Saturday 14 January 2017

128.அழிலும் தொழிலு முருக்காட்டான்

128.அழிலும் தொழிலு முருக்காட்டான்
பாடல் : 128
அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னா னவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே

விளக்கம் :
அழிலும் தொழிலும்  உருக்காட்டான் - அழுதாலும் தொழுதாலும் பயனில்லை தன் உருவை என் கண் முன் காட்டாதவன்
அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - அச்சம் கொள்ளாதே நான் இருக்கிறேன் என்று ஓர் ஆறுதல் சொல் சொல்லவில்லை அவன்
தழுவி முழுகிப் புகுந்து என்னைச் - அந்த ஒருவன் என்னைச் சுற்றித் தழுவி என்னுள் முழுகிப் புகுந்து என்னைச்
சுற்றிச் சுழன்று போகானால் - சுற்றிச் சுழன்று போகின்றான்
தழையின் பொழில் வாய் நிரைப்பின்னே - சோலையில் மயில் தோகை குடையின்  கீழே பசுக்களின் பின்னே
நெடுமால் ஊதி வருகின்ற - நெடுமால் ஊதி வருகின்ற
குழலின் தொளைவாய் நீர் கொண்டு - புல்லாங்குழலின் துளையின் வழியாக வெளி வரும் நீர் கொண்டு
குளிர முகத்துத் தடவீரே  - என் முகம் குளிரக் குளிரத் தடவுங்கள் !


கண்ணனுக்காக ஏங்கித் தவித்து அழுகின்றேன்..அவனையே நாளும் தொழுகின்றேன். எதற்கும் மசியவில்லை. அவன் உருவம் காட்டவில்லை.
இங்கே ஒரு பெண் அவனுக்காக உருகிக் கொண்டிருக்கிறாளே என்று அவளுக்கு ஆறுதலாக, அஞ்சாதே நான் இருக்கிறேன் என்று ஒரு சொல் கூடச் சொல்லவில்லை.  என்னைத் தழுவி என்னுள் மூழ்கிப் புகுந்து என்னைச் சுற்றிப் போகின்றான் ( virtual Hugging.. ) அவன் நினைவலைகள் இவ்வாறு பாடாய்ப்படுத்துகின்றன


சோலையில் , மயில் தோகைக் குடையின் கீழே , பசுக்களை மேய்த்துக் கொண்டு அதன் பின்னே சென்று கொண்டு நெடுமால் புல்லாங்குழல் ஊதிச் செல்கின்றான்..அவன் ஊதும் பொழுது குழலின் துளையில்  இருந்து வெளிவருகின்ற அவன் வாயமுதம் (உமிழ் நீர் என  எழுதுனா கோச்சுக்குவா  )
கொண்டு அவளின் முகத்தில் குளிரக் குளிர (ஏதோ ஏனோ தானோன்னு தெளிச்சு விட்டுட்டுப் போனா திருப்தி வராதாம்..அதை அப்படியே முகத்தில் அவள் முகம் நன்கு குளிரும் வகையில் நிறையத் தடவணுமாம் ) தடவுங்களேன் .
Image result for krishna kissing radha

மனம் கண்ணனுக்காக எந்த அளவுக்கு ஏங்கித் தவித்திருக்கும் ? அவனோடு இதழ் பொருத்தி மகிழ்ந்து இருக்க எண்ணியவளுக்கு அந்த இதழ் நீரே தீர்த்தம் அதுவே அவளை உயிர்ப்பிக்கும் வழி எனச் சொல்கின்றாள்
கண்ணாமூச்சி ஏனடா...என் கண்ணா 
நான் கண்ணாடி பொருள் போல டா...
அந்த நதியின் கரையை நான் கேட்டேன் 
அந்தக் காற்றை நிறுத்தியும் கேட்டேன் 
வான் வெளியைக் கேட்டேன் விடையே இல்லை 

என் மனம் உனக்கொரு விளையாட்டு பொம்மையா 
எனக்கெனத் தனியாக உணர்ச்சிகள் இல்லையா 
பூவின் கண்ணீர் நீ ரசிப்பாய் ...
நான் என்ன பெண் இல்லையா என் கண்ணா 
அதை நீ காண கண் இல்லையா..உன் கனவுகளில் நான் இல்லையா.. 
தினம் ஊசலாடுது என் மனசு 
ஊமையல்ல என் கொலுசு..
- வைரமுத்து எழுதிய இந்தப் பாடல் ஆண்டாளுக்காகவே எழுதப்பட்டது போல உணர்கின்றேன் :)

1 comment:

  1. "தேவதை குளித்த துளிகளை அள்ளி
    தீர்த்தமென்றே நான் குடிப்பேன்" என்ற வரிகளையும் ஒப்பிடலாம்

    ReplyDelete

மறுமொழி இடுக!