Saturday 14 January 2017

130.வெற்றிக் கருள கொடியான்றன்

130.வெற்றிக் கருள கொடியான்றன் 
பாடல் :130
வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பணைத்தோளோடு
அற்ற குற்ற மவைதீர
அணைய வமுக்கிக் கட்டீரே

விளக்கம் : 
வெற்றிக் கருள கொடியான் தன் மீ  - மேன்மை பொருந்திய  வெற்றிக் கருளக் கொடியான் தன்
மீது ஆடா   உலகத்து - ஆணையை மீறி ஆடாத செல்ல முடியாத உலகத்து
வெற்ற வெறிதே பெற்ற தாய் வேம்பே ஆக வளர்த்தாளே- அவனைப் பெற்ற தாய் யசோதை அவனை ஒருவனுக்கும் சிறிதும் பயனில்லாத கசப்பான வேம்பாக வளர்த்தாளே
குற்றமற்ற  முலை தன்னைக் - அவனைத் தவிர வேறு எவரும் தொட முடியாத வேறு எவரையும் நினையாத என் குற்றமற்ற முலைகளை
குமரன் கோலப் பணைத்தோளோடு - குமரனின் அழகிய பருத்த தோளோடு
அற்ற குற்றம் அவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே - இதுவரை அவன் தோள் சேராத குற்றம் அவை தீர நன்கு அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !

கருளக் கொடி - முல்லை மாலுக்கு உரியது வேட்டைக்குச் செல்லும் பொழுது கருளன் வழி காட்டும் அதுவே பின்னாளில் விஷ்ணுவுக்கும் ஆகி வந்தது )
வெற்ற வெறிதே - துளியும் பயனின்றி

வெற்றி பெற்ற கருளக் கொடியான் மேன்மை பொருந்திய அவன் ஆணையை மீறிச் செல்லாத இந்த உலகத்தில் , அவனைப் பெற்ற தாய் யசோதையோ அவனைத் துளியும் பயனில்லாத வேம்பாக வளர்த்து விட்டாள் (யசோதை பெறவில்லை எனினும் வளர்த்தவள் மனம் குளிர பெற்றவள் ஆக்கிவிட்டாள் அதே நேரம் இப்படி அவனை வளர்த்ததற்கு குற்றமும் சாட்டுகின்றாள் )

Image result for arts of shanmugavel

காதல் கைகூடாத வேதனையில் கண்ணனை என்னவெல்லாம் திட்டுகின்றாள் பாருங்கள். போன பாட்டில் கொடியவன் கடியவன் என்றாள் . இப்பொழுது இவனால் யாதொரு பயனும் இல என்கிறாள் ( இதுவும் ஒருவித அன்பு .எவர் மீது நாம் அதிகம் அன்பு செலுத்துகின்றோமோ அவர்கள் தவறு செய்யும்போது தான் கோபமும் அதிகமாக வரும் அதன் பொருட்டே அவர்களை அதிகமாகக் கடிந்து கொள்வோம்..கோபம் இருக்கும் இடத்தில் தான் குணமும் இருக்கும் என்பது ஆன்றோர் வாக்கு ..நம் ஆண்டாளும் அப்படியே..அவளை யாரும் பிழையாக எண்ண வேண்டா.. )


குற்றம் அற்ற முலைகள்..உன்னைத் தவிர வேறு எவரையும் சேர விரும்பாத , வேறு எவரும் இதுவரை தொடாத உன்னை மட்டுமே சேரக் காத்திருப்பவை உனைச் சேர்வதன்றி ஒரு பாவமும் அறியாத குற்றம் அற்றவை. இதுவரை உன் தோள் சேராத ஒன்றே அவற்றின் குற்றம். அந்தக் குற்றம் அவை தீர , குமரனின் (இதுவரை குமரன் என்ற பெயரை முருகனுக்கு மட்டும் தானே பயன்படுத்திக் கேட்டிருப்போம் . பாருங்கள் இது பொதுப் பெயர் போலும் தன் தலைவனுக்கும் இப்பெயரைப் பயன்படுத்துகின்றாள் ) பெரிய பருத்த தோளோடு அவற்றை நெருக்கி அணைத்து அமுக்கிக் கட்டுங்கள் !அவை இதுவரை பெற்ற துன்பமும் நீங்கட்டும். ஆறுதல் பெறட்டும்.!!


No comments:

Post a Comment

மறுமொழி இடுக!