Wednesday 21 December 2016

112.கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக்

112.கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்

பாடல் :112

கண்ணாலங் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணாந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

விளக்கம் :
கண்ணாலம் கோடித்துக் கன்னிதன்னைக் கைப்பிடிப்பான் - புதுத்துணி உடுத்தி ,  திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என்று
திண் ஆர்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து - உறுதியுடன் நினைத்திருந்த சிசுபாலன்  தன் ஒளி அழிந்து
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த - அவன் அண்ணாந்து பார்த்திருக்க அங்கே அவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணும் ஊர் பேரும் அரங்கமே - பெண்ணாளன் போற்றும் ஊர் பெயரும் அரங்கமே

தேசு -ஒளி
விதர்ப்ப நாட்டு அரசன் வீமனுக்கு  (பீஷ்மகன் )  ருக்மி என்ற ஆணும் ருக்மணி என்ற பெண்ணும் இருந்தனர். ருக்மியின் நண்பன் சிசுபாலன் .சிசுபாலனுக்கு ருக்மணியை மணம் முடித்து வைக்கலாம் என ருக்மி முடிவு செய்ய ருக்மணியோ கண்ணனை விரும்புகிறாள்..
சிசுபாலன் புதுத் துணி உடுத்தி ருக்மணியைத் திருமணம் செய்து கைப்பிடிக்கலாம் என்று உறுதியுடன் காத்துக் கிடக்க , அவன் முகத்தில் கரியைப் பூசி அவன் அண்ணாந்து பார்த்திருக்க,  (அவன் பிரமித்து ஆ வென வாய் பிளந்து பார்த்திருக்க  ..அவனைத் திட்டும் பொழுது கூட அவன் பெருமை உரைக்கத் தவறுவதில்லை இப்பெண் )  அவன் கண் முன்னேயே கண்ணன் ருக்மணியைத் தட்டிக் கொண்டு போனார்..

Related image

அப்படி பெண் மனம் அறிந்து நடந்தவன் இன்று என் மனம் அறியாமல் போனதேன்..? இக் கோதையின் மனம் அறியாமல் இருப்பவனைத் தான் பெண்ணாளன் என்கிறது ஒரு ஊர்..அந்த ஊரின் பெயர் திருவரங்கம்
(சற்று அவளது  குமட்டில் , ம்க்கும் என  இடித்துக் கொண்டே இதைச் சொல்வது எண்ணிக் கொள்ளுங்கள் )

கண்ணாலம் - அட பேச்சுத்தமிழ் ..:) 

ருக்மணின்னு பேர் சொல்லல பாருங்க ..பொறாமை.. :) ருக்மணிக்குத் தான் விரும்பிய வாழ்க்கை கிட்டி விட்டது அல்லவா ? அன்று அவள் மனம் புரிந்து மணம் புரிந்தான் அல்லவா..இன்றைக்கு என்ன கேடு வந்ததாம் ?
இதுவரையான  பாடல்களில் திருவரங்கச் செல்வனார் ன்னு மரியாதையா கொஞ்சிட்டு பெண்ணாளனாம் அவனைக் கொண்டாடும் ஓர் ஊரின் பெயர் திருவரங்கமாம் என்கிறாளே..
Related image

கண்ணன் அருகில் இருந்தால் அவன் கையையே பற்றிக் கொண்டிருப்பாள்..இல்லாத கோபத்தில் அவன்மீது  பற்றிக்கொண்டு வருகிறது போல..இதெல்லாம் பெண்களுக்கே உண்டான கோபம்..தொட்டதுக்கெல்லாம் இல்லை தொடாத காரணத்தால் வருவது. :)

என்னதான் அவள் கோபம்  வெளிப்படுத்தினாலும் இந்தக் கோபம் கூட  அணிபின் மற்றுமொரு வெளிப்பாடே..ஒரு கட்டத்துக்கு மேல ஏக்கம் கோபமாக இயலாமை ஆற்றாமையாக வெளிப்படும்.. :)அது போலத்தான் இதுவும்..

இதுக்காக எல்லாம் நீங்க ஆண்டாளைக் கோச்சுக்காதீங்க ..அவளாச்சு அரங்கனாச்சு நாம எதுக்கு ஊடால தலையிட்டுக்கிட்டு..
என்ன நாஞ்சொல்றது ?:) 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!