Tuesday 20 December 2016

111.பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு

111.பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு
பாடல் :111
பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் பேர்க்கவும் பேராவே
விளக்கம் :
பாசி  தூர்த்துக் கிடந்த பார்மகட்கு பண்டு ஒருநாள் - முன்பு ஒருநாள்  பசுமை நிறைந்து கிடந்த   நிலமகளுக்காக
மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம் - அழுக்கேறிய  உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக வடிவெடுத்த
தேசுடைய தேவர் திருவரங்கச் செல்வனார் - ஒளியுடைய   தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி இருப்பனகள் பேர்க்கவும் பேராவே  - என்னிடம் முன்பு  பேசியவற்றை என் மனத்தில் இருந்து நீக்க முயன்றும் நீக்க முடியவில்லை

பெயர்த்தல் /பேர்த்தல் - அகற்றுதல் /நீக்குதல்
தூர் - நிரம்பி /அடைஞ்சு (தூர் வாருதல் -நிறைந்து கிடக்கும் குப்பைகளை வாருதல் )
பாசி - பசுமை

முன்பு ஒருநாள் பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக ,அவளின் நலன் பொருட்டு அழுக்கேறிய உடம்பில்,  நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக வடிவெடுத்தவர் ஒளி உடைய திருவரங்கச் செல்வனார்..என்னிடம் என்னவெல்லாம் காதல் மொழி பேசினார் ? ஆனால் மறந்துட்டாரே..அவர் மறந்தாலும் என்னால் மறக்க முடியவில்லையே.. அவர் பேசியவற்றை எல்லாம் என் மனசுல இருந்து முழுசா பெயர்த்துடவே நினைக்கறேன் ஆனாலும் பெயர்க்க முடியலையே என்ன செய்வேன் ?


ஓவியம் - கேசவ் 

இங்கே பெயர்க்க என்ற சொல் இவள் வலிக்கு இன்னும் வலு சேர்க்கிறது.. ஆமாம் வெறுமனே நீக்குதல் விலக்குதல் விட பெயர்க்குதல் இன்னும் அவள் ஆழ் மனத்தில் அவள் காதலன் உரைகள் எந்த அளவுக்கு ஆழமாகப் பதிந்து இருக்கிறது என்பதை நமக்குப் பறை சாற்றுகிறது..ஏதேனும் கனமான பொருளை நகர்த்தவே முடியாத ஒன்றை அகற்ற இந்தப் பெயர்த்தல் என்ற சொல் இதுவரை பேச்சு வழக்கில் பயன்படுகிறது.. இவள் காதலனும் அவன் தந்த நினைவுகளும் அப்படித்தான்...(ஆமா இவ எப்ப கண்ணனோட பேசினாள்ன்னு கேட்கப் பிடாது..அதுவும் இவ்வளவு பாடலுக்கு அப்புறம்..ஏனெனில் அவள் வாழ்வது ஒரு கற்பனை வாழ்க்கை..அதுல கண்ணன் வருகிறான் அவள் போட்ட கோலம் அழிக்கிறான்..அவள் உடையைத் திருடி வைத்து விளையாடுகிறான்..அவள் வளையல் அவனால் கழன்றது..இப்படி வாழ்ந்து கொண்டு இருப்பவளை இப்பப் போய் நாம அவர் எப்ப வந்து உன்கிட்ட பேசினார்ன்னு நாம கேட்கக்கூடாது ..பேசி இருப்பாரா இருக்கும் :)
Related image


அன்று ஒரு பெண்ணுக்காக மானமில்லா பன்றியாகக் கூட வடிவம் எடுத்தாயே..(பன்றியை மானம் இல்லாததுன்னு சொல்றாளே என்று கோபப்பட வேணாம்..  இப்ப அவளுக்கு இருக்கிறது பித்துப் பிடித்த மனது..போன பாட்டில் கூட சீதையை நினைச்சு அலைஞ்ச பித்துப் பிடித்தவனேன்னு தான் இராமனை வசை பாடுகிறாள்..ஆகவே அவள் மனம் உணர்ந்து நாம் புரிந்து கொள்வோமாக போடா பன்னி ன்னு செல்லமா காதலனைத் திட்டுறா..SORRY  வாடா பன்னி ன்னு ..ஏன்னா அவன் வரவை எதிர்நோக்கித் தான் இவ்வளவும் :)  )
இன்று ஒரு பெண் உன்னை நினைத்து ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன் ஆனால் இப்ப வரை கண்டுகொண்ட மாதிரியே தெரியல..நானும் உன்னோடு பேசி லயித்த நாட்களை மறக்கவே நினைக்கிறேன்..ஞாபகம் ரணமாக வதைக்கிறது.. தொட்டாலே வலிக்கிறது இதிலே எங்கிருந்து நான் பெயர்த்து எடுக்க..

எவ்வளவு முயன்றும் உன் பேச்சுக்களைப் பெயர்த்து எடுக்கவே முடியவில்லை :((

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!