Wednesday 3 February 2016

9.தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கி

9.தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கி

பாடல் :9
தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் 
தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன்,
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான்,
அழுதழு தலமந்தம் மாவழங்க 
ஆற்றவு மதுவுனக் குறைக்குங்கண்டாய், 
உழுவதோ ரெருந்தினை நுகங்கொடுபாய்ந்து 
ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே.

விளக்கம் :  தொழுது முப்போதும் - மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது 
உன்னடி வணங்கித் - உன் திருவடி வணங்கித்  
தூமலர் தூய்த்தொழுது ஏத்துகின்றேன் - தூய்மையான மலர் கொண்டு வேண்டுகின்றேன் 
ழுது  இன்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே -  எந்தக் குறையுமின்றி பாற்கடல் கண்ணனுக்கே 
பணிசெய்து வாழப் பெறாவிடில்நான் - பணி செய்து வாழும் பேறு பெறாவிடில் நான் 
அழுது அழுது அலமந்தம் அம்மா வழங்க  ஆற்றவும் - அழுது அழுது தடுமாறிப் போய் நான் அம்மா வென அரற்ற 
 அது உனக்கு உறைக்கும் கண்டாய் - மிகவும் அது உனக்கு உறைக்கும் அளவு வலிக்கும் கண்டாய் 
உழுவதோர் எருதினை நுகம் கொடு பாய்ந்து - உழுகின்ற எருதினை ஏர் பிடித்த நுகம் கொண்டே இடித்து அதைத் துடிக்க வைத்து
ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே .- அதற்கு உணவு கொடுக்காம ஒதுக்கினாப் போல பாவம் வரும் 

மூன்று வேளைகளும் உன்னைத் தொழுது ,உன் திருவடி வணங்கி ,தூய்மையான மலர்களை, கள்ளம் கபடம் இல்லா தூய நல் உள்ளத்தோடு ,தூவித் தொழுது நோன்பு நோற்கின்றேன் காமதேவா!


எந்தக் குறையுமின்றி எந்த வித சாக்குபோக்கு இன்றி பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து மகிழ,  மனைவியாகா விடில் (வாழ்க்கைப் படாவிடில்...(என்ன அழகான சொற் பயன்பாடு ..இதைத் தான் கிராமத்துப் பேச்சு வழக்கில் வாக்கப்படுறதுன்னு சொல்றோம்..வாக்கப்பட்டுப் போன இடம் =புகுந்த வீடு )  நான் அழுது அழுது அம்மான்னு அரற்றுவேன்.அடிச்சது அம்மாவே என்றாலும் அம்மா என்றழைத்தே பிள்ளைகள் அழும்.. :)



நான் அப்படி அழுவது உனக்கே வலிக்கும்..உறைக்கும் ...இந்தச் சொல் இப்பவும் எங்கம்மா பயன்படுத்துவாங்க.. எந்த எந்த இடத்தில் எனில்,  காரமான உணவு உறைக்கும் ..அதே போல எவராவது ஒரு விசயத்தை சரியா கவனிக்காட்டி நல்லா உறைக்கிற மாதிரி எடுத்துச் சொல்லு என்பார்கள்..மனசுல ஆழமா பதியற மாதிரி..சுருக்குன்னு இருக்கணும்..ஆண்டாள் இப்படி அழுதா,காமதேவனுக்கே  இதுவரை நாம கவனிக்காம பிழை செய்துட்டோமோ என்று மனசுல குற்ற உணர்வோடு  உறைக்கணும்ங்கறாங்க..

எப்படி ,உழுகின்ற ஓர் எருதினை அந்த ஏர் வச்சு குத்திக் காயப்படுத்தி ,துடிதுடிக்க வைத்து,  அதற்கு உண்ண எதுவும் கொடுக்காம ஒதுக்கி வேதனைப்படுத்துவதோ அதைப் போல நீ என்னையும் வேதனைப்படுத்தின மாதிரி ஆகிடும்..


முதல்ல வேண்டுறாங்க..அப்புறம் கெஞ்சுறாங்க..அப்புறம் மிஞ்சுறாங்க ..மிரட்டுறாங்க..இப்ப என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிட்டா உனக்கே பாவம் வந்து சேர்ந்துடும்னு முடிச்சுட்டாங்க..நம் தவறுகளுக்கு பாவ புண்ணியம் இருக்கும் எனில் ஆண்டவனுக்கும் அதே தான.. :))

காமதேவன் To ஆண்டாள் : ஏம்மா..என்னம்மா இப்படிப் பண்றீங்களே ம்மா :))
ஆண்டாள் To காமதேவன் : அப்ப அந்த நாராயணனைக் கூப்பிடு உன்னை விட்டுடறேன் :) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!