Sunday 15 January 2017

131.உள்ளே யுருகி நைவேனை

131.உள்ளே யுருகி நைவேனை
பாடல் : 131
உள்ளே யுருகி நைவேனை
உளளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தனனைக் கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே

விளக்கம் : 
உள்ளே உருகி நைவேனை - இவனுக்காக என் உடல் மட்டுமன்றி உள்ளமும் உருகி உருகி நைந்து போய்க்கொண்டிருக்கிறது அப்படி நொந்து போனவளை
உளளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கின்றாளா அன்றி இல்லாமல் போய்விட்டாளோ என்னவெனக் கேட்காத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் - என்னைக் கொள்ளை கொண்ட குறும்பனைக்
கோவர்த்தனனைக் கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கிய கோவர்த்தனனைக் கண்டீர்கள் என்றால்
கொள்ளும் பயன் ஒன்றில்லாத கொங்கை தன்னைக்  - அவனை அடையாமல் எந்தப் பயனற்றும் கிடக்கின்ற என் கொங்கைகளை
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேரோடு பிடுங்கி அள்ளிப் பறித்து
அவன் மார்பில் எறிந்து என் அழலை தீர்வேனே - அவன் மார்பில் எறிந்து  , காமத்தினால் வந்த வெப்ப நோய் தீர்வேனே

கொள்ளை கொள்ளி - அழகான சொல்லாடல் கொள்ளை கொண்டவன் சில நேரம் குழந்தைகளை உயிர்வாங்கி எனத் திட்டுவோமே அது போல :)
அழலை - உடல் சூட்டினால் வருகின்ற நோய். தீயாய்ச் சுடும் காய்ச்சல் )

கண்ணனை நினைத்து நினைத்து உள்ளம் உருகி உள்ளுக்குள்ளேயே நைந்து போகின்றேன் (நைந்து என்பதும் இங்கே அவள் துன்பத்தை வெளிப்படுத்தும் ஆகச்சிறந்த சொல்..வெறுமனே கிழிவதல்ல.அதற்கும் மேலாக .. நினைத்து வாடி மெலிந்து நொந்து வெந்து போய் விட்டாள் )

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

ஆனால் அதைப்பற்றி அந்தக் கண்ணன் அக்கறை கொண்டானில்லை. (பேச்சு வழக்கில் கேட்போமே..இருக்கேனா செத்தேனான்னு ஒரு வார்த்தை விசாரிச்சியான்னு ..அதைத்தான் சொல்றா ) இருக்காளோ இல்லாமப் போயிட்டாளோன்னு என்னான்னு கூடக் கேட்காத, என்னைக் கொள்ளை கொண்டக் குறும்பன் (சிறு வயது கண்ணனின் குறும்பை வைத்துத்தான் அவளுக்கு கண்ணன் மீது தீராத காதல் வந்திருக்கக்கூடும் என்று ஊகித்து வைத்தேன் மெய்ப்பித்து விட்டாள் ) கோவர்த்தனனைக் கண்டேன் எனில் ( ஏன் இவ்விடத்தில் கோவர்த்தனன் ..பசுக்களும் மக்களும் உயிர் வாழ கொற்றக் குடை ஏந்தி மழையில் இருந்து மலை உயரப் பிடித்துக் காப்பாற்றியவன்.ஒருவேளை இவளையும் காப்பாற்றக் கூடும் )
Image result for krishna hugging radha

எந்தப் பயனும் இல்லாத..ஆம் எந்த ஒரு பொருளும் சேரிடம் சேர்ந்தால் தானே அதற்குப் பெருமை கௌரவம்..வைரம் குப்பையில் கிடக்கலாமா..எவ்வளவு பயன் செய்யத் தக்க பொருளாகினும் அது பயன்படக்கூடிய இடத்தில் இருந்தால்தான் அப்பொருளால் பயன் இல்லாவிடில் அது இருந்தும் பயனற்ற ஒன்றுதான். அது போலத்தான் அவன் தொடாமல் பயனற்றுக் கிடக்கின்றன என் மார்புகள்.அவனை மட்டும் கண்டேன் எனில் பயனற்ற இந்த மார்புகளை வேரோடு பிடுங்கி மொத்தமாக அள்ளி எடுத்து , அவன் மார்பில் எறிந்து , நாள்தோறும் காமத்தினால் வெந்து சூடாகி வந்த என் வெப்ப நோய் தீர்வேனே

அவள் காமத் தீ அவன் அணைக்கவே அணையும் !

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!