Friday 6 January 2017

122.கூட்டிலிருந்து கிளியெப்போதும்

122.கூட்டிலிருந்து கிளியெப்போதும்

பாடல் :122
கூட்டிலிருந்து கிளியெப்போதும்
 கோவிந்தாகோவிந்தாவென்றழைக்கும்*
ஊட்டுக்கொடாதுசெறுப்பனாகில்
உலகளந்தானென்றுயரக்கூவும்*
நாட்டிற்றலைப்பழியெய்தி
உங்கள்நன்மையழிந்துதலையிடாதே*
சூட்டுயர்மாடங்கள் சூழ்ந்துதோன்றும் 
துவராபதிக்கென்னையுய்த்திடுமின்

விளக்கம் :
கூட்டில் இருந்து கிளி எப்போதும் - கூட்டில் இருந்து கிளி எப்போதும்
கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கும் - கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கும்
ஓட்டுக் கொடாது செறுப்பனாகில் - உணவு கொடாமல் நான் வெறுத்து தடுத்தேனெனில்
உலகளந்தான் என்று உயரக் கூவும் - உலகளந்தான் என்று உயரக் கூவும்
நாட்டில்இற்றலைப்பழி எய்தி- நாட்டிலே இப்படிப் பெருத்த பழி அடைந்து
உங்கள் நன்மை அழிந்து தலையிடாதே - உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராமல்
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கு - உயர்ந்த மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கே
என்னை உய்த்திடுமின் - என்னை அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்

நான் கூட்டுக்குள் வைத்திருக்கும் கிளி கோவிந்தா கோவிந்தா எனக் கூவுகின்றது. அதற்கு உணவு கொடுக்காமல் வெறுத்து அதை தடுத்தேன் எனில் அப்பொழுதும்  அது உலகளந்தான் என உயரக் கூவும்..இப்படி இப்பூவுலகில் ஒரு தீராப் பழியை அடைந்து உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராமல் முகப்பு பெரிதாக உயர்ந்த மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராபதிக்கே என்னை அழைத்துச் சென்று காப்பாற்றுங்கள்



எனக்கென்னவோ இந்தப் பெண் இதை மேலோட்டமாகக் கூறவில்லை என்று தோன்றுகின்றது.. அவள் உடற்கூட்டில் ஒட்டிக் கொண்டு இருக்கும் உயிர் என்ற கிளியானது கோவிந்தா கோவிந்தா என்றே அழைக்கின்றது.. அவனைச் சேராத சோகத்தில் இவள் அதற்கு உண்ண உணவு கொடுக்காமல் தன்னைத் தானே வருத்தினாலும் அப்பொழுதும் அந்த உயிர் உலகளந்தானையே கூவி அழைக்கின்றது..(பசி வந்தால் பத்தும் பறந்து போகும் என்பார்கள் ஆனால் பசியிலும் அது உலகளந்தானைத் தான் எண்ணுகின்றது ..) இவள் இப்படித் தன்னைத்தானே வருத்தி இவளுக்கு ஏதேனும் ஆகிவிட்டால் இவளை கண்ணனிடம் சேர்க்காத பாவம் சுற்றி உள்ளவர்களுக்குத் தானே.. இப்பூவுலகில்அப்படி ஒரு கெட்ட பெயர் எடுத்து பழி வந்து சேருமுன் , அதன் பொருட்டு தலை கவிழாமல் இருக்க வேண்டுமெனில்


துவாரகை 

உயர்ந்த தூண்களும் முகப்புகளும் கொண்ட மாடங்கள் கொண்ட துவராபதிக்கே இவளை அழைத்துச் சென்று அப்படியேனும் தப்புவியுங்கள்..

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!