Monday 19 December 2016

110.உண்ணா துறங்கா தொலிகடலை

110.உண்ணா துறங்கா தொலிகடலை
பாடல் :110
உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற பேதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே

விளக்கம் :
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து - உணவு உண்ணாமல் தூங்காமல் நாளும் ஒலிக்கின்ற கடலை ஊடே சென்று அறுத்து (பிளந்து )
பெண் ஆக்கை  யாப்புண்டு தாம் உற்ற பேது எல்லாம்  - பெண் உடல்  மீது விருப்பம் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு  தாம் உற்ற மயக்கத்தை (பித்து நிலையை ) எல்லாம்
திண் ஆர் மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார் - உறுதி நிறைந்த மதிள் சூழ் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளேயே எண்ணுவரே  - மறந்துவிட்டு (நினைக்காமல் ) தம்முடைய நன்மைகளை மட்டுமே நினைக்கிறாரே

ஒலிகடல் - வினைத் தொகை
ஒலித்த கடல்,  ஒலிக்கின்ற கடல்,  ஒலிக்கும் கடல்
யாக்கை/யாப்பு  - கட்டுதல்

அன்று ஒரு பெண்ணைப் பிரிந்தார் . யார் ராமன்..யாரை சீதையை.. பிரிவுத் துயர் தாளாமல் உண்ணல உறங்கல.. கடலைக் கூட இரண்டாகப் பிளந்து சென்று அவளைக் காப்பாற்றத் துணிந்தவர். முப்பொழுதும் அவள் நினைப்பே..அவள் உடம்பின் மீது ஆசை கொண்டு அதிலே கட்டுண்டவர்  அதிலேயே உழன்று அதனால் தாம் அடைந்த பித்து நிலை எல்லாம் இன்று  மறந்தாரோ அந்தத் திண் ஆர்ந்த (உறுதி நிறைந்த ) மதில் சூழ் திருவரங்கச் செல்வனார் ?


அன்று ஒரு பெண்ணைப் பிரிந்து அவள் உடல் மீது ஆசை கொண்டு பித்துடன் திரிந்ததை மறந்துவிட்டு இன்று தன்னுடைய நன்மைகளை மட்டுமே எண்ணுகின்ற சுயநலவாதியாக மாறி விட்டாரே ?
அவர் ஒரு பெண் மீது பித்து கொண்டார்..இன்று அவர் மீது பித்து கொண்ட பெண்ணை எப்படி மறந்தார்? அன்று அவர் இருந்த அதே நிலையில் தானே இன்று நான் இருக்கிறேன்..எப்படி அதை எண்ணாது போனார் என்னவர் ?அன்று ஒரு பெண்ணால் தான் பெற்ற அதே துன்பத்தை எண்ணாது அதையே அவரும் ஒரு பெண்ணுக்குச் செய்யலாமா?

எனக்குச்  செய்கின்றாரே ..என்னை  மறந்தாரே..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!