Monday 16 January 2017

132.கொம்மை முலைக ளிடர்தீரக்

132.கொம்மை முலைக ளிடர்தீரக் 
பாடல் :132
கொம்மை முலைக ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தா னேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

விளக்கம் : 
கொம்மை முலைகள் இடர் தீரக் - திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீரக்
கோவிந்தற்கு ஓர் குற்று ஏவல் - கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவந்தான் என் - இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்யும் தவம் தான் எதற்கு ?
செம்மை உடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் - செம்மை உடைய அவனது திருமார்பில் எனை ஏற்றுக் கொண்டான் எனில் நல்லது
ஒரு ஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி  - ஒரு நாளேனும் உண்மை சொல்லி என் முகம் நோக்கி
விடை தான் தருமேல் மிக நன்றே - எனக்கு ஒரு விடை தான் தந்தால் மிக நன்றே

திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர கோவிந்தனுக்கு ஓர் சிறு தொண்டு இந்தப் பிறவியில் செய்யாமல் இனி வேறொரு பிறவியில் செய்ய அதுவரை தவம் செய்ய வேண்டுமெனில் அப்படி ஒரு தவம் எதற்கு ?

 அவனுடைய சிவந்த  திருமார்பில் எனைச் சேர்த்து அணைத்து ஏற்றுக் கொண்டால் சரி. அல்லது ஒரு நாளேனும்  உண்மை சொல்லி ,என் முகம் நோக்கி விடை தருவான் எனில் மிக நல்லது..

Image result for arts of shanmugavel
ஓவியம் சண்முகவேல் 

காதலித்தாயிற்று . காதலைச் சொல்லியும் ஆயிற்று. ஆனால் அங்கிருந்து பதில் வரவில்லை. என்ன செய்யணும் அவன்..அந்தத் திருமார்போட சேர்த்துக்கனும். அல்லது மெல்ல தனது விரல்களால் என் முகத்தை அவனை நோக்கி எழுப்பனும். முகத்துக்கு நேராகச் சொல்லிடணும் உண்மையை.. உண்டு /இல்லை .பிடிக்குமா பிடிக்காதா..ஏற்றுக் கொள்வானா மாட்டானா..எதுவாக இருந்தாலும் பளிச்சுன்னு போட்டு உடை. (உண்மையை ஏற்கத் துணிந்தாளோ .. அதையும் அவன் அணைத்துச் சொல்லும் சுகத்தில் கேட்க விழைகிறாளோ ..இல்லைன்னு கூடச் சொல்லு ஆனா அதை என் முகம் பார்த்துச் சொல் பார்ப்போம் ..இவள் முகம் பார்த்து ஒருவேளை மனம் இரங்கி இளகிவிடக் கூடும் என்ற நப்பாசையையும் இதிலே .காண்கிறேன்..நம்பிக்கை..அதானே சார் எல்லாம் 

No comments:

Post a Comment

மறுமொழி இடுக!