைகள் நாங்கள்..
ஓவியம் கேஷவ்
அப்படியான எங்களை நாள் தோறும் எங்கள் சிறிய வீட்டை சிதைக்கும் சாக்கில் அதன் மீது ஏறிக்கொண்டு நீ செய்யும் செயல்கள் சில உண்டு. அந்த செயல்களை முறியடிக்கும் அளவுக்கு எங்களுக்கு வல்லமை (திட்பம் -திண்மை ) இல்லை ஐயா..
நன்றி கூகிள் 
கடலை அடைச்சு ..தண்ணி இங்கிட்டு அங்கிட்டுப் போக விடாம அணை கட்டி , அரக்கர் குலங்களை முற்றாக (முழுமையாக ) அழிக்கவும் ,  இலங்கையில் சண்டையிட்டு பகையை  வென்ற வேகா (வீரம் ,செயல் வேகம் உடையவனே ) எங்களைத் துன்புறுத்தாதே !

நன்றி :கூகுல்
இப்பாடலில் வேகா வுக்குப் பதில் சேவகா என்றும் சில பதிப்புகளில் இருக்கு..சேவகன் எனில் சேவை செய்பவன்.. பக்தருக்குச் சேவை செய்பவன் என்று கொள்ளலாம். ஆனால் என் உள் மனம் என்னவோ  " வேகா"வே இவ்விடம் வரும் எனச் சொல்கின்றது :)

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!