Monday 15 February 2016

18.வட்டவாய்ச்சிறு தூதையோடு

18. வட்டவாய்ச்சிறு தூதையோடு
பாடல் :18
வட்டவாய்ச்சிறு தூதையோடு
சிறுசுளகும்மண லுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச்
சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்
சக்கரம் கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை
அறிதியேகடல்கண்ணனே.

விளக்கம் : 

வட்ட வாய்ச் சிறு தூதையோடு - வட்ட வடிவ வாய் கொண்ட சிறு பொம்மைப்பானையோடு
சிறு சுளகும் மணலும் கொண்டு - சிறிய சுளகும் (நாம் வீட்டில் பயன்படுத்தும் சுளகு ) மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோம் எங்களை - இதெல்லாம் வச்சு விளையாடுற எங்களோட
சிற்றில் ஈடழித்து என் பயன் - சின்ன வீட்டை அழிச்சு உனக்கு என்ன பயன் ?
தொட்டு உதைத்து நலியேல் கண்டாய் - இப்படி அதைத் தொட்டு ,உதைத்து  சேதம் செய்கிறாயே
சுடர்ச் சக்கரம் கையிலேந்தினாய் - ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் கண்ணனே - கருப்பட்டி கூட கசந்துட்டா  இனிக்காது என்றறியாதவனா நீ கடல் வண்ணன் கொண்ட கண்ணனே !
கைத்தல் - கசந்து போதல்
இந்தப் பாடல் எனக்கு மிக மிகப் பிடித்திருக்கிறது..என்ன அழகான காட்சிப்படுத்துதல்..இது போன்ற விளையாட்டுகளை எல்லாம் நம் குழந்தைகள் இழந்துவிட்டு டிவிகளில் முடங்கிப் போவது நம் சாபக்கேடு .

மண் பானை 
பெண்கள் என்றாலே சொப்புப் பானை ,சமையல் பாத்திரங்கள் வச்சு விளையாடுவது நம் மரபிலேயே உண்டு போல. சிறு வயதில் சின்னஞ்சிறிய மண் பானையில் சோறாக்கி அதை உண்டு மகிழ்ந்தது உண்டு.இன்றளவும் எனக்கு மண் பாத்திரங்கள் மீது தீராக் காதல் உண்டு :) வட்ட வடிவ வாய் கொண்ட சிறு தூதை = பானை

சுளகு 
இந்தச் சுளகை பேச்சு வழக்கில் சொளகு என்போம். எங்கள் வீட்டில் என் அம்மாச்சி பயன்படுத்தியது இருந்தது. புடைக்கப் பயன்படுத்துவாங்க. கசடுகளை புடைத்து கையில் அழகாகப் பிடித்து வெளியேற்றுவதே பார்க்கத் தனி அழகு.. பனையோலையில் செய்யும் சுளகு , கெட்டியாக இருக்க வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து அதைப் பசை போல தடவி விட்டுவிடுவார்கள்.அது நன்கு இறுகி விடும்.  அவ்வப்போது அதிலே சாணியும் தடவி இறுக்கம் செய்வார்கள். இந்தப் பாடலிலும் ஆண்டாள் மண்ணைப் புடைக்கிறாள் . எதற்கு?  கற்கள் நிறைய கலந்த மணலை புடைத்தால் கல் வெளியேறி நைசான நுண் மணல் கிடைக்கும்.அதை வச்சு வீடு கட்டி விளையாட...:)
நன்றி கூகுல் 
வட்ட வடிவான பானை ,சுளகுல புடைச்ச மணல் கொண்டு விளையாடிட்டு இருக்கும் எங்களை ,நாங்கள் செய்யும் இந்தச் சிறு வீட்டை ,நீ அழிச்சு உனக்கு என்ன ஆகப்போகிறது ? இப்படி அதைத் தொட்டு உதைத்து  சேதப்படுத்திவிடுகிறாயே ?
ஒளிர்கின்ற சக்கரம் கையில் ஏந்தியவனே ! கடல் வண்ண கண்ணனே!

இனிக்கின்ற கருப்பட்டி கூட கைத்தல் ஆகிட்டா (கைத்தல் -கசந்து போதல், , கார்ப்பு  ) இனிக்காது .போலவே என்னதான் நீ மனத்திற்கு இனியவனாக இருந்தாலும் , இப்படி எங்கள் சிறிய வீட்டை நீ இடித்தால் எங்க மனசும் கசந்து போயிடும்..நொந்து போயிடும்..இதைக் கூட அறியாதவனா நீ ?

உனக்காகவே உருகிக்கொண்டு இருப்பவளைக் கண்டு இரக்கமுறு இல்லாவிடில் நீ எவ்வளவு இனிமையானவன் எனினும் என் மனம் உன் மீது வருத்தம் கொள்ளும் என்கிறாள் ஆண்டாள் :)


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!