Wednesday 14 December 2016

107.மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

107.மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்

பாடல் :107

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

விளக்கம் :
மச்சு அணி மாட மதிள் அரங்கர் வாமனனார் - மாடியும் அழகான மாடங்களும் மதில்களும் உடைய திருவரங்கம் அங்கிருக்கும்  அரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேவர் தாம்பண்டு நீர் ஏற்ற - பச்சை நிறத்துடையவர் தாம் முன்பு நீர் வார்த்து புவி பெற்ற போதிலும்
பிச்சைக் குறையாகி என்னுடைய பெய் வளை மேல் - பிச்சையில் என்ன குறை மிச்சம் இருந்ததோ என்னுடைய பெய் வளை மீது
இச்சை உடையரேல் இத்தெருவை போதாரே - ஆசை உள்ளவர் போல் இத்தெருவிற்கு வருவாரோ ?

மாடிகளும் அழகுநிறை மாடங்களும் மதில்களும் கொண்ட திருவரங்கத்தின் அரங்கனார் பச்சை நிறத்தவர் , தாம்  முன்பு வாமன அவதாரம் எடுத்த பொழுது ஓங்கி உலகம் முழுவதும் அளந்து நீர் பெற்று (மாவலியால் மூவுலகமும் தாரை வார்த்து கொடுக்கப்பட்டது )  புவியைப் பெற்றார் அந்தப் பிச்சையிலும் இன்னும் குறை ஒன்று மிச்சம் இருக்கின்றது போலும் என்னுடைய
பெய்வளை மீது ஆசை கொண்டு அதை அடைய இத்தெருவிற்கு வருவாரோ ?
Related image
ஓவியம் -கேசவ்
வாமன அவதாரம் எடுத்துப் பின்  ஓங்கி உலகம் அளந்த உத்தமன் ஆண்டாளுக்குப் பிடிச்ச அவதாரம் போலும்..அடிக்கடி இவர் தான் பாடல்களில் வந்துவிடுகிறார்.. மச்சு (கிராமத்தில் மாடியுடன் கட்டப்பட்ட வீடுகளை மச்சு வீடு எனச்சொல்லி கேட்டிருக்கிறேன் 90களில் மண் வீடு புழக்கம் அதிகம் உள்ள காலங்கள் அப்பவே மச்சுவீடு மிகப் பெரியது..ஆண்டாள் காலத்தில் இன்னும் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும் ) வீடுகளும் (மதில் / மதிள் -இலக்கணப் போலி இரண்டும் சரியே பவளம் - பவழம் போல ) சுவர்களும் ,அழகிய மாடங்களும்  பெரிது பெரிதாக உள்ள திருவரங்கத்தின் அரங்கர் வாமன அவதாரம் எடுத்த பொழுது  மாவலியிடம் , நீரைப் பெற்று  இப்புவியையே  தானமாகப் பெற்றும் இன்னும் அவர் மனத்தில் என்ன குறை உளதோ ?


அந்த மாவலியை ஏமாற்றி இந்தப் பூவுலகைத் தானமாகப் பெற்றது போல என்னையும் ஏமாற்றி நான் அணிந்திருக்கும் என்  கைவளைகளை விரும்பிப்  பெற இத்தெருவழியே வருவாரோ ?அப்படியாச்சும் நான் அவரைப் பார்ப்பேனோ ?

கைவளையல்கள் நீ இன்றிப் பிரிவாற்றாமையால் 
கழன்று செல்தல் ஆகா 
நீ எமை நெருக்கி,அவை  உடைந்து போதலே அவற்றின் பிறவிப் பயன் ;-)



1 comment:

மறுமொழி இடுக!