Thursday 5 January 2017

121.கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்

121.கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்

பாடல் :121
கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப்பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களுக் கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
 காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்

விளக்கம் :
கற்று இனம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்  - கன்றுகள் இனம் மேய்த்து அதையே தொழிலாகப் பெற்றான் (ஆய்ச்சியர் )
காடு வாழ் சாதியுமாகப் பெற்றான் - காட்டிலே வாழ்ந்து இடையர் சாதியுமாகப் பெற்றான்

பற்றி உரல் இடை யாப்பும் உண்டான் - தனது குறும்புத் தனங்களால் ,தனது தாயால் உரல் பற்றி  கட்டும் உண்டான்

பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ - பாவிகளே ! உங்களது ஏச்சுக்களை நிறுத்தும் நாள் எந்நாளோ ?

கற்றன பேசி வசையுணாதே - அவனை வசைபாடப் கற்றதை வைத்துக் கொண்டு என்னிடம் ஏதேனும் பேசி என்னிடம் திட்டு வாங்காமல்

காலிகள் உய்ய மழை தடுத்து- பசுக்கள் உய்ய மழை தடுத்து

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற - ஓர் அரசனாக தன்னை நம்பியுள்ளவர்களைக் காப்பாற்ற  குடை ஏந்தி நின்ற
கோவர்த்தனத்து என்னை உய்த்திடுமின் - கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்திடுங்கள்
காலிகள் - பசுக்கூட்டங்கள்

கன்றுகள் இனம் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டவன் தான்..ஆய்ச்சியர் .
காட்டினில் வாழும் இடையர் சாதியுமாகப் பெற்றான்.. (முல்லை நில மாயோனும் இவ்வாறே.. காடும் காடும் சார்ந்த இடம் முல்லை..பசுக்கள் மேய்ப்பதே தொழில்..அதனால் இடையர் என்ற பெயரும் வந்தது . )
ஆமாம் வெண்ணெய் திருடியவன் தான்..குறும்புத்தனங்கள் செய்து தாயால் உரலில் கட்டப்பட்டுக் கிடந்தவன்தான்..



இதற்காக அவனை நீங்கள் ஏசுவீர்களோ (ஏச்சு - இழிவாகப் பேசுதல் ) பாவிகளே!  அவனைத் திட்ட நீங்க கற்றனவற்றை  பேசி  என்னிடம் திட்டு வாங்காமல் , பசுக்கள் பிழைக்க பெருமழையைத் தடுத்து,ஒரு அரசனைப் போல வெற்றிக் குடையேந்தி நின்ற அந்த கோவர்த்தன மலைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்..


Image result for govardhana

மழை வேண்டி நந்தகோபர் இந்திரனுக்கு யாகம் செய்ய முயற்சி செய்ய, கண்ணனோ , அதைக் காரணங்கள் சொல்லித் தடுக்க இந்திரனுக்குக் கோபம் மூண்டது. இதனால் பெருமழையைத் தருவித்தான்..ஆகவே ஊராரையும் பசுக்கூட்டங்களையும் காப்பாற்றும்  பொருட்டு, கோவர்த்தன மலையையே தூக்கி ஒற்றை விரலில் ஏந்தி நின்றான் கண்ணன்..அந்த கோவர்த்தன மலைக்கு என்னை அழைத்துச் சென்று என்னைக் காப்பாற்றுங்கள். 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!