Wednesday 25 January 2017

135.அனுங்க வென்னைப் பிரிவுசெய்

135. அனுங்க வென்னைப் பிரிவுசெய்
பாடல் 135
அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவர்ந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தனனைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

விளக்கம் :
அனுங்க என்னைப் பிரிவு செய்து - என்னை  வருந்த என்னைப் பிரிவு செய்து
ஆயர் பாடி கவர்ந்துண்ணும் - ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து  உண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தனனைக் கண்டீரே ? - வெண்ணெய் மணம் கொண்டவன்  குட்டைக் காளை  கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
கணங்களோடு  - தன் நண்பர் கூட்டத்தோடு
மின் மேகம் கலந்தாற்போல -மின்னலும் மேகமும் கலந்தது போல
வனமாலை மினுங்க நின்று விளையாட  - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலை  மினுங்க அங்கு நின்று விளையாட
விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி :  நான் வருந்தும் அளவுக்கு என்னைப் பிரிந்து , ஆயர் பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும் , வெண்ணை நாற்றம்(நாற்றம் - என்று மோசமான மணத்தைக் குறிப்பதாக இன்று ஆகிவிட்டது.. நாற்றம் என்றாலே மணம் )   கொண்டவன், குட்டைக் காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா ?
Image result for krishna with cows


பதில் : 
தனது நண்பர்களோடு , கருத்த மேகமும் அதிலே மின்னலும் கலந்தாற்போல , காட்டிலே பூத்த பல பூக்களைக் கொண்டு மாலை அணிந்து அது கருத்த கண்ணனின் தேகத்தில் மினுமினுங்க அவன் அங்கு நின்று விளையாடக் கண்டோமே ..
குணுங்கு நாறி -குட்டேறு - அவனைக் காணோம் எனக் கேட்கும் போது எப்படிச் செல்ல வசைகளைச் சொல்கிறாள் பாருங்கள்..அடேய் அந்த வெண்ணெய் நாற்றம் பிடிச்ச மேனியன் ,  குட்டைக் காளையைப் பார்த்தீங்களா டா .. :)
காட்டோரமாத் திரிபவன் தானே..அங்கே தென்படும் காட்டுப்பூக்கள் பறித்து மாலை அணிந்து கொள்வான் போல.


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!